Thursday, July 14, 2011

இது உங்கள் இடம்

நிதி போதுமா... இன்னும் வேண்டுமா? வி.எஸ்.மோகன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: நடந்த முடிந்த தமிழக தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாத நிலை, தி.மு.க.,வுக்கு ஏன் ஏற்பட்டது என்பது, இப்போது மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் நேரத்தில், ஆளும் கட்சியின் ஊழல் குறித்து விலாவாரியாக புகார் வெளியானது அனைவரும் அறிந்ததே. ஊழல் எந்த அளவுக்கு நடந்துள்ளது என்பதை அறியாதவர், இன்று புரிந்து கொண்டிருப்பர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தான், கடந்த தி.மு.க., அரசின் பெயரை கெடுத்தது. இப்போது தி.மு.க.,வின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதில் அகப்பட்டவர்களின் மானம், மரியாதை, தண்ணீரில் கரையும் அஸ்தியைப் போல காணாமல் போய் விட்டது. முதலில் ராஜா, அடுத்து கனிமொழி. இருவரும், தற்போது திகார் சிறையில். இதை அறிந்த பொது ஜனம், இப்படியும் இருக்கின்றனரே எனக் கூற ஆரம்பித்து விட்டனர். இப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியும், அதே ஊழலில் சிக்கி, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரின் வரவை, திகார் சிறை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தயாநிதி அகப்பட, மற்றொரு பக்கம், கலாநிதி மீது, நித்யானந்தா ஆசிரமம், புகார் மேல் புகார் கூறி இருப்பதும், முன்னாள் முதல்வரின் குடும்ப மானம் காற்றில் பறக்க ஆரம்பித்துவிட்டது. நிதியை தங்கள் பெயரிலேயே வைத்துக் கொண்டு, கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையே, இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது. இன்னும் எத்தனை நிதிகள் மாட்டப் போகின்றனரோ? தயவு செய்து சிந்தியுங்கள்! வே.முத்துக்குமாரசாமி, சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: இரண்டு போலீஸ் அதிகாரிகள், குடித்துவிட்டு, வீதியில் சண்டை போட்டுள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரி, குடிபோதையில் ஒரு பெண்ணை கடத்தினார். போதையில் இருந்த ஒரு தந்தை, தன் மகளை கெடுத்துள்ளார். இன்னும், இதுபோன்ற எத்தனையோ விஷயங்கள் நடந்து வருகின்றன. இதையெல்லாம் படிக்கும்போது, நமக்கு அருவருப்பாக உள்ளது. ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டிய காவல் துறையினரும், தெய்வமாக மதிக்கப்படக்கூடிய தந்தை குலமும், இப்படி கேவலமாக நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது யார்? மது வை தாராளமாக கிடைக்கச் செய்து, மதுவிலக்கை ரத்து செய்த நமது அரசு தானே இதற்கெல்லாம் காரணம்! தீயவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு, தன் வருமானத்திற்காக, தீயது என தெரிந்தும், "குடி குடியைக் கெடுக்கும்' என்ற அறிவிப்புடன், குடி பொருட்களை விற்பது, எவ்வளவு பெரிய தவறான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். மதுவை நாடுவோரின் குடும்பத்தினர், பிச்சைக் காரர்களாகவும், சமூகக் குற்றம் புரிபவர்களாகவும் மாற வேண்டிய சூழ்நிலை உருவாகி, நாடே கெட்டொழியும் நிலை ஏற்படும். இதையெல்லாம் சிந்தித்து, மதுக்கடைகளை அரசு படிப்படியாக மூடவும், போதை ஒழிப்புக்காக, தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். திருந்த வேண்டியது யார்? மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: "இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. மீடியாக்கள் நினைத்தால், யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதியும் விதிவிலக்கு அல்ல' என, கருணாநிதி விடுத்திருக்கும் ஸ்டேட்மென்ட், அவரது மன உளைச்சலின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே தெரிகிறது. பத்திரிகைகள் மீது பாயும் கருணாநிதி, ஊழலை மட்டும் மறைக்க முயற்சிப்பது தர்மமா? ஏற்கனவே, "பத்திரிகைகள் எங்களது ஆட்சி பற்றி குறைகள் சொல்லி, அவை நீதிபதிகளாகவும் தீர்ப்பு சொல்லி விடுகின்றன' என, மன்மோகன்சிங் மனம் நொந்து சொன்னது, நினைவுக்கு வருகிறது. எமர்ஜென்சியின் போது, பத்திரிகை சுதந்திரத்துக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதித்தார் இந்திரா; ஆனால், பத்திரிகைகள் இதற்காக பயப்படவில்லை. ஒரு சுதந்திரப் போராட்டதையே நடத்தின. அதன் பயனாக, லோக்சபா தேர்தலில், இந்திராவின் காங்கிரஸ் படுதோல்வி கண்டது. பின்பு, போபர்ஸ் ஊழலை பகிரங்கப்படுத்தியது, பத்திரிகைகள் தான். ஜனநாயகத்தை காக்க வேண்டியது பத்திரிகை களின் கடமை. ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது பத்திரிகைகளின் குற்றமல்ல. அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பத்திரிகைகள், சிவபெருமானை எதிர்த்த நக்கீரன் போல், அஞ்சாமல் செயல்படுகின்றன. திருந்த வேண்டியது பத்திரிகைகள் அல்ல; அரசியல்வாதிகள்! இரண்டு ரூபாய் தருவதே இல்லை...: ஆர்.டி.கோவிந்தன், கொடைக்கானலிலிருந்து எழுதுகிறார்: சில்லறை பஞ்சத்தால், ஏழை, எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வருகின்றனர். இப்போது, ஒரு பைசா முதல், 25 காசு வரை புழக்கத்தில் இல்லை. 50 காசு நாணயமும் ஒழிந்து வருகிறது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களும் குறைந்து வருகின்றன. தற்போது, 10, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான், அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. கொடைக்கானல் மலை பஸ்களில், சில்லறை தட்டுப்பாடு மிகவும் அதிகம். கொடைக்கானல் - பூம்பாறை பஸ் கட்டணம், எட்டு ரூபாய். பயணிகள் பத்து ரூபாய் நோட்டு கொடுத்தால், மீதி இரண்டு ரூபாயை நடத்துனர் கொடுப்பதே இல்லை. கொடைக்கானல், பூம்பாறை, கவுஞ்சி, கிளாவரை என்ற ஊர்கள் வரை, தினமும், 10 - 12 அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் ஓடுகின்றன. ஆனால், மீதி சில்லறை கொடுப்பதே இல்லை. கொடைக்கானல் மலை மேல் செல்லும் எந்த பஸ்களிலும், சில்லறை கொடுப்பதே இல்லை. பூம்பாறை - வத்தலக்குண்டு பஸ் கட்டணம், 28 ரூபாய்; ஆனால், 30 ரூபாய் கொடுத்தால், இரண்டு ரூபாய் கொடுப்பதே இல்லை. ஒரு பஸ், வத்தலக்குண்டு - பூம்பாறைக்கு, இரண்டு முறை வந்து செல்கிறது. ஒரு முறைக்கு இந்த பஸ்சில், 80 முதல், 100 பேர் வரை, பயணிக்கின்றனர். மீதி சில்லறை கொடுக்காததன் மூலம், இந்த பஸ் நடத்துனருக்கு, தினமும், 500 ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. கடைகளிலும் சில்லறை கிடைப்பதில்லை; பஸ்களிலும் சில்லறை கிடைப்பதில்லை. நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது; எல்லா வகையிலும் கொள்ளை நடக்கிறது. இது ஒரு புதிய கலாசாரம்.

அழகுக்கு அழகு சேர்ப்பதை அலட்சியப்படுத்தாதீர்:

ஆண்களையும், பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதில், தலைமுடிக்கு முக்கிய பங்கு உண்டு. தலைமுடி, பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை. ஒவ்வொரு பெண்ணுக்கும், அவரவர் தலைமுடியை, நீளமாகவும், அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும், வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக, சந்தைக்கு வரும் புதுப்புது பொருட்களை வாங்கி பயன்படுத்துவர். அவற்றை பயன்படுத்துவது தவறல்ல. அதற்கு முன், நம் தலைமுடிக்கும், தோலுக்கும் அவை ஏற்றதாக இருக்குமா என்பதை பரிசோதிக்க வேண்டும். சிலருக்கு, தலை எண்ணெய் பசை கொண்டதாகவும், முடி உலர்ந்தும் இருக்கும். சிலருக்கு எண்ணெய் பசை கொண்ட முடியும், உலர்ந்த தலையும் இருக்கும். இவற்றிற்கு தகுந்தாற்போல், பொருட்களை பயன்படுத்த வேண்டும். முடியை பராமரிக்க, "ஷாம்பூ' மற்றும் "கண்டிஷனர்' பயன்படுத்தலாம். சுருட்டை முடி மற்றும் உலர்ந்த முடிக்கும், "கண்டிஷனர்' உபயோகிக்கலாம். மாதத்திற்கு, ஒன்று அல்லது இரண்டு முறை கண்டிஷனர் போடுங்கள். முட்டையின் வெள்ளைப் பகுதியையும் பயன்படுத்தலாம்.தலைக்கு குளிக்கும் போது, ஷாம்பூவில் கொஞ்சம் தண்ணீர் கலந்து, தலையில் நன்கு மசாஜ் செய்து, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட வேண்டும். இறுதியாக, கண்டிஷனரை தடவி சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக கண்டிஷனரை, முடியின் வேர் காலில் தடவவே கூடாது. தடவிய பின் நீண்ட நேரமும் தேய்க்கக்கூடாது. முடி கொட்டும் பிரச்னை அதிகம் இருந்தால், தலைமுடி சிகிச்சை நிபுணரிடம் செல்வது நல்லது. மேலும், மருத்துவரின் ஆலோசனைப்படி, "தைராய்டு' பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.­­ஆரோக்கியமான தலைமுடிக்கு என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று பார்ப்போம்: நீங்கள் போதுமான அளவு புரத உணவை சாப்பிட்டாலே, முடி கொட்டுவதை தவிர்க்கலாம். மேலும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் முழுவதும், ஆக்சிஜன் சென்று, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். நல்ல பளபளப்பான, ஆரோக்கியமான முடிக்கு, ரத்த ஓட்டம் நன்றாக இருப்பது அவசியம்.நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ள, காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் கொட்டை வகைகளை சாப்பிட வேண்டும்.வைட்டமின் "ஏ' மற்றும் பி-காம்ப்ளக்ஸ், முடிக்கு மிகவும் நல்லது. பையோடின், வைட்டமின் "பி7' போன்றவை முடியை வலுப்படுத்த உதவும்.

தியான பீடம் மீதான தாக்குதல் மத ரீதியானது: நித்யானந்தா பேட்டி

சென்னை: ""நில அபகரிப்பில் ஈடுபடும் நோக்கில், "மார்பிங்' முறை வீடியோவை ஒளிபரப்பி, என் மீது, சன்,"டிவி'யினர் பழி சுமத்தினர். அவர்கள் ராட்சதர்கள். தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதல், தனிப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். ராட்சதர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, நித்யானந்தா கூறினார். நித்யானந்தா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சன், "டிவி'யில் வெளியான வீடியோ காட்சிகளில் இருப்பது நான் அல்ல. அது உண்மையானது அல்ல. முற்றிலும், "மார்பிங்' முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் தான். தினகரன் மதுரை அலுவலக எரிப்பு சம்பவத்தில், சன், "டிவி' எடுத்த காட்சிகள் கொண்ட வீடியோவை சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த வீடியோவையே, கோர்ட் தூக்கி வீசிவிட்டது. தயாரித்ததும், ஒளிபரப்பியதும் தான் குற்றம். இது தவிர, எந்த குற்றமும் அதில் இல்லை. அது ஒரு சதி வேலைதான். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அதிலிருந்து தப்பிக்க, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களை திசை திரும்பும் வகையில், மீடியாக்களை ஆயுதமாக பயன்படுத்தி, என் மீது பழியைச் சுமத்தினர். அந்த நேரத்தில், மிகவும் சமூகப் பொறுப்போடு, ஆழ்ந்த, தெளிந்த நிலையில், "தினமலர்' போன்ற நாளிதழ்கள், "டிவி'க்கள் செயல்பட்டன. பழித்தவர்களைப் பார்த்து, சில, "டிவி'க்கள் தங்கள், "ரேட்டிங்'கை கூட்டும் விதமாக செயல்பட்டன. அவ்வாறு பழித்தவர்கள் மீதும் தவறில்லை. அழிக்க நினைத்தவர்கள் சன், "டிவி' ராட்சதர்கள். வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என, ஐகோர்ட் தடை போட்டும், அதன் பெஞ்ச் அதை உறுதி செய்தும், அதைப் பற்றி கவலைப்படாமல், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். வீடியோ காட்சிகளை வெப்சைட் மூலம் விற்று, பிழைப்பு நடத்துகின்றனர். ஊடகங்களுக்கு இருக்கும் மரியாதையை அழிக்கின்ற இவர்கள், மீடியாக்கள் அல்ல. வீடியோவை வெளியிடாமல் இருக்க, சன், "டிவி' தரப்பில் 100 கோடி ரூபாய் கேட்டனர். பின், 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். வார இதழ் ஒன்றின் மீடியேட்டராக சுரேஷ் வந்து மிரட்டினார். சன், "டிவி' சக்சேனாவின் சார்பில், அவரது உதவியாளர் அய்யப்பனும் பணம் கேட்டு மிரட்டினார்; சக்சேனாவும் போனில் பேசினார். என் ஆசிரம நிர்வாகிகள் அதற்கு அடிபணியாததால், "மார்பிங்' முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டனர். அதன் பின்பும் என் பக்தர்களை மிரட்டி, பணம் பிடுங்கிக் கொண்டனர். அப்போது, தியான பீட நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர்; புகார்கள் ஏற்கப்படவில்லை. தமிழகத்தில் 120 தியான பீடங்களை ரவுடிகள், கூலிப்படையினரை வைத்து, அடித்து நொறுக்கினர். அங்குள்ள இந்து விக்ரகங்களை நொறுக்கினர். இது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். அமெரிக்காவில் உள்ள,"இந்து பெடரேஷன்' வீடியோ காட்சிகளை, மத அமைப்புகளுக்கான கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இதை ஆய்வு செய்த கூட்டமைப்பு, வீடியோ காட்சிகள், உயர்தர யுக்திகள் கையாண்டு, "மார்பிங்' முறையில், சித்தரிக்கப்பட்ட காட்சிகள் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், கூட்டமைப்பின் மூத்த வழக்கறிஞர்,"இந்த புகார்கள் மீதான குற்றப்பத்திரிகை நகல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 17 இடங்களில் பெண் சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர். ஏழு இடங்களில் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எங்கள் ஆசிரமத்தில் மூன்று சன்யாசிகளை ஒரு அறையில் வைத்து பூட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மற்றொரு புறமாக வந்த பக்தர்கள், கதவை உடைத்து அவர்களை மீட்டுள்ளனர். பெங்களூரில் நடந்த சம்பவத்திற்கு, சென்னை, எழும்பூர் போலீஸ் நிலையத்தில், என் மீது எப்.ஐ.ஆர்., போட்டனர். சம்பந்தப்பட்டவர் பெயர் இல்லாமல் போடப்பட்ட இந்தியாவின் முதல் எப்.ஐ.ஆர்., அதுவாகத் தான் இருக்கும். எங்களிடம் பலவற்றை பறிக்க முயற்சி நடந்தது. நாங்கள் பறி கொடுக்கவில்லை. நீதித்துறை மீதும், தமிழக முதல்வர் மீதும், பத்திரிகைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆளும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்பேன். அழைப்பு வந்தால் சூழ்நிலைகளைப் பார்த்து முடிவு செய்வேன். முதல்வர் மீது முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு நித்யானந்தா கூறினார். நாய் கடித்தால்...? : ஆசிரம், தியான பீடம் மீதான தாக்குதல் குறித்து குறிப்பிட்ட நித்யானந்தா, "என் ஆசிரமம், தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதலால், என் பக்தர்கள் எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருப்பர். அவர்கள் உங்கள் சிலைகளை ஆசிரமம் முன் வைத்து, செருப்பால் அடிக்க வேண்டும் என்று துடித்தனர். நான் தான், "நாய் கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது என்று, அவர்களை சமாதானப்படுத்தினேன்' என்றார். கண்டுகொள்ளாத மாஜி முதல்வர்? : அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் குறித்து நித்யானந்தா கூறியதாவது: கடந்த ஆண்டு டிச.,29ல், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். தியான பீடங்கள் மீதான தாக்குதல் குறித்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், உணர்வளவில் மிகவும் காயப்பட்டு, தமிழக மக்கள் இழந்த மத சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத் தர வேண்டுமென, 60 ஆயிரம் பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன், நீதிகேட்டு சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. பின், தேர்தல் பிரசாரத்தின் போது,"நான் ஆன்மிகவாதிகளுக்கு எதிரி அல்ல. நடந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை' என்று பேசியுள்ளார். இவ்வாறு நித்யானந்தா கூறினார். ரூ.35 கோடி கேட்டு மிரட்டிய பிரசன்னா? : நித்யானந்தா தனது பேட்டியின் இடையே பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக, ஆடியோ உரையாடல் ஒன்றை நிருபர்களுக்கு போட்டுக் காட்டினார். அதில், லெனின் கருப்பனின் உதவியாளர் பிரசன்னா, ஆசிரம நிர்வாகியுடன் போனில் பேசுகிறார். "டேபிளில் 25 கோடி ரூபாயை தூக்கிப் போட்டால் போதும். அதில் எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விடுகிறேன். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து 35 கோடியைக் கொடுங்கள்' என்கிற ரீதியில் பேச்சு தொடர்கிறது. ஒன்பதா...? : பேட்டியின் போது, வார இதழ் ஒன்றின் நிருபர், நித்யானந்தரைப் பார்த்து, "ஒன்பது' என்று கூறி, சைகை காட்டினார். இதைப் பார்த்து சிரித்த நித்யானந்தா, "ஆம்' என்று கூறிவிட்டு தொடர்ந்தார்."ஆன்மிகத்தில் இருக்கும் எனக்கு பேச வாயும், ஆசிர்வதிக்க கையும் செயல்பட்டால் போதும். நான் ஆண், பெண், அலி, குழந்தை நிலைகளைக் கடந்து, ஆன்மிக மார்க்கத்தில் வாழ்பவன். அதனால் அவர், "ஒன்பது' என்று சொன்னதால் வருத்தப்படவில்லை. ஆனால், அவர், பாலியல் சிறுபான்மை இனத்தை(அரவாணிகளை) இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது' என்றார். நான் அவள் இல்லை...! : "வீடியோவில் இருப்பது நான் இல்லை' என நித்யானந்தா கூறியதும், "அதில் இருப்பது ரஞ்சிதாவும் இல்லையா?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஞ்சிதா, "வீடியோ காட்சியில் உள்ளது நான் இல்லை என்று, திரும்பத் திரும்ப பலமுறை கூறிவிட்டேன். எத்தனை முறைதான் இதை கேட்பீர்கள். கும்பிடுகிற கடவுளுடன், என்னைச் சேர்த்து கொச்சைப்படுத்தினால் எனக்கு எப்படிப்பட்ட நிலை இருக்கும்' என்றார்.

அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார்: வருமான வரித்துறை அதிகாரிகள் வேதனை

அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார்: வருமான வரித்துறை அதிகாரிகள் வேதனை " மயக்க மருந்தோ அல்லது தூக்க மத்திரையோ கொடுத்து, அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார்" என வருமானவரித்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் விரும்பினால், தமிழகத்தில் உள்ள வருமான வரித் துறை, மாற்றி அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பதவி விலக வற்புறுத்த வேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன் சிங், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியும். ஊழல் செய்தவர்களிடம் இருந்து, பணத்தை மீட்க முடியும்' என்ற கருத்து வருமானவரித்துறையிலேயே பரவலாக எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் பணம் புரளும், தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து, தொலை தொடர்பு, தகவல் ஒலிபரப்பு, உரம் ஆகிய இலாகாக்களை வெற்றிகரமாக தி.மு.க., கேட்டுப் பெற்றது. பணம் சம்பாதிப்பதற்கும், அரசு கருவூலத்தை கொள்ளையடிப்பதற்கும் தான், இதுபோன்ற பணம் கொழிக்கும் இலாகாக்களை அவர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதைப் பற்றி, அவர்கள் கவலைப்படவில்லை என்றும், வருமானவரித்துறை முக்கிய அதிகாரிகள் கின்றனர். நிதித் துறையும் எப்போதும், தி.மு.க.,வின் விருப்ப பட்டியலில் இருக்கும். "எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வையும், அதன் நிர்வாகிகளையும் பழி வாங்குவதற்காகவே, நிதித் துறையை தி.மு.க.,வினர், கேட்டுப் பெறுகின்றனர் ' என, பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், முறையற்ற வழிகளில் சம்பாதிக்கும் பணத்தை, முறைப்படுத்துவதற்காகவும், கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, அதில் குளறுபடி எதுவும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்காகவுமே, நிதித் துறையை அவர்கள் கேட்டுப் பெறுகின்றனர் என்பது, சமீப கால தி.மு.க., நடவடிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது, எனவும், வருமானவரித்துறையின் முக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். வருமானவரித்துறையின் முக்கிய அதிகாரிகள் கூறியதாவது: தற்போது மத்திய நிதித் துறையின், முக்கிய பொறுப்பைப் பெற்றுள்ள தி.மு.க., அமைச்சர், உண்மையில், தி.மு.க., மற்றும் அந்த கட்சியை சேர்ந்தவர்களின் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றுவதற்கான அமைச்சராக செயல்படுகிறார் என, சி.பி.ஐ.,யே சந்தேகப்படுகிறது; இந்த சந்தேகத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. அமைச்சர் மூலம், தமிழகத்தில் நியமிக்கப்படும் வருமானவரித்துறை அதிகாரிகள், தி.மு.க., வினர் மற்றும் அவர்களின் நிதி மோசடி நடவடிக்கைகளை பாதுகாக்கும் பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலை, ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில், வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு அவற்றை அனுப்பியிருந்தது. மாஜி மத்திய அமைச்சர் தயாநிதி பற்றி விசாரணை நடத்திய வருமானவரித்துறை இன்ஸ்பெக்டர், அவருக்கு விருப்பம் இல்லாத தொலை தூர ஊருக்கு மாற்றிவிடுவோம் என்ற மிரட்டலுக்கு ஆளானார். தன் பணியை நேர்மையாக செய்ததற்காக, அந்த அதிகாரிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. தேர்தலின் போது, நேர்மையாக கடைமைச் செய்த அதிகாரிகள் தொந்தரவுக்கு ஆளாயினர். அவர்கள், வட கிழக்கு மாநிலங்களுக்கும், மிகவும் தொலைவில் உள்ள ஊர்களுக்கும் தூக்கியடிக்கப்பட்டனர். மத்திய நிதி பொறுப்பில் உள்ள அமைச்சருக்கு பணியாத அதிகாரிகள், இந்த நிலைமைக்கு ஆளாயினர். நிர்வாக ரீதியான காரணத்தை காட்டி, அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு, டில்லியில் உள்ள அந்த அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. பொதுவாக, வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, கடன் பெறுவர். இந்த நிதிப் பரிமாற்றம், நேர்மையாக நடந்துள்ளதா என, துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது வழக்கம். ஆனால், கலைஞர் "டிவி'க்கு, வந்த 200 கோடி ரூபாய் குறித்து, மத்தியில் உள்ள அந்த அமைச்சரின் தலையீட்டால், ஒருபோதும் விசாரணை நடத்தப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தலையிட்ட பின்பே, விசாரணை நடத்தப்பட்டது. கலைஞர் "டிவி' யின் நிதிப் பரிமாற்றம் சரியாக இருந்தது என்ற ரீதியில் விசாரணை நடத்தி, நற்சான்றிதழ் அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு, அந்த அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு நற்சான்றிதழ் கிடைத்து விட்டால், சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக, அதை, சம்பந்தபட்ட "டிவி'சேனல் பயன்படுத்தலாம் என்பது தான் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டு விட்டது. இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கிறது என, சம்பந்தபட்ட அமைச்சர் எச்சரிக்கப்பட்டார். கறுப்பு பணத்தை பாதுகாப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டவர், கடந்த ஏழு ஆண்டு பதவி காலத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ளார் என குற்றம்சாட்டப்படுகிறது. அப்படியென்றால், மற்ற இலகாக்களை வகிக்கும் அமைச்சர்கள் எந்த அளவுக்கு சம்பாதித்திருப்பர்? இப்படிப்பட்ட அமைச்சர்களை வைத்துக் கொண்டிருக்கும் பிரதமர், கறுப்பு பணத்தை ஒழிக்க எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? மத்திய அமைச்சரவையின் முக்கியமான துறையை, தி.மு.க., வைத்துக்கொண்டிருக்கும்போது, "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த விசாரணையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க பிரிவு இயக்குனரகம் ஆகியவற்றுடன் வருமான வரித் துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு, எப்படி நேர்மையான விசாரணை நடத்த முடியும்? "2ஜி' ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொள்ளவில்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. ஆனால், கறுப்பு பணத்தை பாதுகாப்பதில் ஆர்வமாக உள்ள அமைச்சர் இருக்கிறார் என்பதையும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் இருக்கின்றனர் என்பதையும், கோர்ட்டுக்கு யார் தெரிவிப்பது எனத் தெரியவில்லை. "வருமான வரித் துறை தூங்குகிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் கூறியபோது, அத்துறையின் நேர்மையான அதிகாரிகள் மிகவும் வருத்தப்பட்டோம். "ஆனால், எங்களுக்கு மயக்க மருந்தோ அல்லது தூக்க மத்திரையோ கொடுத்து, அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார் என்பதை நாங்கள் எப்படி கூற முடியும்?' என்ற கவலையில் உள்ளோம் என்கின்றனர், வருமானவரித்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள். அமைச்சர்களிடம், "நல்ல' பெயர் எடுத்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு, நல்ல பதவிகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் சேவைகள், "2ஜி' ஊழலில் தொடர்புடையவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் விரும்பினால், தமிழகத்தில் உள்ள வருமான வரித் துறை, மாற்றி அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் அல்லது அவர்களை பிரதமர் மன்மோகன் சிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியும். ஊழல் செய்தவர்களிடம் இருந்து, பணத்தை மீட்க முடியும் என, நேர்மையான வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செய்தி, சுப்ரீம் கோர்ட் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதே, நேர்மையான அதிகாரிகளின் விருப்பமாக உள்ளது. நேர்மையான ஐ.பி., அதிகாரிகள் இந்த விஷயத்தை டில்லி வரை கொண்டு செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். நமது சிறப்பு நிருபர்

Tuesday, July 12, 2011

பழசு இன்றும் புதுசு

திருச்சி மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன்... ''விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்​தானே..?'' - அந்த ஊரின் முக்கியப் பிரமுகர் பேசினார். ''சொல்லுங்க சார்...'' ''நான் சொன்ன ஆளை ரிலீஸ் பண்ணாம, கேஸ் புக் பண்ணிட்டீங்களாமே?'' ''சார்... அது...'' ''ம்... உங்களை முந்திரிக் காட்டு இன்வெஸ்டி​கேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணச் சொல்லிடவா?'' ''ஐயோ... முந்திரிக் காடா..? சார், நான் புள்ளை​குட்டிக்காரன் சார்!'' ஜெயங்கொண்டம் பகுதியில் ஒரு வீட்டு வாசலில் குழந்தை ஒன்று சாப்பிட மறுத்து அழுது​கொண்டு இருந்தது. அதன் பாட்டி, ''அழுகையை நிப்பாட்டிட்டுச் சாப்பிடறியா, இல்லே முந்திரிக் காட்டுல கொண்டுபோய் விட்டுறவா?'' என்று சொல்ல... குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு, மடமடவென்று சாப்பிட்டுவிட்டது! - இப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் 'முந்திரிக் காடு... முந்திரிக் காடு’ என்ற பெயரையே முணுமுணுக்கிறார்கள். அது என்ன முந்திரிக் காடு?! திருச்சி, தென் ஆற்காடு மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்கிறது வெள்ளாறு. இந்த ஆற்றின் ஒரு கரையின் நெடுகிலும் பல நூறு ஏக்கர் கரும்புத் தோட்டங்கள். மறு கரையின் நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் மண்டிக்கிடக்கிறது முந்திரிக் காடுகள். தப்பித் தவறி எவராவது அங்கு மாட்டிக்கொண்டால், லேசில் திரும்பி வர முடியாது. காரணம் - சிக்கலான பாதை அமைப்பு மட்டும் அல்ல... 'தனித் தமிழ்நாடு’ பிரிவினை கோரும் தீவிரவாத இயக்கத்தினர் ஆயுதப் புரட்சி செய்ய இதுவே சரியான இடம் என்று தேர்ந்தெடுத்து, இங்கே தங்கி இருப்பதுதான். ஒரு வருடத்துக்கு முன்பு இங்கு நடந்த தமாஷான சம்பவம்... வல்லம் கிராமத்தை ஒட்டிய முந்திரிக் காட்டில் தீவிரவாத இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ரகசியக் கூட்டம், 10-ம் தேதி அதிகாலை நடக்கப்​போவதாக சி.ஐ.டி. போலீஸுக்குத் தகவல் வந்தது. அந்தக் குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளன்றே இரவோடு இரவாகப் பெரிய போலீஸ் பட்டாளமே முந்திரிக் காட்டில் நுழைந்தது, அங்குலம் அங்குலமாக முன்னேறியது. ஒரு மரத்தடியில் வாழை இலைகளும், ஆட்டுக் கால்களும் கிடந்தன. அதை எண்ணிப் பார்க்கும்போது, இத்தனை பேர் ரகசியக் கூட்டத்தில் கலந்துகொண்டு விருந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டனர் என்பதை போலீஸாரால் யூகிக்க முடிந்தது. எவரையும் பிடிக்க முடியவில்லை. காரணம் - தீவிரவாதிகளின் ரகசிய பாஷையில், 10-ம் தேதி என்றால் 1-ம் தேதி என்று அர்த்தம் (இது மாறும்!). ''முந்திரிக் காட்டுக்குள்ளே ஏடா​கூடமாகப் போகாதீங்க... ஏன்னா, தீவிரவாத இயக்கங்களோட முன்னணித் தலைவர்கள் பலரை போலீஸ் பிடிச்சுட்டதால், பயங்கரக் கடுப்புல இருக்காங்க. ஒருவேளை, உங்களையும் பணயக் கைதியாகப் பிடிச்சுவெச்சுக்கிட்டு, அவங்களை விடுவிக்கச் சொன்னாலும் சொல்லலாம்!'' என்று நாம் முந்திரிக் காடுகளில் நுழையும் முன்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் நம்மை எச்சரித்தார்! தென் ஆற்காடு மாவட்ட எல்லையோர ஊரான பெண்ணாடத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவரது குடிசைக்கு நம்மை அழைத்தார். குடிசையில் நிறையப் பொருட்​கள் இல்லை. கம்யூனிஸ புத்தகங்கள் கட்டப்பட்ட ஒரு பண்டல் இருந்தது. அது குறித்து இளைஞரிடம் கேட்டோம். ''எங்க ஊர்ல நூத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் வேலை இல்லாம இருக்கோம். எங்க பகுதிக்குனு பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லை. அதனால், கூலி வேலைகள் பார்த்துத்தான் சாப்பிட வேண்டியிருக்கு. படித்துவிட்ட ஒரே காரணத்தால், உலக விஷயங்களைப்பத்தி நிறைய படிச்சுத் தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கு. அதனால், தோழர்கள்கிட்ட இருந்து புத்தகங்களை வாங்கிப் படிக்கிறோம். இப்படிப் படிக்கிறதால், எங்களை நக்ஸலைட்னு போலீஸார் முத்திரை குத்திடறாங்க. எங்க ஊர் இளைஞர்களுக்கு, பொண்ணு கொடுக்கக்கூட மத்த ஊர் ஆளுங்க தயங்கறாங்க. முந்திரிக் காடுகள்ல இருக்கிறவங்களைப்பத்தி போலீஸுக்கு உளவு வேலை செய்யணும்னு வற்புறுத்துறாங்க. தெரியாதுன்னா... மிரட்டறாங்க. இந்த நிலைமையில் நாங்க பொறியில் சிக்கிய எலியாத் தவிக்கிறோம்!'' என்றார். நமக்குக் கிடைத்த தகவலின்படி, சைக்கிளில் மட் கார்டு, பெல், பிரேக், டைனமோ இல்லாமல், எவராவது சைக்கிள் ஓட்டிச் சென்றால், அவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதை யூகித்துக்கொள்ளலாம் என்று ஒரு தகவல்! அப்படிப்பட்ட அடையாளத்​தோடு இரும்புலிக்குறிச்சி அருகே ஒருவரைப் பார்த்தோம். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் மசியவில்லை. பிறகு கொஞ்ச நேரம் கழித்து, ''அண்டர்கிரவுண்டில் இருக்கிறவங்களை நீங்க சந்திக்க விரும்புற விஷயம் குறித்து டி.சி. (அது என்னவென்றே புரியவில்லை!) கமிட்டி கூடி, முதல்ல விவாதிக்கும். அவங்க அனுமதிச்சா, நீங்க முந்திரிக் காடுகள்ல வந்து தோழர்களை சந்திக்க முடியும். அதற்குப் பொறுமை வேண்டும். இன்னொரு முறை இங்கே வந்தா, அதற்கு ஏற்பாடு செய்வோம்!'' என்று சொல்லிவிட்டு, சைக்கிளை ஓட்டிக்கொண்டு போய்விட்டார். 'இப்படி அண்டர்​கிரவுண்டில் ஓர் இயக்கம் செயல்படுகிறதா?’ என்று நாம் ஆச்சர்யப்பட்டபோது, இன்னொரு தகவலை நம்முடன் வந்திருந்த நிருபர் சொன்னார். அதாவது போலீஸ் விசாரணை ஒன்றின்போது ஒரு தீவிரவாதியை நிருபர் சந்தித்தாராம். அப்போது, அந்தத் தீவிரவாதி சொன்ன தகவல் இது: ''தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்குப் பல கட்டத் தேர்வுகள் உண்டு. ஒன்று - உயரமான தென்னை மரத்து உச்சியில் ஏற்றிக் கையில் குடுவைத் தண்ணீர் மட்டும் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். குறைந்தபட்சம் மறு நாள் வரை அங்கேயே இருக்க வேண்டும். மற்றொன்று - சுடுகாட்டில் நடுராத்திரியில் ரகசியக் கூட்டத்துக்கு வரச் சொல்வார்கள். குடும்பப் பாசம் இருக்கிறதா என்பதைச் சோதிக்க, திடீரென்று அம்மா அப்பா யாராவது இறந்துவிட்டதாகத் தகவல் சொல்வார்கள். நம்முடைய ரியாக்ஷன்களைக் கவனிப்பார்கள். இதுபோல, குடி, பெண்கள் விஷயத்திலும் (வெளிப்படையாகச் சொல்ல முடியாத) பல டெஸ்ட்டுகள் உண்டு. இவற்றில் எல்லாம் தேற ஐந்து வருடங்கள் பிடிக்கும். அதன் பிறகுதான் முழுமை பெற்ற தீவிரவாதியாகக் கருதிப் பொறுப்பைத் தருவார்கள்!’ என்று சொன்னாராம். தனித் தமிழ்நாடு பிரிவினைவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்பவர் பெயர் தினேஷ். இவர் மாஜி இலங்கைப் போராளி. இதற்கு முன்பு நடந்த வெடிகுண்டு சம்பவங்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியது இவர்தான். இவரிடம் இருந்து ஆயுதங்களை விலைக்கு வாங்கி, அதைக்கொண்டு தமிழகத்தில் ஆயுதப் புரட்சி செய்வதே பிரிவினைவாதிகளின் எதிர்காலத் திட்டம் என்று கூறப்படுகிறது. இதன் பொருட்டு, 'தனித் தமிழ்நாடு கோரும் பிரிவினைவாதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த வகையில் விரைவில் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் உண்டு! - ஆர்.பாலகிருஷ்ணன் தமிழரசன் இன்னும் சாகவில்லை..?! பொன்பரப்பி வங்கிக் கொள்ளை சம்பவத்தின்போது தமிழரசன் இறந்துவிட்டதாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டது அல்லவா? ஆனால், முந்திரிக் காடுகளில் தமிழரசன் நடமாட்டம் இருப்பதாகக் கிராமவாசிகள் மத்தியில் ஒரே பேச்சு! தென் ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் மதகளிமாணிக்கம் கிராமத்தில் வசிக்கும் தமிழரசனின் தாயார் புதூசம்மாளிடம் பேசினோம்: ''அன்னிக்கு ஜெயங்கொண்டம் ஆஸ்பத்திரிக்குப் பதறி ஓடினேன். கூறு போட்ட உடம்பு ஒண்ணைக் காட்டினாங்க. உருவமே தெரியலை. கை, கால் சூம்பிப் போயிருந்துச்சு. என் பையனுக்கு அப்படி இருக்காது. அதுவும், சின்னப் புள்ளைல மஞ்சக் காமாலை வந்தப்போ, கை புஜத்தில் அறுத்து மருந்து போட்ட வடு இருக்கும்... முகத்துலயும் இன்னொரு வடு இருக்குமேனு தேடினேன். ஒண்ணுமே இல்லை. 'இது என் பிள்ளை இல்லையே!’னு சொன்னேன். போலீஸ்காரங்க என்னைத் தனியா அழைச்சுட்டுப் போய், 'இதான் என் பையன்’னு சொல்லச் சொன்னாங்க. என்னோட உறவுக்காரங்களும் 'கிழவி, உனக்கு வயசாச்சு, வாயை மூடு, இதான் நம்ம தமிழரசன்!’னாங்க. அந்தச் சூழ்நிலையில் என்னால ஒண்ணுமே சொல்ல முடியலை. ஆனா, இப்போதைக்கு என் பையன் உயிரோட இருக்கிறதா, எல்லாரும் பேசிக்கிறாங்க. எப்படி இருந்தாலும், என் பையன் திரும்பி வருவான்!'' என்றார். திருச்சி சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் நம்மிடம், ''தமிழரசன் இறந்தது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால், ஒரு சில தினப் பத்திரிகைகள், தமிழரசன் உயிரோடு இருப்பதாகக் கதை விட்டிருக்கின்றன. அப்படி எழுதும் நிருபர்களைப் பிடித்து, நக்ஸலைட் கேஸில் போட்டால்தான் இப்படிப்பட்ட பொய்ச் செய்திகளை எழுத மாட்டார்கள்!'' என்று எரிச்சலோடு சொன்னார்.

மெட்ரிகுலேஷன் பாடத்தில் ஆயிரம் குறைகளைக் காட்டவா?''

மெட்ரிகுலேஷன் பாடத்தில் ஆயிரம் குறைகளைக் காட்டவா?'' கல்வியாளர் வசந்தி தேவி சுரீர்... ''ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களைக் கேவலப்படுத்தி​விட்​டது தமிழக அரசின் சமச்சீர்க் கல்விக்கான ஆய்வுக் குழு!'' - ஆதங்கமும், வேதனையும் ஒருசேரப் பொங்குகிறது மூத்த கல்வியாளரும் முன்னாள் துணை வேந்தருமான வசந்திதேவியின் குரலில்! சமச்சீர்க் கல்வி தொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் அனல் பறக்கும் நேரத்தில், அவரை சந்தித்தோம். ''நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டு இருக்கும்போதே, புத்தகங்களை அச்சடித்து நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசு. இப்படி ஓர் அறிக்கையை அரசு நியமித்த குழுவினர் கொடுப்பார்கள் என்று நீதிமன்றமே எதிர்பார்க்கவில்லை. அரசு மீது நம்பிக்கைவைத்து, நீதிமன்றம் அரசையே ஒரு குழு அமைக்கச் சொன்னது. ஆனால், சமச்சீர்க் கல்வித் திட்டத்தை எதிர்த்தவர்களைக்கொண்டே, குழு அமைத்தது அரசு. அதனால்தான், இப்படி ஒரு மோசமான அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்து இருக்கிறார்கள். 'இந்தப் பாடத் திட்டத்தைக் கற்றுக்கொள்ள முடியாது. நகர்ப்புற, வசதியான மாணவர்களால் மட்டுமே முடியும்...’ என்றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்கள். இன்று குறைந்த வசதிகளை மட்டுமேகொண்டு, 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் கிராமப்புறப் பள்ளிகளை நான் காட்டவா? மொத்தத்தில் இது பாடத் திட்டம் தொடர்பான பிரச்னையே இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்கும் கும்பலுக்கும் - நியாயமான, சமச்சீரான கல்வி வேண்டும் என்பவர்களுக்குமான போராட்டம் என்பதுதான் உண்மை! மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டம், 'ஒவ்வொரு பள்ளியும் அருகில் இருக்கும் பகுதியைச் சேர்ந்த ஏழை, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்காக, பள்ளியில் 25 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்கிறது. இதைக் கடுமையாக எதிர்க்கின்றன மெட்ரிகுலேஷன் பள்ளிகள். சென்னையில் இருக்கிற ஒரு பள்ளி ஒருபடி மேலேபோய், மிகவும் கண்டனத்துக்குரிய சர்க்குலர் ஒன்றை பெற்றோருக்கு அனுப்பி இருக்கிறது. அதில், 'மத்திய அரசு சட்டத்தின்படி 25 சதவிகிதம், ஏழை, பாமரக் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு செய்தால், உங்கள் குழந்தைகளின் கல்வித் கற்கும் திறன் பாதிக்கும். அவர்களோடு இணைந்து உங்கள் குழந்தைகள் படித்தால், உங்கள் குழந்தைகள் பாழாகிவிடுவார்கள். தகுதியற்ற, ஒழுங்கீனமான குழந்தைகளை உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாகப் படிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், எங்கள் ஆசிரியர்களின் நேரமும் வீணாகிறது. எனவே, இந்த சட்டத்தை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளது. இந்தப் பள்ளியின் தாளாளரைத்தான் சமச்சீர்க் கல்வி ஆய்வு கமிட்டியில் தமிழக அரசு நியமித்து உள்ளது. இவர்களிடம் இருந்து நியாயமான அறிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்? முதலில், நீதிமன்றம் இந்தக் குழுவினரிடம் சமச்சீர்க் கல்வித் திட்டம் வேண்டுமா... வேண்டாமா? என்று கேட்கவில்லை. எந்தப் பாடத் திட்டம் தரமானது என்றுதான் கேட்டது. ஆனால் இவர்களாகவே, 'சமச்சீர் கல்வித் திட்டம் வேண்டாம்’ என்கிறார்கள். அதைச் சொல்லவேண்டியது நீதிமன்றம் மட்டுமே! தேசியக் கலைத் திட்டத்தில் உள்ள கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான குழுதான், தேசிய அளவில் பள்ளிக் கல்விக்கான பொதுவான வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறது. கேரளா மற்றும் இமாசலப் பிரதேசத்தில் இதன் அடிப்படையில் மிகத் தரமான கல்வித் திட்டத்தை போதிக்கிறார்கள். இந்தக் குழுவின் வழிகாட்டுதலைக்கொண்டு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அதில் உப்புச் சப்பு இல்லாத குறைகளைக் கண்டுபிடித்து உள்ளது அரசின் ஆய்வுக் குழு. மெட்ரி​குலேஷன் பாடத் திட்டத்தில் ஆயிரம் குறைகளையும் ஓட்டைகளையும் நான் கண்டுபிடித்து சுட்டிக் காட்டவா? 'சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம், குழந்தைகள் மீதான சுமையை அதிகப்படுத்துகிறது. வயதுக்குத் தகுந்த கல்வி இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளனர். மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் 'நீயா... நானா?’ என்ற போட்டியில் குழந்தைகள் மீது அதிகமான சுமையை சுமத்துகின்றன. எட்டாம் வகுப்பில் கற்க வேண்டிய கல்வியை, ஐந்தாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொடுப்பதுதான், தரமற்ற கல்வி; திணிக்கப்படுகிற கல்வி. நீங்கள்தான் வயதுக்குத் தகுந்த கல்வியைக் கொடுக்காமல் குழந்தைகளின் மூளைத் திறனை மழுங்கடிக்கிறீர்கள். பத்திரிகையாளர் சோ, 'சமச்சீர்க் கல்வித்திட்டத்தை மாட்டு வண்டியுடன் ஒப்பிட்டு’ எழுதி இருக்கிறார். அனைத்துத் துறை வல்லுநர்கள் இணைந்து உருவாக்கியதுதான் சமச்சீர்க் கல்வி. மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் சாய்ஸ் நிறைய உண்டு. அதனால், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், 'குறிப்பிட்ட பகுதியை மட்டும் படி’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதை மட்டுமே படித்து தேர்வு எழுதுகிறான் மாணவன். ஆனால், சமச்சீர்க் கல்வியில் சாய்ஸ் கிடையாது. முழுப் புத்தகத்தையும் படித்து மெத்த அறிவு பெறுகிறான் மாணவன். இப்போது சொல்லுங்கள், மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம், மாட்டு வண்டியா? சமச்சீர் கல்வி பாடத் திட்டம், மாட்டு வண்டியா?'' கேள்வியுடன் முடிக்கிறார் வசந்திதேவி. பதிலும் தீர்வும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ளது! - டி.எல்.சஞ்சீவிகுமார்

செங்கோட்டையனுக்கு செக் வைக்கிறாரா சசிகலா?

'வேளாண்மைத் துறையில் அறிவிக்கப்​படாத அமைச்​சராக செயல்படுபவர், சசிகலாவின் உறவினர் பொன்​னுச்சாமிதான். டிரான்ஸ்ஃபர் தொடங்கி, போஸ்ட்டிங் வரை எல்லாமே பொன்னுச்சாமியின் கண் அசைவில்​தான் நடக்கிறது’ என்று வேளாண்மைத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கசியவே... விசார​ணையில் இறங்கினோம். யார் இந்தப் பொன்னுச்சாமி? வேளாண்மை விதை சான்று இயக்குநர், வேளாண்​மைக் கூடுதல் இயக்குநர் - பணி மேலாண்மை, வேளாண்மைக் கூடுதல் இயக்குநர் - இயற்கை விவசாயம் என மூன்று பதவிகளை வகித்துக்கொண்டு இருக்கும் ஓர் அதிகாரி. இது எல்லாவற்றையும்விட, சசிகலாவின் சகோதரர் மனைவியான இளவரசிக்கு சொந்தக்காரர் என்பது இவரின் கூடுதல் தகுதி. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற விவசாயி, ''கடந்த வருடம் என்​னோட தோட்டத்துக்குப் போடுறதுக்கு, 'பாஸ்போ பேக்டீரியா’ உரத்தை விவசாய ஆபீஸில் இருந்து வாங்கினேன். அதைப் பிரித்தபோது, உள்ளே சாம்பல்தான் இருந்தது. கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு அதைப் பரிசோதனைக்கு அனுப்பினேன். 'அது உயிர் உரமே கிடையாது’ என ரிப்போர்ட் கொடுத்தார்கள். அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வேண்டப்பட்ட ஒரு நிறுவனம்தான், இப்படி லிக்னைட் பவுடருக்குப் பதிலாக சாம்பலை பாக்கெட் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தெரிய வந்தது. வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு நான் புகார் அனுப்பினேன். என்னுடைய புகாரை விசாரிக்க, திருச்சியில் வேளாண்​மைத் துறை இணை இயக்குநராக இருந்த பொன்னுச்​சாமியை நியமித்தார்கள். ஆனால், என்னிடம் பொன்னுச்சாமி உரிய விசாரணை நடத்தாமலேயே, 'எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது’ என சொல்லி​விட்டார். முன்னாள் அமைச்சர் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர், இந்த பொன்னுச்சாமி. மேலும் நேருவின் தம்பி ராமஜெயத்தின் தோட்டத்தை இவர்தான் கவனிக்கிறார் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறிய பிறகாவது நல்லது நடக்கும் என நினைத்தேன். ஆனால், இந்த ஆட்சியிலும் பொன்னுச்சாமியின் அதிகாரம் குறையவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரி வகித்து வந்த பொறுப்பை, பொன்னுச்சாமிக்குக் கொடுத்து விட்டார்கள். சசிகலா குடும்பத்தைப் பிடித்துப் பெரிய பதவிக்கு வந்துவிட்டார். வேளாண்மைத் துறையில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களைவிட, இந்த ஆட்சியில் அதிக ஊழல்கள் நடக்கப்போகின்றன. அதனால், உடனடியாக அந்த அதிகாரி மீது முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கேட்டுக்கொண்டார். வேளாண்மைத் துறை வட்டாரத்தில் பொன்னுச்சாமி​பற்றி விசாரித்தோம். ''சின்னம்மாவின் தயவில்தான் ஏ.டி-யாக இருந்தவருக்கு பதவி உயர்வு என்ற பெயரில் பல பொறுப்புகளைக் கொடுத்து இருக்கிறார்கள். வேளாண்மைத் துறையில் அனைத்தையும் முடிவெடுக்கும் அதிகாரம் இப்போது பொன்னுச்சாமி கையில்தான் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், தமிழக விவசாயி​களின் மேம்பாட்டுக்காக, உலக வங்கி கோடிக்கணக்கில் நிதி உதவி செய்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஆண்டு ஒன்றுக்கு 125 கோடி ஒதுக்குகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்துக்காக, 100 கோடி வழங்குகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்காக, 50 கோடி கொடுக்கிறது. எண்ணெய் வித்துகள் திட்டத்தில் 25 கோடியும், தேசியப் பருப்பு வகைகள் அபிவிருத்தித் திட்டத்துக்காக 15 கோடியும் ஆண்டுதோறும் கொடுக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக இப்படிக் கொடுத்த பணம் எல்லாம் எங்கே போனது? எல்லாம் வெறும் ரசீதுகளாக மட்டுமே கணக்குக் காட்டப்பட்டு ஃபைலில் தூங்குகிறது. இதைப்பற்றி விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட வேண்டும். பொன்னுச்சாமியை வைத்துக்கொண்டு, இந்த விசாரணையை முறையாக நடத்த முடியுமா? தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பொன்னுச்சாமியின் மகளின் திருமணம், திருச்சியில் கோலாகலமாக நடந்தது. அதற்குத் தலைமை தாங்கியதே முன்னாள் அமைச்சர் நேருதான்!'' என்று புகார் படித்தார்கள். சென்னை எழிலகத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் பொன்னுச்சாமியை சந்தித்தோம். ''சதிஷ்குமார் அனுப்பிய புகாரில் உண்மை கிடையாது. ஏற்கெனவே அதைப்பற்றி முழுமையான விசாரணை நடத்திவிட்டேன். முன்னாள் அமைச்சர் நேருவும் அவர் சகோதரர் ராமஜெயமும், நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு நண்பர்கள். ராமஜெயத்தின் தோட்டத்தை மாதிரிப் பண்ணையாக மாற்றி அமைக்கச் சொல்லிக் கேட்டார்கள், நானும் செய்து கொடுத்தேன். விதிகளை மீறி நான் எதுவுமே செய்யவில்லை. என் மகள் திருமணம் நடந்தபோது, நண்பர் என்ற முறையில் நேருவை அழைத்து இருந்தேன். உறவினர் என்ற முறையில், சசிகலாவையும் அழைத்து இருந்தேன். இரண்டு பேருமே திருமணத்துக்கு வந்தார்கள். இதை நான் எங்கேயும் மறைக்கவில்லை. சொந்தம் என்பதற்காக, சசிகலா எனக்கு எந்த சலுகையும் செய்தது கிடையாது. நானும் என் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது இல்லை. எந்த விசாரணை கமிஷன் வேண்டுமானாலும் அமைக்கட்டும். நான் தப்பு செய்து இருந்தால்... தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும்!'' என்று நிதானமாகச் சொல்லி முடித்தார். சமீபத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஒருவரை, அமைச்சருக்குத் தெரியாமலே மாற்றிவிட்டார் என்றும் பொன்னுச்சாமி மீது ஒரு புகார் சொல்லப்படவே, உளவுத் துறை மூலம் விசாரணை நடக்கிறதாம். அமைச்சரை டம்மி ஆக்க சசிகலா இவரை நியமித்துள்ளார் என்ற சந்தேகமும் கோட்டை வட்டாரத்தில் வலுவாக உள்ளது!

1 ராம.நாராயணன் 2 சிவசக்தி பாண்டியன்

1 ராம.நாராயணன் 2 சிவசக்தி பாண்டியன் அடங்காத கோடம்பாக்க அமர்க்களம்! சக்சேனா, அய்யப்பன் கைது​களுக்குப் பிறகு, அடுத்தது யார் என்கிற பரபரப்பு கிளம்பிவிட்டது. போலீஸ் தரப்பும் கோடம்பாக்கப் புள்ளிகளும் ஒரு சேரக் கை நீட்டுவது, தயாரிப்பாளர்கள் ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியனை நோக்கித்தான்! ''ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன் இருவரும் கடந்த ஆட்சியில் திரைத் துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்களின் பஞ்சாயத்துகளால் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள். கைது செய்யச் சொல்லி, மேலிடமே சொல்லிவிட்டது!'' எனத் தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு அழைக்கிறது போலீஸ். தயாரிப்பாளர்கள் ஐங்கரன் கருணா, அபிராமி ராமநாதன், தனஞ்செயன், 'ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல், மன்னன், 'மகிழ்ச்சி’ மணிவண்ணன், தயாரிப்பாளர் சகா என அதிருப்திப் புள்ளிகள் பலரையும் வளைத்து புகார்கள் வாங்கும் விறுவிறுப்பில் இருக்கிறது போலீஸ். இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட அமீரும் இந்தப் பட்டியலில் அடக்கம். இது குறித்து தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம். ''கடந்த ஆட்சியில் ராம.நாராயணன் வைத்ததுதான் சட்டம். சிவசக்தி செய்வதுதான் செயல். சன் டி.வி-க்கு சக்சேனா எப்படியோ, அதேபோல்தான், கலைஞர் டி.வி-க்கு ராம.நாராயணன். சிறு பிரச்னையாக இருந்தாலும், உடனே கவுன்சிலுக்கு வரவழைத்து பஞ்சாயத்துப் பேசுவதாகச் சொல்லி, ஏதாவது ஒரு ஏரியாவுக்கு விநி​யோக உரிமையை வாங்கிக்கொள்வார்கள். கலைஞர் டி.வி-யில் சாட்டிலைட் உரிமைக்காக ஒரு தொகை பேசிவிட்டு, அதில் பாதியை அவர்களே அமுக்கிக்கொண்டு தயாரிப்பாளர்களைத் தவிக்கவிடுவார்கள். ராம.நாராயணன் நினைப்பதைச் செய்துகொடுப்பதுதான் சிவசக்தி பாண்டியனின் வேலை. 'பருத்திவீரன்’, 'ரேனிகுண்டா’, 'மகிழ்ச்சி’, 'வாரணம் ஆயிரம்’, 'வல்லக்கோட்டை’, 'தம்பிக்கோட்டை’ என 50-க்கும் மேற்பட்ட படங்களின் விநியோக உரிமைகளில், இவர்கள் வில்லங்கத்தை உருவாக்கினார்கள். யார் எதிர்த்துக் கேட்டாலும், 'கோபாலபுரத்திலேயே சொல்லிட்டாங்க...’ என்று வாயை அடைத்துவிடுவார்கள். தயாரிப்பாளர்களை மட்டும் அல்ல... சில சேனல்களையே மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையும் நடந்தது. 'சூரியன் சட்டக் கல்லூரி’ என்ற படத்தை எடுத்த சிவசக்தி பாண்டியன், அதைச் சொல்லியே பல இடங்களில் பணம் கறந்தார். 'அர்ஜுனன் காதலி’ என்ற படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துத் தருவதாகச் சொல்லி, ஐங்கரன் நிறுவனத்திடம் 3 கோடி வாங்கினார். படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதாகச் சொல்லி பாண்டியன் கை விரிக்க, அபிமானத் தயாரிப்பாளர் ஒருவரும் இரண்டு எழுத்து சேனல் தரப்பினரும் தலா 50 லட்சத்தை பாண்டியனுக்குக் கொடுத்தார்கள். இன்று வரை கொடுத்த பணத்தையோ, படத்தையோ வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். பிரமாண்டத்தில் சாதிக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளரை கவுன்சிலில் நிறுத்தி மன்னிப்பு கேட்கவைத்தார்கள். 'பருத்திவீரன்’ படத்தில் அமீருக்கும் ஞானவேலுக்கும் பிரச்னை உருவானது. ஆனால், இப்போது இந்த இருவருமே ராம.நாராயணன் மீது புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்கள். அமீரிடம் இருந்து பஞ்சாயத்து நடத்தி 'பருத்திவீரன்’ படத்தை ஞானவேலுக்கு பிடுங்கிக் கொடுத்த ராம.நாராயணன் அதற்கு நன்றிக்கடனாக சில ஏரியாக்களின் விநியோக உரிமையை வாங்கிக்கொண்டார். அதற்கான பணத்தை ஞானவேலுக்கு சரிவரக் கொடுக்கவில்லை. அதே நேரம் ஞானவேல், அமீருக்கு கொடுக்கவேண்டும் என கவுன்சில் தீர்மானித்த 80 லட்சத்தை அமீருக்கும் வாங்கித் தரவில்லை. பல படங்களுக்கு இதேபோல் பஞ்சாயத்து பேசி இரு தரப்பிலும் ஆதாயத்தைப் பறிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்தன. கேபிள் டி.வி-க்கு படத்தின் புரமோஷன் காட்சிகளை வழங்குவதற்கான தொகையை, வருடத்துக்கு ஒரு முறை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், முதல் வருடத்தைத் தவிர, கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தப் பணத்தை ராம.நாராயணன் வழங்கவில்லை. முதல் புகாரை யார் கொடுப்பது என்கிற தயக்கம்தான் இப்போது நீடிக்கிறது. முதல் புகார் போய்விட்டால், வரிசையாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள்கூட ராம.நாராயணன், பாண்டியன் இருவர் மீதும் பாயும்!'' என்கிறார்கள் அதிரடியாக. இது குறித்து ராம.நாராயணனிடம் கேட்டால், ''இதுவரைக்கும் என் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுக்கிற அளவுக்கு நான் நடந்துகொள்பவனும் இல்லை. என் கவனத்துக்கு வந்த பிரச்னைகளை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து தீர்த்துவைத்தேனே தவிர, ஆதாயத்துக்காக எதையும் செய்தது கிடையாது!'' என்றார். சிவசக்தி பாண்டியனோ, ''தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு வந்த பஞ்சாயத்துக்களைத்தான் தீர்த்துவைத்தோமே தவிர, நாங்களாக பஞ்சாயத்தை உருவாக்கவில்லை. யாரிடமும் எதைச் சொல்லியும் பணம் பெறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மற்றபடி வழக்குவந்தால் சந்திக்கத் தயார்!'' என்கிறார் தெளிவாக. இதற்கிடையில், போலீஸ் அமீரை அணுக, ''அவர்களின் மீது வழக்குப்போட்டுவிட்டு பிறகு வந்து பாருங்கள்... அவர்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சொல்கிறேன்!'' என்றாராம். அடுத்தபடியாய் உதயநிதியின் வலது கரமாகத் திரைத் துறையைக் கலக்கிய வாசனைப் புள்ளி,, மூன்று எழுத்து சேனலின் பிரதிநிதி எனக் கைதுப் பட்டியலின் நீளம் நீண்டுகொண்டே போகிறது! - இரா.சரவணன்

''ஸ்டாலின் தலையணைக்குக் கீழ் ரூ 100 கோடி!''

''ஸ்டாலின் தலையணைக்குக் கீழ் ரூ 100 கோடி!'' மீண்டும் தலை காட்டும் 'ரைஸ் புல்லிங்' கும்பல் ''சார்... 'ரைஸ் புல்லிங்’னு சொல்லி ஒரு கூட்டம், லட்சம் லட்சமா ஆட்டையப் போடுது. இந்த கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்த பலர் பித்துப் பிடிச்சு அலையறாங்க. இதை அம்பலப்படுத்தக் கூடாதா?'' - கோவை ஏரியாவைச் சேர்ந்த வாசகர் ஒருவர் ஆதங்கப்பட்டார். 'ரைஸ் புல்லிங்’ என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து அவ்வப்போது செய்திகள் கிளம்பும். ''கோபுரக் கலசங்களில் இடி தாக்கக் கூடாது என்பதற்காக விலை மதிப்புமிக்க உலோகமான இரிடியம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கலசத்துக்குப் பக்கத்தில் அரிசியைக் கொண்டுபோனால், அது மெரூன் கலராகி ஒட்டிக்கொள்ளும். டார்ச் லைட்டைக் கொண்டுபோனால், பல்ப் ஃப்யூஸ் ஆகிடும். கலசத்துக்கு மேல் ஊசியைப் போட்டால், அது அந்தரத்தில் நிற்கும்...'' என்றெல்லாம் அள்ளிவிடுவார்கள். நமக்குத் தகவல் கொடுத்த கந்தசாமியும் (பெயரை மாற்றப்பட்டுள்ளது) கலச மோசடிக் கும்பலிடம் 8 லட்சம் வரை இழந்திருக்கிறார். ''நடிகர் வடிவேலு, தன்னோட சொந்த ஊர்ப் பக்கத்தில் இது மாதிரி ஒரு கலசம் இருக்கிறதை விஜயகாந்த்துக்கு சொன்னார். பல கோடி பெறுமானம் உள்ள அதை வடிவேலுக்குத் தெரியாமல் பேரம் பேசி வாங்கிய விஜயகாந்த், அவருக்கு 20 லட்சத்தை மட்டும் கொடுத்தார். இதில் பிரச்னை வந்துதான் ரெண்டு பேரும் முட்டிக்கிட்டாங்க!’னு தத்ரூபமா ஒரு கதையைச் சொல்லி என்னை ஏமாத்தினாங்க...'' என்று ஆரம்பித்தார் கந்தசாமி. ''முதன் முதலா எம்.ஜி.ஆர்-தான் இரிடியம் பிசினஸை ஆரம்பிச்சாராம். போன ஆட்சியில், கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் திறந்துவைக்க வந்த ஸ்டாலின், ஒரு கலசத்தை வாங்கிட்டுப் போனார்னு கதைகளா சொன்னாங்க. கலசத்தில் இரிடியம் இருக்கு​தான்னு சோதனை பண்றதுக்கு, சேலத்தில் தாஸ், கோவையில் ரமேஷ், மதுரையில் சரவண பிரகாஷ்னு ஏரியாவுக்கு ஒருத்தன் இருக்கான். இவங்க எல்லாம் விஞ்ஞானிகளாம். சரவண பிரகாஷ், ஒரு ரிட்டயர்டு போலீஸ்காரர். இவங்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரைக்கும் ஃபீஸ். நாங்களும் பணம் கட்டி, சரவண பிரகாஷைக் கொடைக்கானலுக்குக் கூட்டிட்டுப் போனோம். 'அட்வான்ஸ் பணத்தைக் காட்டினாத்தான், பொருளைக் காட்டுவோம்’னு சொன்னாங்க. நாங்களும் 10 கோடியைக் காட்டினோம். நாங்க ஒரு குரூப்பாகப் போனதால், எதை எதையோ சொல்லி இழுத்தடிச்சு, கடைசி வரை பொருளைக் கண்ணில் காட்டவே இல்லை. அதனால், டெஸ்ட்டுக்குக் கட்டின பணம் வேஸ்ட்டாகிப் போச்சு. உடுமலைப்பேட்டை பாலுதான் இந்தக் கும்பலுக்கு குரு மாதிரி. இவன் ஆளுங்கதான் இப்ப தமிழ்நாடு முழுக்க இந்த வேலையில் இறங்கி இருக்காங்க. இரிடியம் கலந்த கலசங்கள் இருப்பதாகச் சொல்லி நம்பவெச்சு, பார்ட்டிகளை வரவைக்கிறாங்க. இந்தக் கூட்டத்துக்கு போலீஸும் கூட்டு. பார்ட்டிகள் ஏமாளியாக இருந்தால், பணத்தைப் பிடுங்கிட்டு விரட்டுவாங்க. வெயிட்டான ஆளுங்களா இருந்தால், போலீஸை வரவைப்பாங்க. பெரும்பாலும் பிளாக் மணி வெச்சிருக்கவங்கதான் இதுக்கு வர்றதால், போலீஸ் வந்ததுமே பணத்தைப் போட்டுட்டு எஸ்கேப் ஆகிருவாங்க. அப்புறமா, சொற்பமான ஒரு தொகையைக் கைப்பற்றினதா கணக்குக் காட்டி, கேஸை முடிச்சிரும் போலீஸ். இதுக்கு பெர்சன்டேஜும் உண்டு. பொருளைப் பார்த்தே தீரணும்னு யாராச்சும் அடம் பிடிச்சா, அதுக்காகவே டுபாக்கூர் கலசங்களை, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பழனின்னு ஒருத்தன் தயாரிக்கிறான்....'' கந்தசாமி சொல்லி முடிக்க... அவரது நண்பர் காரைக்குடி சொக்கலிங்கம் தொடர்ந்தார், '' 'ட்ரை குளோரைடு இரிடியம்’னு சொல்லி ஒரு பெட்டி, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கிடைக்கிறது. 25 கிலோ எடைகொண்ட இந்த 'கன் மெட்டல்’ பெட்டிக்குள், இரிடியம்னு சொல்லி மெட்டல் தூளை பக்காவாக பேக் பண்ணுவார்கள். கண்ணாடி வழியாகப் பாத்தால், இரிடியம் ஏழு கலரில் தெரியும். இதே மாதிரி நாகரத்தினக் கல், வெள்ளை ஆந்தை, ஆறு விரல் ஆமை, லிபியா காயின், மண்ணுளிப் பாம்புகளை வைச்சும் இந்தக் கும்பல் மோசடி செய்கிறது. கொடைக்கானலில் எங்கள் கண் முன்னாடியே ஒரு பாம்பைக் கொண்டுவந்து, கோதுமை சைஸில் ஒரு கல்லைக் கக்கவைத்து, 'இதுதான் பாஸ் நாகரத்தினக் கல்... இதோட மதிப்பு 100 கோடி. ஸ்டாலின் இதை தினமும் தனது தலையணைக்கு கீழ் வைச்சுத்தான் தூங்குவார்’னு கூசாமக் கதைவிட்டாங்க...'' என்றார். ''இரிடியம் கதைகள் உண்மைதானா?'' காரைக்​குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (CECRI) சீனியர் பிரின்சிபல் விஞ்ஞானி கே.சுப்பிரமணியனிடம் கேட்டோம். ''இரிடியம் ரொம்ப காஸ்ட்லியான உலோகம். இது, எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகிறது. இந்தியாவில் உற்பத்தி இல்லை. நமக்குத் தேவையான இரிடியத்தை அமெரிக்கா, ஜெர்மன் கம்பெனிகள்தான் சப்ளை செய்கின்றன. இன்றைய தேதியில், ஒரு கிராம் இரிடியம் 2,400. வெளி மார்க்கெட்டில் 6,000. சுமார் 2,700 டிகிரி வெப்பத்தைத் தாங்கக்கூடிய இரிடியம் விண்வெளி ஆராய்ச்சியில் அதிகமாகப் பயன்படுகிறது. ஆள் இல்லாத விண்கலங்களில் புளூட்டோனியத்தை வைத்துத்தான் மின்சாரம் உருவாக்குகிறார்கள். அப்போது உண்டாகும் சுமார் 2,000 டிகிரி வெப்பத்தைத் தாங்குவதற்காக இரிடியம் கண்டெய்னர்களில் புளூட்டோனியத்தை வைத்திருப்பார்கள். இரிடியம் அரிமானத்தைத் தடுக்கக்கூடியதால், ராக்கெட்டுகளில் கோட்டிங் மெட்டீரியலாகப் பயன்படுத்துகிறார்கள். கோபுரக் கலசங்களிலும் கோட்டிங் கொடுத்து இருக்கலாம். மற்றபடி, இந்தக் கும்பல் சொல்வதுபோல், இரிடியத்துக்கு எந்த விதமான விசேஷக் குணமும் கிடையாது. எல்லாம் சுத்த ஹம்பக்!'' என்றார். புரிஞ்சா சரி! - குள.சண்முகசுந்தரம்

மிஸ்டர் கழுகு: பெமா வலையில் கலைஞர் டி.வி.!

மிஸ்டர் கழுகு: பெமா வலையில் கலைஞர் டி.வி.!

செல்போனில் பேசியபடியே வந்தார் கழுகார். நம்மைப் பார்த்ததும், ''நியூஸை கன்ஃபார்ம் செய்ததும், மிஸ்டு கால் கொடுங்கள்!'' என்று போனை கட் பண்ணினார். ''மணல் மேட்டரில் ஒரு க்ளைமாக்ஸ் நடக்கிறது. அதைக் கடைசியில் சொல்கிறேன்...'' என்றவர், மற்ற செய்திகளை ஆரம்பித்தார்!

''தயாநிதி மாறனின் ராஜினாமா காட்சிகள் பற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லி இருந்தேன். கடந்த வியாழன் அன்று இரவே, சென்னைக்குத் திரும்பி வர நினைத்தார். ஆனால், மீடியாக்கள் சூழ்ந்துகொண்டு துளைத்தெடுப்பார்கள் என்பதால், வெள்ளிக்கிழமை இரவுதான் வந்தார்.

நேராக கோபாலபுரம் போய், கருணாநிதியைச் சந்தித்தார். கருணாநிதிதான் அவருக்கு அதிகம் ஆறுதல் சொன்னதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் போன்றவர்களால் கருணாநிதி வீடு நிரம்பியது. ஒருவிதமான விரக்தி மனோநிலையில், 'இனிமேல் என்னால் பண்றதுக்கு எதுவும் இல்லை. யாராவது ஆலோசனை இருந்தா, சொல்லுங்க’ என்று தனது இயலாமையை வெளிப்படுத்தினாராம் கருணாநிதி.

இந்த நிலையில், மறுநாள் காலை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வருவதாகவும், கருணாநிதியைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. 'என்ன விஷயமாக இருக்கும்?’ என்று கருணாநிதி யோசித்தார். ஆ.ராசா, தயாநிதி ஆகிய இருவரும் பதவி விலகிய நிலையில், 'அந்த இடங்களுக்கு யாரை நியமிக்கலாம்?’ என்று பிரதமர் விசாரிக்கச் சொன்னதற்காகத்தான் பிரணாப் வருவதாகச் சொன்னார்கள்.''

''யாருடைய பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்​டனவாம்?''

''கருணாநிதிக்கு இதுவும் புதுத் தலைவலியாக மாறியது. நாகை ஏ.கே.எஸ்.விஜயனை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். டி.ஆர்.பாலுவையே அமைச்சர் ஆக்குங்கள் என்பது அழகிரியின் பரிந்துரை. ஜெயதுரை அல்லது நாகர்கோவில் ஹெலன் டேவிட்சனை அமைச்சராக்க வேண்டும் என்பது ராஜாத்தி அம்மாள் கோரிக்கை. கனிமொழி உள்ளே இருப்பதால், அவரது ஆதரவு யாருக்கு எனத் தெரியவில்லை. இந்த நிலையில், மண்டையைப் பிய்த்துக்கொண்டாராம் கருணாநிதி. 'யாருமே மந்திரியாக வேண்டாம்! ஒவ்வொருத்தராக ராஜினாமா பண்ணிட்டு வர்றதுக்குதான் மந்திரி ஆகணுமா?’ என்று வருத்தப்பட்ட கருணாநிதி... இதையே பிரணாப் முகர்ஜியிடமும் சொன்னாராம். இதைத் தெரிந்துகொண்ட ஸ்டாலின் கோபம்​கொண்டதாகவும், இதனால் கருணாநிதியைச் சந்திப்​பதைத் தவிர்த்ததாகவும் சொல்கிறார்கள்.''

''பிரணாப்பின் சமாதானம் என்னவாம்?''

''அவர் தி.மு.க-வை சமாதானம் செய்ய வரவில்லை. பிரதமரின் கோபத்தைக் கொட்டுவதற்கே வந்தாராம்!''

''ஆ.ராசாவைக் கைது செய்தாகிவிட்டது. தயாநிதி ராஜினாமா செய்துவிட்டார். இதற்கு மேல் என்னவாம் பிரதமருக்கு?''

''அடுத்த கோபம், அழகிரி மீது திரும்பி உள்ளதாம் டெல்லிக்கு! 'அழகிரி நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை. கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் இல்லை’ என்ற குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் கிளம்பின. 'தமிழில் பதில் சொல்லலாம்’ என்று சபாநாயகர் மீராகுமார் சொன்ன பிறகும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அழகிரி கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், உரத் துறை சம்பந்தமான மீட்டிங்குகளிலும் கலந்துகொள்வது இல்லையாம். உர விலைக் குறைப்பு தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கேபினெட் அமைச்சர் என்ற முறையில் அழகிரிதான் நடுநாயகமாக இருந்து அதை நடத்தி இருக்க வேண்டும். அவருக்குத் துணையாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியையும் சேர்த்தார்கள். ஆனால், அன்றும் அழகிரி எஸ்கேப்!''

''அப்படியா?''

''கூட்டமே நடக்கவில்லை. 'அழகிரி வராததால் இந்தக் கூட்டம் நடக்கவில்லை’ என்று அம்பிகா சோனி வெளிப்படையாகவே அறிவித்தார். உரங்கள் தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஒரு தாக்கீது வந்தது. அதற்கும் அழகிரியிடம் இருந்து உரிய பதில் அனுப்பிவைக்கப்படவில்லை. அஸ்ஸாம் முதல்வர், பிரதமரைத் தொடர்புகொண்டு, இது தொடர்பாக மூன்று முறை பேசினார். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்மோகன். அதனால், அந்த மாநிலத்தின் மீது கொஞ்சம் அதிகக் கவனம் அவருக்கு உண்டு. அதிலும், அழகிரி சுணக்கமாக இருந்தார். உச்சக்கட்ட கோபம், சமீபத்தில் நடந்த கேபினெட் கூட்டத்துக்கு அழகிரி வராததுதான்.''

''அவர் மதுரையில் இல்லையே!''

''அவர் மதுரையில் இல்லை என்றால், டெல்லியில்தான் இருப்பாரா என்ன? ஜூலை 4-ம் தேதி பாட்டியாலா கோர்ட் விசாரணைகள் தொடங்கியது அல்லவா? அதையட்டி அழகிரியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் ஆகியோர் டெல்லிக்குச் சென்றார்கள். கனிமொழியைச் சந்தித்தார்கள். அப்படியே சுற்றுலாத் தலமான குலுமணாலி சென்று ஓய்வெடுத்தார்கள். கேபினெட் வியாழக்கிழமை நடக்கும்போது, அழகிரி டெல்லியில் இல்லை. பிரதமர் கோபத்துக்கு இதுதான் காரணம். அந்த வருத்தங்களை பிரணாப் கொட்டியதாகச் சொல்கிறார்கள். 'செயல்படாத ஒருவருக்கு கேபினெட் அந்தஸ்து உள்ள பதவி தேவையா? அவரை பதவி விலகச் சொல்லுங்கள், அல்லது முக்கியத்துவம் இல்லாத இலாகாவை வாங்கிக்கொள்ளச் சொல்லுங்கள்’ என்று காங்கிரஸ் மேலிடம் சொல்லச் சொல்லி இருக்கிறதாம்.''

''என்ன செய்வார் கருணாநிதி?''

''அவரோ, அழகிரியிடம் எதையும் சொல்லும் நிலையில் இல்லை. மன்மோகனிடமும் சொல்ல முடியாது. அநேகமாக, இலாகா மாற்றத்தின்போது அழகிரிக்கு டம்மியான இலாகா தரப்படலாம்!'' என்ற கழுகார்... டெல்லி நியூஸுக்குத் தாவினார்.

''ஜூலை 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு அறிக்கை தாக்கல் செய்து, தயாநிதி மாறனுக்குச் சிக்கல் ஏற்படுத்தியது அல்லவா? இன்றைய தினம், மத்திய அமலாக்கத் துறை தனது அறிக்கையைத் தாக்கல் செய்து, அடுத்த சிக்கலை உண்டாக்கிவிட்டது. அவர்கள் குற்றம் நடந்திருப்பதைச் சொன்னார்கள். இவர்கள் இது நடந்ததால் கைமாறிய பணம் மற்றும் இந்தியாவுக்கு உள்ளே வந்த, வெளியில் சென்ற பணத்தின் மதிப்பைப் பட்டியல் இட்டு மலைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். ஃபெமா மற்றும் ஃபெரா சட்டங்களையும், முறைகேடான நிதியில் தொடங்கப்பட்ட நிறுவனங்களை முடக்குவது பற்றிய ஏராளமான சட்டங்களையும் துணைக்கு அழைத்து இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

டிபி ரியாலிட்டி நிறுவனம் லைசென்ஸ் பெறுவதற்காக 200 கோடி பணம் தந்தது. அது குஸேகான் மூலமாக சினியுக் நிறுவனத்துக்கு வந்து, அது கலைஞர் டி.வி-யை ஆரம்பிக்கத் துணை புரிந்ததாகக் கொண்டுவருகிறார்கள். 'எனவே கலைஞர் டி.வி-யை இந்த வழக்கில் சேர்த்து, அந்தச் சொத்தையும் அட்டாச் பண்ணப்போகிறோம்’ என்று அவர்கள் சொல்லி இருப்பதுதான் மாபெரும் அட்டாக்!''

''கலைஞர் டி.வி-யையே மொத்தமாக முடக்கி​விடுவார்​களா?''

''ஃபைன் போடுவது ஒரு வகை. வழக்கு நடந்து முடியும் வரை கணக்குகளைத் தன்னுடைய கண்காணிப்பில் வைப்பது இன்னொரு வகை. மொத்தமாக செயல்படவிடாமல் தடுப்பது மூன்றாவது. இதில் எதைச் செய்யப்போகிறார்களோ? சுமார் 7,000 கோடிக்கும் அதிகமான பணம் இந்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறி நடமாடி இருக்கிறதாம். சைப்ரஸ், மொரீஷியஸ், சிங்கப்பூர், பிரிட்டீஸ் வெர்ஜின் ஐலண்ட் ஆகிய நாடுகளும், சில தீவுகளும் இந்த வலைப் பின்னல்களுக்குள் வருகின்றனவாம். தகவல்களைத் திரட்டிக் கொண்டுவரக் களத்தில் குதித்துள்ளதாம் அமலாக்கத் துறை. இதில் நிகழ்ந்த மிக முக்கியமான கைமாறுதல் விஷயங்களை, அடுத்தடுத்த அறிக்கைகளில் கொண்டுவந்து, அதிர்ச்சியைக் கூட்டுவார்களாம்!'' என்று சொல்லி முடிக்கவும், கழுகாருக்கு அந்த மிஸ்டு கால் வரவும் சரியாக இருந்தது. புன்னகைத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்!

''மணல் கொள்ளையைப்பற்றி ஏற்கெனவே உமது நிருபர் எழுதி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை செய்திருந்தார். மதுரை வட்டாரத்துக் கொள்முதல் விஷயங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு, மன்னார்குடிப் பிரமுகர் கைக்குச் சென்றது. அவரும் மதுரையில் தனக்கு ஓர் ஆளை நியமித்து காரியங்களைப் பார்க்கத் தொடங்கினார். ஆனால், அவரால் இதைச் சமாளிக்க முடியவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த 'பைசா’ பிரமுகரிடம் தகவல் சொல்லப்பட்டது. 'நானே அதைச் செய்து கொடுக்கிறேன்’ என்று அவராக முன்வந்தார். இதை மன்னார்குடிப் பிரமுகரும் ஏற்றுக்கொண்டார். சென்னைக்கு 'பைசா’ பிரமுகர் அழைத்து வரப்பட்டு, வி.வி.ஐ.பி-யுடன் சந்திப்பும் நடந்தது. மேட்டர் ஓகே ஆனது. அதாவது, கடந்த ஆட்சியில் யார் மணல் அள்ளினார்களோ, அவர்களின் கைகளுக்கே இந்த ஆட்சியிலும் மணல் சக்சஸாகப் போய்ச் சேர்ந்துள்ளது. இதைவிடச் சோகம் என்னவென்றால், 'இவர்கள் எல்லாம் நம்ம தொழிலுக்கு உடந்தையானவர்கள். அவங்க மேல் வழக்கு ஏதுவும் வராமப் பார்த்துக்கோங்க’ என்று 'பைசா’ பிரமுகர் வாக்குறுதியும் கேட்டு வாங்கினாராம். அவர்களில் பலர் தி.மு.க-வினர்!'' என்றபடி சிறகை விரித்தார் கழுகார்!

வருவாரா டக்ளஸ்?

டெல்லியில் இருந்து இலங்கைக்குச் சென்ற அதிகாரி நிருபமா ராவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார். ''எனக்கு அவசரமாக ஒரு சிகிச்சை செய்ய வேண்டும். சென்னையில்தான் அதைச் செய்ய வேண்டும். ஆனால், கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் என்னை, அங்கு வந்தால் தமிழக போலீஸார் கைதுசெய்துவிடுவார்கள். அப்படிக் கைதுசெய்யவிடாமல் தடுக்க வேண்டும்!'' எனக் கேட்டுக்கொண்டாராம். அதற்கு நிருபமா, ''நீங்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டு, ஜாமீன் மனு போடுங்கள். அப்போது, எங்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கிறோம். இதைத்தான் நாங்கள் செய்ய முடியும்!'' என்று சொன்னாராம். இதற்கு ஏற்றபடி அதிகார மட்டத்தில் காரியங்கள் நடந்து வருகின்றனவாம்!

பள்ளிக்கூடங்கள் திறந்தும் பாடம் நடத்த முடியாமல் இருப்பது யார் குற்றம்?

சில நேரங்களில் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் என ஒட்டுமொத்தமாகவே யதார்த்தம் உணராதவர்களாக இருப்பதுதான் காலக் கொடுமை!

மற்ற வகுப்புகளாவது பரவாயில்லை... 10-ம் வகுப்பு பிள்ளைகளுக்காவது, அது சமச்சீர் கல்விப் புத்தகமோ அல்லது சமம் இல்லாத பாடப் புத்தகமோ... ஏதாவது ஒன்றைப் படிக்க ஒப்புதல் தந்து உடனடியாக அறிவிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் பலரின் மன நலன்கூட இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.

குரலற்றவர்களின் குரலாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும்!

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்-1.

லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைப் பறித்த ராஜபக்ஷேவின் செயலைச் சிங்களவர்கள் யாரும் கண்டிக்க முன்வரவில்லையா?

ஏன் இல்லை? ராஜபக்ஷேவின் மனசாட்சியைத் தட்டி, கொட்டி எழுப்ப முயன்றவர் பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமதுங்க. ''என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். தேசப்பற்று என்ற பெயரால் பலர் தங்களது உயிரைத் துறக்கும் உண்மையை ஜனாதிபதி தெரிந்துகொள்ள இது உதவும். எத்தனை ராஜபக்ஷேக்கள் இணைந்தாலும், அதை அழிக்க முடியாது!'' என்று சண்டே லீடர் பத்திரிகைக்குத் தலையங்கம் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்ற லசந்தா, கொல்லப்பட்டார். கொழும்பு நகரில் நேருக்கு நேராக நின்று பேனா மூலம் சண்டை போட்ட துணிச்சல்காரர். அவரது உணர்ச்சிகளுடன் அவரின் மனைவி இன்றும் போராடி வருகிறார். லசந்தா வழியில் எத்தனையோ சிங்களப் பத்திரிகையாளர்களான (குறிப்பாக 'சுனந்த’!) மனித உரிமைப் போராளிகள் கொழும்புவில் இன்னமும் இருக்கிறார்கள்!

விஜயராகவன், கிருஷ்ணகிரி.

'இந்தியாவில் இப்போது ஊடகங்களின் ஆட்சிதான் நடக்கிறது’ என்று கோபப்படுகிறாரே கருணாநிதி?

இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது? 'நானும் ஒரு பத்திரிகையாளன்தான்’ என்று அவ்வப்போது சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, நிஜமாக இதற்குப் பெருமைப்பட வேண்டும்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

வாரா வாரம் பிரதமர் மன்மோகன்சிங் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் முதல்வர் ஜெயலலிதா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் என்ன வேறுபாடு?

பத்திரிகை ஆசிரியர்கள், முதலாளிகளை மட்டும் சந்திக்கிறார் பிரதமர். ஆனால், நிருபர்களை சந்திக்கிறார் முதல்வர்!

தான் சொல்ல வேண்டியதை மட்டுமே பிரதமர் கொட்டுகிறார். முதல்வரோ, நிருபர்கள் கேட்பதற்கு பதில் சொல்கிறார்!

நிறைய மாட்டிக்கொண்ட பதற்றம் பிரதமரிடம் தெரிகிறது. இப்போதுதான் வந்திருப்பதால், பயம் இல்லாமல் இருக்கிறார் முதல்வர்!

அவரிடம் தோல்வி பயமும் இவரிடம் வெற்றியின் பெருமிதமும் இப்போது படர்ந்துள்ளன!

அ.இராஜப்பன், கருமத்தம்பட்டி.

ஆன்மிகச் சிந்தனை அதிகரித்தால், இந்தியாவில் குற்றங்கள் குறையுமா?

எந்தக் கோயிலில் கூட்டம் இல்லை? ஆனால், குற்றங்கள் குறையவில்லையே!

இன்று, பக்தி அதிகமாகி உள்ளது. ஆனால், கடவுள் மீதான பயம் குறைந்துவிட்டது!

சுப்ரமணியன், காஞ்சிபுரம்.

அண்ணன், தம்பி உறவு எப்படி இருக்க வேண்டும்?

'என்னுடைய புகைப்படத்தை மட்டும் போடுங்கள், வேறு யாருடைய படமும் போட வேண்டாம்’ என்று தம்பிக்கு மறைமுகத் தடை போடுவதுபோல இருக்கக் கூடாது!

உலகப் புகழ் பெற்ற ஓவிய மேதை வான்காவும் அவர் தம்பி தியோவும்தான் நல்ல உதாரணங்கள். வாழ்ந்த கடைசி நொடி வரை 10 பைசாகூட வருமானம் தராத ஓவியங்களைத் தளராமல் வரைந்து வந்தான் வான்கா. அதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அண்ணன் மீதான நம்பிக்கையால் பணமும் ஓவியப் பொருட்களையும் வாங்கித் தந்துகொண்டே இருந்தான் தியோ.

வான்காவை ஒரு மன நோயாளியாக உலகம் சித்தரித்தது. ஆனால், தியோ அதை ஏற்கவில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் அண்ணன் - தம்பி உறவு. வான்காவின் ஓவியங்கள் உலகப் புகழ் அடைந்ததைக் காண இருவருமே இல்லை என்பதுதான் சோகம்!

போடி.எஸ்.சையது முகமது, சென்னை-93.

'இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணுமாறு தம்மை இந்தியா நிர்ப்பந்தம் செய்யவில்லை’ என்கிறாரே ராஜபக்ஷே?

இது என்ன ராஜபக்ஷே சொல்லித் தெரிய வேண்டிய ரகசியமா?

ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்.

கருணாநிதியால் ஒரு தலைமுறையே இந்தி படிக்காமல் இருந்து உயர்ந்த நிலையை அடையாமல் போய்விட்டது என்கிறார்களே... உண்மையா?

இந்தி படித்துவிட்டால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பது தவறான வாதம். சென்னைக்கு வந்து பாருங்கள். கூலி வேலைகளுக்காக நித்தமும் வந்து இறங்கும் பீகாரிகள் சுத்தமான இந்தி பேசுகிறார்கள். அவர்கள் ஏன் உயர் நிலையை அடையாமல் போனார்கள்? இந்தி மட்டும் அல்ல... எந்த மொழியைக் கற்றாலும், அது ஒரு கூடுதல் தகுதிதான். ஆனால், அது மட்டுமே தகுதியாக ஆகிவிடாது.

ஆங்கிலத்தை விட்டுவிட்டு இந்தியை மட்டும் கற்று இருந்தால், இந்தியத் தவளையாக தமிழன் ஆகி இருப்பான்!

வசந்தா, மேலூர்.

காஸ் சிலிண்டர் கெடுபிடிகளைப் பார்த்தீரா? வருடத்துக்கு நான்கு சிலிண்டருக்கு மேல் வாங்கினால், ஒரு சிலிண்டர் 800 ரூபாயாமே?

அரசு நிறுவனம் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் காட்டும் அக்கறையில் கடுகளவேனும் மக்கள் மீதும் காட்டுபவர்களாக இருந்தால், இப்படி ஒரு யோசனை அவர்கள் மனதில் தோன்றுமா? தமிழகத்தில் மக்கள் நடத்திய மௌனப் புரட்சியை காங்கிரஸ் கவனத்தில்கொள்வது நல்லது. இல்லையென்றால், காந்திஜியின் ஆசைப்படி காங்கிரஸ் நிச்சயம் காணாமல் போய்விடும்!

எம்.சண்முகம், கொங்கணாபுரம்.

செல்போன் நமக்கு வரமா? சாபமா?

வெளியில் இருக்கும் 100 கோடிப் பேருக்கு... வரம்.

உள்ளே இருக்கும் 14 பேருக்கு... சாபம்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

ஊழல் எப்போது குறையும்?

பெண்கள் நினைத்தால்தான் குறையும்!

அப்பா, சகோதரன், கணவன், மகன் கொண்டுவரும் 'வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை’ வீட்டில் இருக்கும் பெண்கள் தடுத்தால்... ஊழல் குறையும்.!

Monday, July 11, 2011

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

சந்தோஷ சூட்சுமம்!


பயணங்கள் சுகமானவை. எத்தனை முறை சென்றாலும் ரயில் பயணம் எவருக்கும் அலுப்பதே இல்லை. ஓடும் ரயிலின் சீரான தடதட சத்தமும், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் லேசாக அசைந்து, அன்பான அம்மா போல நம்மைத் தாலாட்டி ஆட வைத்து அழைத்துச் செல்லும் பாங்கும் மிக ரசனையானவை.

பேருந்துப் பயணம் மட்டும் என்ன... ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டால், காற்று விறுவிறுவென ஜன்னலுக்குள் புகுந்து, நம் தலையைக் கோதிவிடுவதில் இருக்கிற சுகம், அலாதியானது; ஈடு இணையே இல்லாதது!

வாழ்வில், இப்படியான இனிமைப் பயணங்கள் நிறையவே உண்டு. இன்னும் சொல்லப் போனால், இந்த வாழ்க்கை என்பதே பெரும் பயணம்தான், இல்லையா? இந்தப் பயணமும் ஒருவிதத்தில் சுகமானதுதான். என்ன ஒன்று... ரயிலிலும் பேருந்திலும் அதன் வேகமும் அடிக்கிற காற்றும் நம் பயணத்தை சுவாரஸ்யமாக்கும். ஆனால், வாழ்க்கைப் பயணத்தில், நாம் சுவாசிக்கும் காற்றில்தான், சந்தோஷத்துக்கான சூட்சுமமே அடங்கியிருக்கிறது.

மனவளக் கலைப் பயிற்சிக்கு வரும் அன்பர்களிடம், பொதுவாகச் சொல்வேன்... ''மனவளக் கலையில் நிறையவே பயிற்சிகள் உண்டு. எல்லாமே எளிமையானவை; மிகச் சுலபமாகப் புத்தியில் வாங்கிக்கொண்டு செயல்படுத்தக்கூடியவை. அதில், சுவாசப் பயிற்சியின்போது, ரொம்பவும் கவனம் எடுத்துக்கொண்டு கற்றுக் கொள்ளுங்கள். அதன் அவசியத்தை உணர்ந்து, அறிந்து, புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்'' என்பேன்.

ஒருமுறை அன்பர் ஒருவர், ''என்ன சுவாமி... மனவளக் கலைப் பயிற்சியின்போது, நீங்கள் கூடவே இருக்கிறீர்கள். போதாக்குறைக்கு, நம் அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள், சுற்றிச் சுற்றி வந்து ஆலோசனை சொல்கிறார்கள்; 'கைகளை இப்படி வைத்துக் கொள்ளுங்கள்; பாதங்களைத் தொடையின் மீது வைத்துக் கொண்டு, இந்த இரண்டு விரல்களாலும் மெள்ள அழுத்துங்கள்’ என்று சரிசெய்கின்றனர். எந்த விரல்களால், எந்த இடத்தில் இருந்து அழுத்தவேண்டும் என்று தெளிவாகச் சொல்லித் தருகின்றனர். அப்படியிருக்கும்போது, சுவாசப் பயிற்சியையும் அவர்களே பார்த்து சரிசெய்துவிடுவார்களே சுவாமிஜி! நீங்கள் இதற்கு இத்தனை கவலைப்படுவானேன்?'' என்று கேட்டார்.

கால்களைக் கைகளால் அழுத்துவது பற்றி அருகில் இருப்பவர்கள் எடுத்துச் சொல்வார்கள்; சரி செய்வார்கள். வஜ்ராசனம் எப்படி அமரவேண்டும் என்றும், அப்போது முதுகையும் கழுத்தையும் எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் திருத்துவார்கள். ஆனால், மூச்சுப் பயிற்சியில், 'இப்படி அமர்ந்து கொள்ளுங்கள்; முதுகை நேராக்கிக் கொள்ளுங்கள்; மூச்சை நன்றாக உள்ளிழுங்கள்’ என்று சொல்வது மட்டும்தான் எங்களின் வேலை. அந்த மூச்சை எப்படித் துவங்கி, எங்கே முடிக்கவேண்டும்; அது எங்கே முடிகிறது என, மெள்ள மூச்சை இழுத்துக் கொள்வதும் பிறகு விடுவதுமாக இருக்கிற சூட்சுமத்தை நீங்களேதான் அறியமுடியும். காற்று எனும் பந்து, மூக்கின் வழியே நுழைந்து, நெஞ்சின் எந்த இடத்தில் போய் இடிபட்டு நிற்கிறது என்பதை உங்களால்தான் உணரமுடியும். ஆகவே, சொல்லும்போது கவனமாகக் கேட்பதும், செய்யும்போது அந்த மூச்சுப் பந்தினூடே நீங்கள் பயணம் செய்வதும் அவசியம்'' என்பதை விளக்கினேன்.

சரி... மூச்சுப் பயிற்சிக்கு வருவோம்.

சுவாசப் பயிற்சியில் மொத்தம் ஏழு நிலைகள் இருக்கின்றன. இந்த ஏழு நிலைகளையும் எவர் ஒருவர் சரியாகச் செய்கிறாரோ, அவர்களின் மூச்சுக் குழாய் சுத்தமாகும்; சைனஸ் போன்ற பிரச்னைகளில் இருந்து அவர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்பது மருத்துவர்கள் பலரே வியந்து சொன்ன உண்மை! ஆகவே, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் மூச்சுப் பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள்; அருமையான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள் என்பது உறுதி!

வலது கையைத் தொப்புள் பகுதியிலும், இடது கையை வலது காதிலும் வைத்துக்கொண்டு, அடுத்து, இடது கையை தொப்புள் பகுதியிலும் வலது கையை இடது காதிலும் வைத்துக்கொண்டு... எனப் பயிற்சி செய்தீர்கள், அல்லவா?! இப்போது, வழக்கம்போல் சுகாசனத்தில் அமர்ந்துகொண்டு, வலது உள்ளங்கையால் இடது காதையும், இடது உள்ளங்கையால் வலது காதையும் பொத்திக் கொள்ளுங்கள். கண்களை மூடியபடி, மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். அவசரமே வேண்டாம்; நிதானம்தான் இங்கே முக்கியம். இதேபோல் ஐந்து முறை செய்யும்போது, உங்கள் நுரையீரலின் பின்பகுதி முழுவதும் நன்கு விரிவடைவதை உங்களால் உணரமுடியும். இதையடுத்து, வலது உள்ளங்கையால் வலது காதையும், இடது உள்ளங்கையால் இடது காதையும் மூடிக் கொள்ளுங்கள். அப்போது, உங்களின் இரண்டு கைகளும் மடங்கினாற்போல் நெஞ்சினில் இருக்காமல், உங்களின் தோள்பகுதியைப் பார்த்தபடி இருக்கட்டும். கிட்டத்தட்ட, உங்களின் இரண்டு கை விரல்களும் பின்னந்தலையில் வந்து சேரும்படி இருக்கட்டும். இந்த நிலையில் இருந்தபடி, மூச்சை ஆழ்ந்து, நிதானமாக ஐந்து முறை இழுத்து, வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சியால், நுரையீரலின் முன்பகுதியும் கீழ்ப் பகுதியும் மிக அருமையாக விரிவடையும். கொஞ்சம் பொறுமையுடனும் ஈடுபாட்டுடனும் பயிற்சி செய்தால், உங்களால் நுரையீரலில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாக உணரமுடியும். நுரையீரல் சீராகிவிட்டதென்றால், மூச்சுக் குழாயின் வழியே வருகிற காற்று, தங்குதடையின்றி வரத்துவங்கிவிட்டது என்று அர்த்தம். மூச்சில் தடையேதுமின்றி இருந்தால், செயலிலும் தடைகள் இருக்காது; தடுமாற்றங்கள் நிகழாது. தடுமாற்றம் இல்லாத செயல்பாடுகள் எல்லாமே வெற்றியைத்தான் தரும் என்று நான் சொல்லவேண்டுமா, என்ன?

இன்னொரு விஷயம்... இந்த ஏழு நிலைப் பயிற்சிகளிலும், மூச்சை உள்ளிழுக்கலாம்; வெளியேற்றலாம். ஆனால், மூச்சை நிறுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. யோகாசன முறையில், அப்படி மூச்சடக்குவதை கும்பகம் என்பார்கள். மனவளக் கலை உடற்பயிற்சியில், இந்தக் கும்பக முறை, எந்த இடத்திலும் இல்லை என்பதை அன்பர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மூச்சுப் பயிற்சியின் ஏழாவது நிலையையும், ஏழு பயிற்சிகளால் நமக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன என்பதையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

அதற்கு முன், 'அப்பாடா...’ என்று ஒருமுறை மூச்சைத் தளர்த்திக்கொண்டு, ரிலாக்ஸ் செய்யுங்களேன்!

Saturday, July 9, 2011

பழசு இன்றும் புதுசு

தமிழக சட்டசபையில் 25 ஆண்டுகளாகப் பளிச்சிட்டு வந்த​வர் கலைஞர் கருணாநிதி. தி.மு.கழக கொறடா வாக, எதிர்க் கட்சித் துணைத் தலைவராக, முதல்வராக, எதிர்க் கட்சித் தலைவராக... பல விதங்களில் சட்டசபையில் பரபரப்பாகச் செயல்பட்டவர். இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் மெத்தனத்தை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் ராஜினாமா செய்தனர். அதற்கு பிறகு, முதல் தடவையாக சட்டசபை 24-ம் தேதி கூடுகிறது. கலைஞர் இல்லாத சட்டசபைக் கூட்டம் இது.

சட்டசபையில் அமைச்சர்களுக்கு எதிர் வரிசையில் முதல்வருக்கு நேர் எதிரான ஆசனத்தில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருப்பது, கலைஞரின் பாணி. அவரது கறுப்புக் கண்ணாடி வழியாக, அவர் கண்கள் சுறுசுறுப்பாக அலை பாய்வது தெரியும். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கறுப்புக் கண்ணாடியைப்போல அல்லாமல், கலைஞரின் கண்களை முழுமையாக மறைக்காத கூலிங் கிளாஸ் அது. அமைச்சர்களின் பதில் சரி இல்லை என்றால், கலைஞரது கேலிச் சிரிப்புதான் மண்டபத்தை முதலில் நிறைக்கும்.

சட்டசபையில் பரபரப்பான கட்டம் வரும்போதெல்லாம், ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கலைஞரை உற்று கவனித்தவாறு இருப்பது வழக்கம். ஏன்? ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கூறினார்... ''சூடான விவாதம் வரும்போது கலைஞரை உற்றுப் பார்ப்பேன். அவர் தலையில் கைவைத்தவாறு இருப்பார். ஒரு விரலால் தலையை அவர் தட்டியவாறு இருந்தால், உடனே துரைமுருகன் எழுந்திருப்பார்... இரண்டு விரலால் தலையைத் தட்டிக் காண்பித்தால், ரகுமான்கான் எழுந்திருப்பார். இப்படி ஒரு சைகை சிஸ்டமே உண்டு.''

இதைக் கேட்டுக்கொண்டு இருந்த இன்னொரு தி.மு.கழக எம்.எல்.ஏ. ஒருவர், கலகலவென்று சிரித்தார்: ''ஆமாம்! அவர் இரண்டு கையாலும் தலையில் தட்டிக் கொள்ளும்போது வாக்-அவுட் செய்வோம்'' என்றார் தமாஷாக!

பத்திரிகை நிருபர்களைப் பொறுத்த வரையில், கலைஞர் இல்லாத சட்டசபை 'டல்’தான். கலைஞர் இல்லாத சட்டசபையில் தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் எப்படிச் செயல்படப்போகிறார்கள் என்பது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி.

கலைஞர் இல்லாத சட்டசபை எப்படி இருக்கும் என்று சில எம்.எல்.ஏ-க்களிடம் கருத்துக் கேட்டபோது...

முசிறிப்புத்தன், எம்.எல்.ஏ. (அண்ணா தி.மு.க): ''நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, சபையில் நடந்த குழப்பங்களை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டே செய்து வந்தது. அவர் சபையில் இருந்தபோதே, கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருந்தது. சில நேரங்களில் அப்படிப்பட்ட நிலைமை கலைஞரது ஆசையின் வெளிப்பாடாகவும் இருந்தது. இப்போது அவர் இல்லாத வேளையில், இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். பேராசிரியர் அன்பழகன் இல்லாததுதான் ஒரு குறையாக இருக்கிறது.

உணர்ச்சிவசப்படாமல் கருத்தைச் சொல்பவர் பேராசிரியர். எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் என்ற கண்ணோட்டம் இன்றி, சொல்ல நினைத்ததைத் தெளிவாக எடுத்துச் சொல்வார். ஆனால், கலைஞர் அப்படி அல்ல. கலைஞரின் அணுகுமுறைகள் - நடவடிக்கைகள் எந்த நேரமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அவதூறுக்கு ஆளாக்குகிற பாணி(பணி?)யாகவே இருந்தது. எதை எடுத்தாலும் குறுகிய கண்ணோட்டத்துடன், சொந்த லாபங்களைத் கருதியே செயல்பட்டவர். கருணாநிதி இருந்தபோதே, சபையின் கண்ணியத்தைக் குறைக்கக்கூடிய அளவுக்கு நடந்துகொண்ட அந்தக் கட்சி உறுப்பினர்கள், அவர் இல்லாத நிலையில் சட்டசபையில் திட்டமிட்ட குழப்பங்களை அதிகமாகவே செய்வார்கள். அண்ணா தி.மு.க. அதை உரிய முறையில் சந்திக்கும்.''

துரைமுருகன், எம்.எல்.ஏ. (தி.மு.கழகம்): ''1957-ல் இருந்து 1983 பட்ஜெட் தொடர் கூட்டம் வரை - ஆளும் தரப்பிலே இருந்தாலும், எதிர்க் கட்சியில் இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிடுவார் கலைஞர். முடிகிற வரையில் இருந்து, தான் பேசாவிட்டாலும் மற்றவர்களின் பேச்சைச் செவிமடுத்து மன்றத்துக்குக் கௌரவம் அளிப்பதில் கருத்தாக இருந்தார். இவ்வளவு கடமை தவறாத வீரர் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிற காலத்திலேயே, இன்றைய முதல்வர் (எம்.ஜி.ஆர்.) சட்டசபையில் தலை காட்டுவது அபூர்வம். கேள்விகளுக்கு பதில் சொல்வதே கிடையாது. இனி மேல் அந்தக் கடமை வீரர் சட்டசபையில் இல்லை என்ற தைரியத்திலேயே, 'பெர்மனன்ட் ஆப்சென்ட்’ ஆகிவிடுவார். இல்லாவிட்டால், தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் ஆவதுபோல, சபைக்கு வந்து சண்டமாருதம் செய்தாலும் செய்யலாம்.

தனிப்பட்ட முறையில் எவ்வளவு தாக்கினாலும், பொறுப்பில் இருக்கிறவர் நிதானம் தவறக் கூடாது. இதற்கு, கலைஞரே சிறந்த உதாரணம். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சேலம் சட்டமன்ற உறுப்பினர், கலைஞரின் திருச்செந்தூர் நெடிய பயணத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு, 'எதிர்க் கட்சித் தலைவர் நீதி கேட்டு நெடிய பயணம் போனார். இவர் வருவதைத் தெரிந்தவுடன் திருச்செந்தூர் முருகன், ஆலயத்தில் இருந்து பெயர்ந்து எங்கள் புரட்சித் தலைவரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார்’ எனக் குறிப்பிட்டார். நாங்கள் எல்லாம் ஆத்திரத்தோடு பதில் சொல்ல எழுந்தபோது, கலைஞர் தன் அறையில் இருந்து வேகமாக சபையினுள் நுழைந்து, 'தலைவர் அவர்களே! இதுவரை திருச்செந்தூர் உண்டியல் உடைக்கப்பட்டுக் களவாடப்​பட்டது என்ற செய்திதான் தெரியும். இப்போது திருச்செந்தூர் முருகன் சிலையும் இல்லை என்ற விஷயத்தை ஆளும் கட்சி உறுப்பினர் வெளிப்படுத்தியதற்கு நன்றி’ என்றார். சபையில் சிரிப்பு அடங்கச் சிறிது நேரம் பிடித்தது. கட்சி வித்தியாசம் இல்லாமல் ஆளும் கட்சியினரும் சேர்ந்து கலைஞரின் சாதுரியத்தை ரசித்தனர். இதுபோன்ற சூடான நேரத்திலும் சுவையான வாதத்தால் அனைவரையும் தன் வயப்படுத்தும் திறமை உள்ள கலைஞர் இல்லாத சட்டமன்றம் வெறிச்சோடித்தான் இருக்கும்!''

ப.நெடுமாறன், (த.நா.கா.கா.): ''அரசியலில் மாறுபாடான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும்போதுகூட, அதைக் கூர்மையாக்கி எதிரியைத் தாக்குவதில் அவருக்கு நிகர் அவர்தான். ஒரு நல்ல எதிர்க் கட்சித் தலைவராகப் பொறுப்புடன் பணியாற்றினார் என்பது என் கருத்து. சட்டசபையில் அவர் வராமல் இருந்த நாட்கள் மிகக் குறைவு. முதலமைச்சராக நாமே வீற்றிருந்த இந்த சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக உட்கார வேண்டுமா என்ற எண்ணம் அவருக்கு ஒருபோதும் வந்தது இல்லை.

முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் எத்தகைய பொறுப்புடன் கலந்துகொண்டாரோ, அதற்குக் கொஞ்சமும் குறையாத வகையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோதும் கலந்துகொண்டார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் சட்டமன்றத்தின் பக்கம் வராமல் இருப்பதையும் பார்த்து இருக்கிறேன். அவர், சட்டமன்றத்தில் இல்லாதது, சட்டமன்றத்துக்கு ஒரு பெரும் குறைதான் என்பது என் கருத்து.

தமிழீழ விடுதலை வீரர்களான குட்டி​மணி, ஜகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அந்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வேண்டிக்கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை சட்டசபையில் நான் கொண்டுவந்தேன். எல்லாக் கட்சித் தலைவர்களும் ஒப்புக்​கொண்டால், இதில் ஆட்சேபனை இல்லை என்று மதிப்புக்குரிய சட்டமன்ற சபாநாயகர் ராஜாராம் தெரிவித்தார். இருந்தாலும், சட்ட விதிகளின்படி ஒரு வெளிநாடு சம்பந்தப்பட்ட பிரச்னையை சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது. ஆனாலும் சபாநாயகருக்கு இந்தப் பிரச்னையில் மனிதாபிமான அக்கறை இருந்த காரணத்தினால், இந்தத் தீர்மானத்தை அனுமதித்தார். மற்ற கட்சித் தலைவர்களைக் கண்டு பேசும்படி எனக்கு ஆலோசனை கூறினார். அதன்படி எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதி அவர்களை சந்தித்துப் பேசினேன். எந்தவிதத் தடையும் சொல்லாமல், 'இந்தத் தீர்மானம் கொண்டுவர வேண்டியதுதான், நான் ஆதரிக்கிறேன். எங்கள் கட்சியும் முழு மனதாக ஆதரவு தரும்’ என்று ஒப்புக்கொண்டார். மற்ற எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு, பிறகு முதலமைச்சரையும் சந்தித்துப் பேசினேன். அவரும் அதற்கு ஆதரவு கொடுப்பதாகச் சொன்னார். இதில் ஒன்றும் பிரச்னை இல்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு நல்ல விளைவு இருக்கும் என்று நான் நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் வழிமொழிந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள், பல்வேறு விஷயங்களைக் கூறிவிட்டு இறுதியில் 'தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் விஷயத்திலும் இந்த அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற பொருள்படச் சொன்னார். உடனே எழுந்த மதிப்புக்குரிய முதலமைச்சர் பேசும்போது, இதற்கு பதில் அளிக்கும் வகையில் குட்டிமணியை முதலில் பிடித்துக் கொடுத்தது கலைஞர் ஆட்சியில்தான் என்றார். ஆனால், அந்த இடத்துக்கு அது தேவையற்ற பிரச்னை. எல்லோரும் ஒன்றுபட்டு அவர்கள் உயிரைக் காப்பாற்றப் போராட வேண்டிய நேரத்தில் முதலமைச்சர் இதைக் குறிப்பிட்டது, ரசக் குறைவாக எங்களுக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் எதிர்க் கட்சித் தலைவரும் எழுந்து பதிலுக்கு ஏதாவது பேசுவாரோ என்று அச்சம் எனக்கு ஏற்பட்டது. எனவே, அவர் அருகில் சென்று இந்தப் பிரச்னையில் மேலும் பதில் ஏதும் சொல்ல வேண்டாம் என்று சொன்னபோது அவரும் பொறுமையுடன், 'இந்த விஷயம் எல்லோருடைய உணர்வுகளையும் பாதிக்கக்கூடியது. ரொம்ப முக்கியமானது. நான் எதுவும் பேச மாட்டேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார். தீர்மானமும் ஏகமனதாக நிறைவேறியது. அவர் அப்போது காட்டிய பொறுப்பு உணர்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன்!''

- நமது நிருபர்

மிஸ்டர் கழுகு: ராஜினாமா! தயங்கிய தயாநிதி

கழுகார் உள்ளே நுழைந்தபோது, ஆங்கில செய்தி சேனல்கள் தயாநிதி மாறன் ராஜினாமாவை அலறிக்கொண்டு இருந்தன. உள்ளே நுழைந்தவர், பார்ம் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தார்.

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதி மாறன் ராஜினாமா செய்துவிட்டார். இன்னொரு பக்கம், சன் டைரக்ட் தலைமை நிர்வாகி சக்சேனாவை போலீஸ் கைது செய்துவிட்டது. அவரது நண்பர் ஐயப்பனும் இப்போது போலீஸ் வசம். அரசு கேபிள் டி.வி-யை ஆரம்பிக்கும் வேலைகள் மும்முரமாகத் தொடங்கிவிட்டன. மொத்தத்தில் பார்த்தால், சன் குழுமத்தை டார்கெட்டாக வைத்து, சி.பி.ஐ-யும் தமிழக போலீஸும் வலை பின்ன ஆரம்பித்திருப்பது தெரிகிறது. இது எங்கே போய் நிற்குமோ?'' என்ற பீடிகையுடன் டெல்லி இறுதிக் கட்டக் காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தார்!

''பத்து நாட்களுக்கு முன் கோபாலபுரம் வீட்டுக்கு, தயாநிதி மாறன் கலக்கத்துடன் வந்தார். 'தாத்தா என்னைச் சிக்கவைக்கிறதுக்கு சி.பி.ஐ. முடிவு பண்ணிட்டாங்க தாத்தா...’ என்று கருணாநிதியின் கைகளைப் பற்றிக்கொண்டு, குலுங்கினார். 'என் மேல் வழக்குப் போட்டா... அது கட்சிக்குத்தானே அவமானம்? டி.வி. பிரசாரத்தின் மூலமா எவ்வளவு உழைச்சு இருக்கோம். சி.பி.ஐ. வழக்குப் போட்டால், டி.வி-க்குக்கூட சிக்கல் வரலாம்னு சொல்றாங்க தாத்தா’ என்று தயாநிதி மாறன் சொல்ல... 'அது உங்க டி.வி-ப்பா! அதுக்கும் கட்சிக்கும் என்னப்பா சம்பந்தம்?’ என்று கருணாநிதி திருப்பிக் கேட்டாராம். 'நீங்க சொன்னீங்கன்னா, இப்பவே ராஜினாமா பண்ணிடுறேன்’ என்று தயாநிதி சொல்ல... 'அது உன்னுடைய இஷ்டம்’ என்றாராம், ஒரே வரியில். அந்தக் கண்ணீர்க் காட்சி அப்போதைக்கு முடிந்தது...''

''ம்!''

''சி.பி.ஐ. தனக்கு வலை விரித்து இருப்பதை முழுமையாக உணர்ந்த தயாநிதி, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. 'முதல் அமைச்சராக இருந்துகொண்டே சி.பி.ஐ. விசாரணையில் நரேந்திர மோடி பங்கேற்றாரே?’ என்றுகூட தயாநிதி சார்பில் சமாதானம் சொல்லப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகம் இந்த கமென்ட்களை ரசிக்கவில்லை. தயாநிதியைக் குற்றம் சாட்டி சி.பி.ஐ. தரப்பு அறிக்கை கொடுத்ததுமே, தயாநிதியை ராஜினாமா செய்யச் சொல்லி​விட்டதாம் டெல்லி. வியாழக்​கிழமை மதியம் பிரத​மரைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு முன்னால் அதிகப்படியான குணச்சித்திரக் காட்சிகள் அரங்கேறியதாம்...''

''அதைச் சொல்லும்!''

''டெல்லித் தகவல் கிடைத்ததுமே, தயாநிதியைத் தொடர்புகொண்டு ராஜினாமா செய்யச் சொன்​னாராம் கருணாநிதி. ஆனால், தயாநிதியிடம் இருந்து பாசிட்டிவாக பதில் வரவில்லையாம். 'ஒரு மாதம் போகட்டும். நிலைமை மாறும். அப்போது பார்க்கலாம்’ என்ற தொனியில் பதில் சொன்னாராம். ஆனால், கருணாநிதி அதை ஏற்காமல் உடனே போனை கட் பண்ணிவிட்டதாகச் சொல்கிறார்கள். இது டி.ஆர்.பாலுவுக்குச் சொல்லப்பட்டது. அவர் தயாநிதியின் வீட்டுக்குச் சென்று, இதே விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் முன்பும் தயாநிதியை அவருடைய வீட்டில் போய்ச் சந்தித்து, கருணாநிதியின் முடிவை வலியுறுத்தினார் பாலு. அப்போதும் தயாநிதி சம்மதிக்கவில்லையாம். அதன் பிறகு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் வீட்டுக்குக் கிளம்பிப் போனார். அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது 10.30 மணி. உள்ளே போன அரை மணி நேரத்திலேயே, தயாநிதி வெளியே வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கே இருந்த அதிகாரிகள் அனுமதிக்கவில்லையாம். அந்த அளவுக்கு யார் பிரஷர் கொடுத்திருப்பார்கள் என்று யோசித்தபடியே வெளியே வந்த தயாநிதி மாறன், நேரே வீடு திரும்பினார். அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடியும் வரை காத்திருந்தவர், மதியம் 1.30 மணிக்கு பிரதமர் வீட்டுக்குச் சென்று, தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதாவது, தன் வீட்டுக்குப் போய் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்துதான் கடிதத்தோடு மீண்டும் வந்திருக்கிறார். பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபோதும்கூட 'ஒரு மாதம் டைம் கொடுங்கள்’ என்று கேட்டாராம். ஆனால், பிரதமர் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை.''

''அப்படியா?''

''தன்னை நெருக்கும் நிர்ப்பந்தங்களை உணர்ந்ததால், சில நாட்களுக்கு முன்பே தன்னுடைய உதவியாளர்கள் இருவரைத் திருப்பி அனுப்பிவிட்டார் தயாநிதி என்கிறார்கள். இந்த விவகாரத்தின் பின்னணியில் காங்கிரஸின் ரோல் இருக்கிறது. ஆனால், தாங்களாக நிர்ப்பந்தம் கொடுத்து வெளியேற்றியதாக இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் நினைத்தது. ஆ.ராசா ராஜினாமாவும் இப்படித்தான் அரங்கேறியது. சுப்ரீம் கோர்ட் முடிவில் தலையிட முடியாது என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, தயாநிதி மாறனை வெளியேற்றி இருக்கிறார்களாம்.''

''தயாநிதிக்குப் பதிலாக அமைச்சரவையில் யாராவது தி.மு.க. சார்பில் சேர்க்கப்படுவார்களா?''

''டி.ஆர்.பாலு ரொம்ப நப்பாசையுடன் இருக்கிறார். ஆனால், பதவி கிடைக்க ஸ்டாலின் விட மாட்டார் என்கிறது தி.மு.க. வட்டாரம். மேலும், ராசாவின் கோபம் எல்லாம் தயாநிதி மீது என்றால்... தயாநிதியின் கோபம் எல்லாம், பாலுவின் மீதுதான். ஒருவேளை, 'அவர்தான் அமைச்சர்’ என்று அறிவிப்பு வந்தால், அடுத்த இரண்டொரு நாட்களில் பாலுவைப்பற்றிய பழைய பஞ்சாங்கங்களை டெல்லி மீடியாக்களில் பந்திவைக்கவும் சிலர் தயாராகிவருகிறார்கள். 'பாலுவா? வேண்டாம்!’ என்று ஏற்கெனவே பிரதமரே அலறியதை நினைவூட்டுகிறார்கள். பழனி மாணிக்கத்தின் சிக்கலையும் சொல்கிறேன்...''

''அது என்ன?''

''அவரை மத்திய அமைச்சராக வைத்திருக்க, கருணாநிதியும் ஸ்டாலினும் விரும்பவில்லையாம். ஸ்டாலின் குடும்பத்துப் பிரமுகர் ஒருவருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி, சமீபத்தில் ஒரு சிக்கல் ஆனது. அது தொடர்பாக கோபாலபுரத்துக்கே வந்து விளக்கம் சொல்லிச் சென்றார் பழனி மாணிக்கம். 'இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படுவதே எனக்குத் தெரியாது’ என்றார் அவர். 'இப்படிப்பட்டவரை அமைச்சராக வைத்திருக்க வேண்டுமா?’ என்று ஸ்டாலின் சீறியதாக ஒரு தகவல் உண்டு. எனவே, 'அமைச்சரவை மாற்றம் வந்தால், பழனி மாணிக்கத்தை டிராப் பண்ணுங்கள்’ என்று தி.மு.க. மேலிடம் டெல்லிக்குச் சொன்னதாகச் சொல்கிறார்கள்.''

''அமைச்சரவையில் மாறுதல் இருப்பதுபோலத் தெரியவில்லையே?''

''மாற்றம் செய்யவே பிரதமர் நினைத்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால் சோனியாவுடன் செய்யப்பட்ட ஆலோசனைப்படி, மாற்றம் என்ற முடிவை ஒத்தி வைத்துள்ளார்!'' என்ற கழுகார்...

''கட்சிக்கு ஸ்டாலின்தான் தலைமை ஏற்கவேண்டும் என்று இளைஞர் அணி அமைப்பாளர் கூட்டத்தில் ஒருவர் சொன்னதாகவும்... 'இதைப் பொதுக் குழுவில் பேசுங்கள்’ என்று ஸ்டாலின் பதில் தந்ததாகவும் கருணாநிதிக்குத் தகவல். ஸ்டாலினை அழைத்துக் கோபப்பட்டாராம் கருணாநிதி!

வீரபாண்டி ஆறுமுகத்தின் கோபத்தை கடந்த முறை உமக்குச் சொன்னேன். பெங்களூரு சென்று கருணாநிதியின் மகள் செல்வியிடம் தனது எண்ணங்களைக் கொட்டச் சென்றுள்ளாராம் ஆறுமுகம். கட்சியில் கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

கசப்பைக் காட்டிய கம்யூனிஸ்ட்!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில் பேச வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், ''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மந்திரிசபை மாற்றப்பட்டு இருக்கிறது. மந்திரிசபை மாற்றம் தவிர, வேறு எதுவும் நடந்துவிடவில்லை'' என்று தனது ஆத்திரத்தைக் கொட்டினார். அப்போது மேடையில் இருந்த அ.தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா முகம் மாறியது. பல்வேறு பிரச்னைகளை அடுக்கிய பாண்டியன், ''நாம் சும்மா இருந்தால், எல்லோரும் துதிபாடிகள் என்று கிண்டல் அடிப்பார்கள்'' என்று சொல்லிவிட்டு, இன்னொரு நிகழ்ச்சிக்குக் கிளம்பிப் போனார். அதன்பிறகு அன்வர் ராஜா விலாவாரியாக பதில் சொன்னார்.

நேற்று... இன்று... நாளை..?

நேற்று... இன்று... நாளை..?

சி.பி.ஐ. ஸ்கேனரில் சிங்கப்பூர் திக்திக்!

ஸ்பெக்ட்ரம் பூதம் தயாநிதி மாற​னையும் கவ்விக் கொண்டது!

ஆ.ராசா, கனிமொழி இருவ​ருடன் இது முடிந்துவிடும்... என்று நினைத்து இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியின் எல்லைக்குத் தள்ளப்​பட்டுள்ளார். தயாநிதியின் பெயரை சி.பி.ஐ. தனது அறிக்கை​யில் தாக்கல் செய்ததுமே டெல்லி காங்கிரஸ் பிரமுகர் அடித்த கமென்ட், 'தி.மு.க-வின் கரன்சி ஆக்ஸிஜன் இதன் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது!’ என்பதுதான். அந்த அளவுக்கு, சென்னையையும் டெல்லியையும் அதிரவைத்துள்ளது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்​பட்டு, டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஆ.ராசா நீங்க​லாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், திகார் சிறையிலேயே இருக்கிறார்கள்.

ஜூன் 3-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி, ஜூலை 4-ம் தேதி மீண்டும் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ-யைப் பார்த்து நீதிபதி சைனி சீறினார் - ''குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தர வேண்டிய ஆவணங்களை இதுவரை ஏன் தரவில்லை? இனியும் தாமதம் செய்தால், சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!'' என்றதும், சி.பி.ஐ. தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.

ஆனால், மறு நாள் உச்ச நீதிமன்றத்தில் சிலிர்த்துக் கிளம்பியது சி.பி.ஐ. ''இந்த வழக்கு, இதுவரை கைதான 14 பேருடன் முடியப்போகும் சமாசாரம் அல்ல. இதோ வருகிறது அடுத்த அஸ்திரம்!'' என்று சி.பி.ஐ. வைத்த வெடிகுண்டுதான்... முதல்கட்டமாக தயாநிதி மாறனின் மந்திரி பதவிக்கு வேட்டுவைத்துள்ளது. ஆ.ராசா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த விவகாரங்களை மட்டும் அல்ல... அதற்கு முன்னால் தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தையும் சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்து உள்ளது.

தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தநேரத்தில் நடந்ததாக சில விஷயங்களை, மத்திய அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் முன்னால் அருண் ஷோரி வரிசையாக எடுத்து வைத்தார். அவர் அளித்த மனுவை அப்படியே சி.பி.ஐ-க்கு, விசாரணை அதிகாரியான நீதிபதி சிவராஜ் பாட்டீல் அனுப்பி​வைத்தார். உடனடியாக, சி.பி.ஐ. இதனை விசாரிக்க ஆரம்பித்தது. இதன் மையப் புள்ளியாக 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரனை, சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். இதுபற்றி, ஜூன் 8, 15, 16 தேதியிட்ட ஜூ.வி. இதழ்களில் தொடர்ந்து விவரங்கள் வெளியாகின.

இதுதொடர்பான குற்றச்சாட்டை 'பொது நல வழக்கு தொடர்பான சமூக சேவை அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தது. வக்கீல் பிரசாந்த் பூஷண் நடத்தி வரும் அமைப்பு இது.

சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும் என்று தெரிந்ததுமே, சிவசங்கரனை அதிகாரபூர்வமாக அழைத்து ஜூன் 6-ம் தேதி வாக்குமூலம் வாங்கியது சி.பி.ஐ. அவரது வாக்கு​மூலத்தை அடிப்படையாக வைத்துதான், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும்​தான், 2ஜி வழக்கை வைத்துக் கலக்கி வரும் நீதிபதிகள். இவர்களிடம் சி.பி.ஐ. சார்பில் மூடிய கவர் ஒன்றை சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால் கொடுத்தார். மொத்தம் 71 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையின் சாராம்சத்தை வேணுகோபால் சொல்லச் சொல்ல... அதிர்வலைகள் பலமாகின.

இந்த அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்ததாக சில விஷயங்களை அவர் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டார் வேணுகோபால். ''2004 - 2007 காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முயற்சித்தது. ஆனால், கிடைக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்திடம் தேவை இல்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. அவசியமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. ஏர்செல்லைப் போலவே வேறு இரண்டு நிறுவனங்களும் இதே போன்று விண்ணப்​பம் செய்திருந்தன. அந்த நிறுவனங்களிடம் இது மாதிரியான கெடுபிடிகள் காட்டப்படவில்லை. உடனடியாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது.

தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஏதோ ஒரு நிர்பந்தத்தை ஏர்செல் நிறுவனத்​துக்குக் கொடுத்திருக்கிறார் என்பது சி.பி.ஐ-யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளைத் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளார்கள். சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிவசங்கரன் தனது கம்பெனிப் பங்குகளை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதன் பிறகு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. இந்தப் பரிமாற்றத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பது குறித்துத்தான் சி.பி.ஐ. இப்போது விசாரித்து வருகிறது. பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரித்து வருகிறோம்!'' என்று சொன்னார் கே.கே. வேணுகோபால்.

அதாவது, இந்த விவகாரத்தில் இறங்கி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகளிடம் சொன்னார் வேணுகோபால். சிவசங்கரன் பற்றிக் குறிப்பிடும்போதும், 'திஸ் ஜென்டில்மேன்’ என்று மட்டும் சொன்னார். ''பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. தனது விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் இதற்கான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்று சந்தேகப்படுகிறோம். சிங்கப்பூரில் உள்ள அதன் அதிகாரியை ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து உள்ளோம். மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சன் டைரக்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்தக் கால கட்டங்களில் நடந்துள்ள டீலிங்குகளை வைத்து, என்ன நடந்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். அந்த அதிகாரி எங்கள் முன்பு ஆஜராகி விவரங்களை கூறியபிறகு எங்கள் விசாரணை வேகம் பிடிக்கும்!'' என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். 2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான லைசென்ஸ் முறைகேடுகள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிந்துவிடும்!'' என்று வக்கீல் கே.கே.வேணுகோபால் சொல்லியதை வைத்துப் பார்க்கும்போது, தயாநிதி மாறன் மீது முழுமையான குற்றப் பத்திரிகை செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் ஆகிவிடும் போலிருக்கிறது!'' என்கிறார்கள் டெல்லி நீதித் துறை வட்டாரங்களில்.

''ராசா அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை குறித்து அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. ராசாவின் சொத்துகள் மற்றும் பண முதலீடுகள் குறித்து வெளிநாட்டு வங்கிகளில் தகவல்கள் திரட்டுவது மட்டுமே பாக்கி. அது தொடர்பாக பல குளுகுளு தீவுகளுக்கெல்லாம் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்கி உள்ளோம். எங்களில் சில அதிகாரிகளும் நேரடியாகப் போய் அங்குள்ள முதலீடுகள் பற்றி தகவல்கள் சேர்த்துக் கொண்டு வந்துள்ளனர். அந்த வேலைகள் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முடியும். தயாநிதி மாறன் தொடர்பான விவரங்களுக்குள் இப்போதுதான் நுழைய ஆரம்பித்துள்ளோம். அதில் மேக்சிஸ் நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றையும் இனி மேல்தான் விசாரிக்க வேண்டி உள்ளது. தயாநிதி மாறனை முதல் கட்டமாக விசாரிப்போம். அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.

சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொல்லவில்லை. ''இந்த அறிக்கை பற்றிய விசாரணை வரும் 11-ம் தேதி நடக்கும்!'' என்று மட்டும் கூறினார்கள். இதனால், 11-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ''தயாநிதி மாறனை 11-ம் தேதிக்குள் விசாரிக்க வாய்ப்பு இல்லை. 13-ம் தேதி சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராக இருக்கிறார்கள். அவர்களது வாக்குமூலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டுதான், சி.பி.ஐ. தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும். அதே சமயம், நீதிபதிகள் 11-ம் தேதி என்ன உத்தரவிடுகிறார்கள் என்பதையும் வைத்தே சி.பி.ஐ. செயல்படும்...'' என்று டெல்லியில் ஒரு தரப்பினர் சொல்ல...

''அதற்கு முன்பேகூட சி.பி.ஐ. தன் செயல்பாட்டை தொடங்கிவிடும். அதைப் புரிந்துகொண்டுதான், பிரதமர் தரப்பிலிருந்து தயாநிதி மாறனின் மந்திரி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசினார்கள். 'ஆ.ராசா விஷயத்தில் நடந்ததுபோல் இதில் அடம் பிடிக்க வேண்டாம். ராஜினாமாவை ஒத்திப் போடுவது காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரு தரப்புகளுக்குமே மேலும் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்தே ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் ஒப்படைத்தார். மந்திரி பதவியிலிருந்து விலகிய பிறகுதான் ஆ.ராசா தொடர்பாக சி.பி.ஐ-யின் நேரடி நடவடிக்கைகள் தொடங்கின. அதுபோலவே இதிலும் ஆக்ஷன்கள் வேகம் பெறும்'' என்றும் கூறப்படுகிறது.''இந்த நிகழ்வுகள் சூடு பிடித்த சமயத்தில் டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பிரதமர் இனியும் சும்மா இருக்கக்கூடாது' என்ற பாணியில் உசுப்பிக் கொண்டே இருந்ததை சுட்டிக் காட்டும் சிலர்,

''மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகிய பிறகு தமிழக அரசு தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளை எடுப்பதே ஜெயலலிதாவின் நோக்கம்!'' என்றும் கூறத் தொடங்கியுள்ளனர்.''தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் சன் டைரக்ட்டில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்டில் முதலீடு செய்தபோது தயாநிதி அமைச்சராகவே இல்லை. இந்த நிறுவனங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை!'' என்று தயாநிதிமாறன் தரப்பு தனது விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளது.

ஜூலை 13க்குப் பிறகு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்!

Thursday, July 7, 2011

சன் டிவி வரலாறு

சன் டிவி வரலாறு
கொஞ்சம் அத்தியாவசிய அரசியல்.....

சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம்
சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகப் புரிந்து விட்டது. சன் தொலைக்காட்சிகுழுமத்தின் அசுரமான ஊடக பலம் கழகவளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்பது கனவானது. அது கட்சியை கபளிகரம் செய்யத்துடிக்கிறது என்பது நிருபணமாகிவிட்டது.
கருத்துகணிப்பு என்பதாக தினகரன் திணித்து வந்த கருத்தாக்கங்கள், தமிழ்நாட்டில் தயாநிதியை தனிப்பெரும் தலைமை சக்தியாக அடையாளப்படுத்த எடுக்கப்பட்ட சூட்சும திட்டங்கள் என்பது சுளீரென உரைத்தது கருணாநிதிக்கு!காலங் கடந்து இதை கண்டுணர்ந்தார் கருணாநிதி எனினும், 'தன் காலம் முடிந்து போகும் முன்பே சுதாரித்து கொண்டார்தலைவர்' என்பது தான் கழக உடன் பிறப்புகளிடம் மட்டுமல்ல குடும்ப உறவுகளிடமும் நிம்மதியை உருவாக்கியது.
தமிழ் நாட்டிலிருந்து மத்திய அமைச்சர் ஆனவர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என்ற கருத்துகணிப்பில் தயாநிதிக்கு 66 மதிப்பெண்ணும், ப.சிதம்பரத்திற்கு 24மதிப்பெண்ணும் , அன்புமணிக்கு 2மதிப்பெண்ணும் தந்து, கூட்டணிக்குள் குழப்பம் உண்டானாலும் பரவாயில்லை தம்பி தயாநிதியின் தகுதியை முன் நிறுத்த வேண்டும் என்று கலகத்திற்கு தயாரானார் கலாநிதி. தனக்குதானே கிரிடம் சூட்டிக்கொள்வது என்பது ரத்தவழியாக தாத்தா கருணாநிதியிடம் கண்டுணர்ந்த பால பாடம் அல்லவா? .ஆக, இன்னும் கூட புரிந்து கொள்ளதவர்களுக்கு இப்போதாவது உணர்த்த வேண்டாமா...? இன்னும் எத்தனை காலம் தான் அன்புப் பிள்ளை ஸ்டாலினை தூக்கி, கக்கத்தில் இருத்தி, 'இவன் தான் அடுத்தவாரிசு' என அறிவிக்க முடியாமல் அறிவுறுத்திக் கொண்டிருப்பார்.
அவரோ பாவம் முப்பது வருட பயிற்சிக்குப்பின் கருணாநிதியின் முழங்காலளவுக்குத்தான் வளர்ந்திருக்கிறார்.... ஆனால் மூன்றே ஆண்டுகளில் தயாநிதி கருணாநியின் கழுத்திற்குமேல் வளர்ந்து விட்டார். இந்தியாவே போற்றும்இளம் அமைச்சர் தமிழ்நாட்டிற்கு தலைமை தாங்கக் கூடாதா...? என்று 'கார்பரேட் தாதா' கலாநிதிபோட்ட அவசர கணக்கில் உருவான கருத்துகணிப்பு எல்லாவற்றையும் அலங்கோலமாக்கிவிட்டது.
கருணாநிதியின் வாரிசாக மு.க ஸ்டாலினுக்கு 70 சதவிகிதமும் மு.க அழகிரி, கனிமொழிக்கு தலா 2 சதவிகிதமும், மற்றவர்கள் என்பதாக 20சதவிகிதமும் வழங்கப்பட்டிருந்த கருத்துகணிப்பில் அந்த மற்றவர்கள் என்ற பெயரில் மறைந்து கொண்டிருப்பது தயாநிதிமாறன் என்பதை தயக்கமின்றி புரிந்துகொண்டார்கருணாநிதி.
இந்தப்பின்ணணியில் தான் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு பத்திரிகைகளை எரித்து, பஸ்களை உடைத்து செயல்படும் செய்தி காலை 9.30க்கே மணிக்கே கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபின்பும், காவல் துறைக்கு தலைமைதாங்கும் அமைச்சரான அவர், காவல் துறையினருக்கு நிலைமைகளை கட்டுப்படுத்தும் கட்டளைகளை பிறப்பிக்கவில்லை, பிறகு 11மணியளவில் தான் தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் மூச்சு திணறி இறந்தனர்.
கருணாநிதி உயிரோடு இருக்கும் போது அவரது அடுத்த வாரிசு குறித்த விவாதத்தை 'தினகரன்' மக்களிடம் நடத்தியது. அவரது நீண்ட ஆயுளை வேண்டி அவரது மனைவியும், துணைவியும் நித்தநித்தமும் பல பூஜை புனஸ்காரங்கள், யாகங்கள், வேள்விகள் நடத்தி கொண்டிருக்கும் சூழலில் குடும்பத்தினரிடம் கோப உணர்வே மேலோங்கியது.
இந்த சூழலில் தான் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு நர்த்தனமாடியதை அமைதியாக வேடிக்கை பார்த்தது காவல் துறை. மதுரையில் கலவரம் ஆரம்பித்தவுடன் முதல்வர் கருணாநிதி அழகிரியை தொடர்பு கொண்டு பேசினார் என்றும் பத்திரிக்கைகளில் செய்தி அடிப்பட்டது இதற்கு பிறகு தான் மீண்டும் தினகரன் அலுவலகத்திற்கு திரும்பிய தி.மு.க வினர் தீவைத்தனர். கலவரம் திசை மாறி போனது. ஆக காவல் துறையினரிடமும், அழகிரியிடமும் முதல்வர் தொடர்பு கொண்டபிறகே விபரிதங்கள் நடந்தேறின.
இதனால் தான் அவ்வளவு அத்துமீறல்களுக்குபிறகும் அவமானப்பட ஏதுமின்றி அழகிரியை சிறப்புபாதுகாப்புடன் சென்னைக்கு வரவழைத்ததும், முதல்நாள் பிரதமர் நிகழ்ச்சியில் பிரதானமாக முன் வரிசையில் அமரவைத்ததும், அடுத்த நாள் சட்டமன்றத்திற்குள்ளேயே, அழகிரி சகஜமாக வந்து சென்றதும், நடைப்பட்டுகொண்டிருப்பது சன், தினகரன் குழுமத்திற்கும், அழகிரிக்குமான பிரச்சினையல்ல. இது கட்சிதலைவரான கருணாநிதிக்கும், ஊடக செல்வாக்கில் ஓங்கிநிற்கும் சன், தினகரன் குடும்பத்திற்குமான பிரச்சினை என்பதே பிரதியட்ச உண்மையாக வெளிப்பட்டது.
கருணாநிதியின் கசப்புணர்வை புரிந்து கொள்ள வேண்டுமெனில் மாறன் குடும்பத்தின் பின்னணி, சன், தினகரன் குடும்பத்தின் அசுர பலத்திற்கு அச்சாணியாக விளங்கிய கருணாநிதியின் அரசியல் பலம் போன்றவைகளை பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நியாயங்களை புரிந்து கொள்ளலாம்.
*மணம் வீசாத பூமாலை*
1989-ஆம் ஆண்டு- 13வருட வனவாசத்திற்கு பிறகு மீண்டும் தி.மு.க அரியனை ஏறிய- அந்தகாலக்கட்டத்தில் தான் 'பூமாலை' என்ற வீடியோ இதழை விற்பனைக்கு கொண்டுவந்தனர் மாறன் சகோதரர்கள். இதற்கு முன்பு ஏக்நாத் என்பவரின் திரைபட செய்திகளை கூறும் வீடியோ இதழ் ஒன்று விற்பனையில் இருந்தது. பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களையே சம்பளமில்லாத செய்தியாளர்களாக, பேட்டியாளர்களாக பயன்படுத்திக்கொண்டனர் மாறன் சகோதரர்கள்.
வீடியோ கடைகள் மற்றும் நூலகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை. ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ நூலகத்தினர், 'வில்லங்கத்தில் மாட்டநேரிடும், ரெய்டு நடத்தி ஆபாச கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக் கூடும் ' என எச்சரிக்கப்பட்ட சம்பவங்களெல்லாம் நடந்தேறியது.
1991ல் கருணாநிதி அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மாறன் சகோதரர்கள் மௌனமானர்கள். மணம்வீசாத, யாரும் விரும்பிச்சூடாத இந்த பூமாலை பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக, மண்ணோடு மண்ணானது. காமாலைப்போல் கண்களை உறுத்திய - கலைநேர்த்தியற்ற- பூமாலை இதழ் உதிர்ந்தது கண்டு உள்ளப்படியே உள்ளம் மகிழ்ந்தனர் வீடியோ கடைக்காரர்கள்.அதன் பிறகு ஈராண்டுக்காலம் இருக்கும் இடம் தெரியாமல், செய்யக்கூடியத்தொழில் இன்னதென்று தெளிவில்லாமல் மாறன் சகோதரர்கள் சும்மயிருந்தனர்.
*சன் தொலைக்காட்சியின் தொடக்கம்*
அக்டோபர் 1992ல் ஜூ தொலைக்காட்சி (Zee Tv) இந்திய தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சிகளின் முன்னோடியாக களத்திற்கு வந்தது. அது முதல் மாறன் சகோதரர்கள் தாங்களும் அதுபோல் தனியார் தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டுமென தந்தையை நச்சரிக்க தொடங்கினர்.
பத்திரிக்கையாளர் சசிகுமார் மேனன் என்பவர்தான் முதன் முதலில் தனியார் சேட்டிலைட் சேனல் பற்றிய அறிமுகத்தை முரசொலிமாறனுக்கு சொன்னவர். அவர் அரபு நாடுகளில் வாழும் மலையாளிகளுக்காக தினசரி நான்கு மணி நேரம் நிகழ்ச்சி தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார் அதில் சுமார் அரை மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகளை தயாரித்து தாருங்கள்' என மாறன் சகோதரர்களை அணுகினார். அப்போது அவரிடம்,'எப்படி இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது' என தோண்டித்துருவி விசாரித்த முரசொலி மாறன் அவரிமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு, சசிகுமார் மேனனுக்கே தெரியாமல் அவரை முந்தி சென்று, சம்பந்தபட்டவர்களிடம் பேசி நேரடி வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார்.
சசிகுமார் மேனன் 'ஏசியானெட்' என்ற மலையாளச் சேனலை ஆரம்பித்த அதே நேரத்தில் தான் - ஏப்ரல் 1993ல் -சன் தொலைக்காட்சியை தமிழகத்தில் தோற்றுவித்தார் முரசொலி மாறன். அப்போது மாதமாதம் சேட்டிலைட் ஒளிப்பரப்பிற்காக செலுத்த வேண்டிய பணம் ஒரு பெரும் சுமையாக இருந்தது. எனவே மாறன் மாற்று வழிகளை ஆராய்ந்தார்.
'சன்' சேனலை நடத்த பெரும் பணம் தேவைப்பட்டநிலையில், அதற்காக இந்தியன் வங்கியை அணுகியபோது இணக்கமான பதில் கிடைக்கவில்லை இதனால் கட்சி சொத்தை -ஆயிரமாயிரம் உடன் பிறப்புகள் திரட்டி தந்த நிதியை- மந்தை வெளியிலுள்ள கும்பகோணம் சிட்டி யீனியன் வங்கியில் போட்டு, பெரியதொரு நிதி உதவி வங்கியிடமிருந்து வாங்கப்பட்டது .
1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும், அடுத்து வி.பி.சிங் ஆட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவுமிருந்த முரசொலிமாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித்தந்து நெருக்கமாக உறவுகொண்டிருந்தார். மேக்னம் டாட்டியா என்ற தொழிலதிபர் பல ரிசார்டுகளை நடத்திவந்தார். அவருக்கு உலகின் பெரும்செல்வந்தரான புருனே சுல்தான் ரஷ்ஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பான்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார். அதை எப்படி பயன் படுத்துவதென யோசித்து கொண்டிருந்த டாட்டியாவிடம், முரசொலிமாறன் தனக்கு தரும்படி கேட்க, அவரும் தந்துவிட்டார். இப்படியாக கிடைத்த சேட்டிலைட் ஒளிப்பரப்பு உதவியுடன் தான் மாறன் சகோதரர்கள் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பை சங்கடமின்றி சமாளித்தனர். முரசொலி வளாகத்தில் இயங்கிய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகளே சன் தொலைகாட்சிக்கும் பொறுப்பேற்றனர். அதன்படி சன் தொலைக்காட்சியை முரசொலிமாறனை சேர்மனாகவும், மல்லிகா மாறன் மற்றும் தயாளு அம்மாளை இயக்குநர்களாகவும் கொண்டு ஆரம்பித்தனர். மேலும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன், மு.க.ஸ்டாலின் போன்றோர் பங்குதாரர்களாகப்பட்டனர். அப்போது கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்திலேயே சன்தொலைகாட்சி செயல்பட்டது. குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிகையாளர்கள் சிலரையே கூடுதலாக 500 ரூபாய் சம்பளம் தந்து சன் தொலைக்காட்சிக்கு பணிபுரியும் படி கட்டாயப்படுத்தினர்.
*பிரகாசிக்கமுடியாத 'சன்*'
நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத- விளம்பரத்தாரர்கள் பொருட்ப்டுத்தாத- அந்த நேரம் தூர்தர்ஷன் மட்டுமே தூள்கிளப்பிக் கொண்டிருந்தது.மாறன் சகோதர்களுக்கு படைப்பற்றல் கிடையாது. நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வையாளர்களை கவரமுடியவில்லை எவ்வளவோ அனுகூலங்கள் அமைந்தும் முதலிரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி நஷ்டப்பட்டது சன் தொலைக்காட்சி.
*அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி*
மீண்டும் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்குவந்தார். உதயசூரியனின் அதிகாரச் சுடர் சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது. அப்போதைய தூர்தர்ஷன் இயக்குநராயிருந்த நடராஜன் கருணாநிதிக்கு உதவியாக பல கைங்கரியங்களைச் செய்து அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு ஆளாக்கினார். மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு மாறன் மகன்களுக்கு மதியூகியாகச் செயல்பட்டார்.
அப்போது ஒவ்வொரு பண்டிகை நாளிலும் தூர்தர்ஷன் ஒளிபரப்பில் சிக்கல் வரும். பார்வையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தொலைப்பேசி வழியாக பங்கேற்கும் பல பிரபலநிகழ்ச்சிகளின் போது தொலைப்பேசி வயர்கள் துண்டிக்கப்படும். இப்படியாக சன் தொலைக்காட்சி பக்கம் மக்களை திருப்ப பல சதிதிட்டங்கள் அரங்கேறின. தூர்தர்ஷன் விளம்பரதாரர்களுக்கு தூண்டில் விரிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரமும் பல அனுகூலங்களை தந்தது. மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையில் மாறனுக்கு தொழில், வர்த்தகத் துறை கிடைத்ததும் சன் தொலைக்காட்சிக்கு யோகம் அடித்தது. அப்பாவின் அதிகாரப் பலத்தால் மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தது. சன் தொலைக்காட்சிக்கு! மளமளவென்று வெவ்வெறு மொழிகளில் சேனல்களைத் துவங்கினர். 2000ஆவது ஆண்டில் தி.மு,க ஆட்சியிலிருக்கும் போது, 'சுமங்கலி கேபிள் விஷன்' என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதிமாறன் ஆரம்பித்தார். அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொர்க்கின் 60சதவிகித்தை 'ஹாத்வே' என்ற வட இந்திய நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. 40சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது. தயாநிதிமாறன் தடாலடியாக சென்னைகேபிள் ஆபரேட்டர்களை அழைத்து சொந்த முயற்சிகளை, ஒளிபரப்புகளை அப்படியே கைவிட்டு, சுமங்கலி கேபிள் விஷனின் கமிஷன் ஏஜென்டாகும் படி நிர்பந்தித்தார். மறுத்த கேபிள் ஆபரேட்ட்ர்கள் மிரட்டப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்த தொல்லைகள் அவர்களை மண்டியிடச் செய்தன மாறன் சகோதரர்களிடம்!
'ஹாத்வே'யின்கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப் பட்டன. இந்நிறுவனம் பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்துவிட்ட நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. மறுபுறம் தயாநிதி தந்த நெருக்கடிகளால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆபரேட்டர்களில் 90சதவிகிதத்தினர் எஸ்.சி.வி வசம் மாறினர்.
*இந்தியாவில் வேறெங்கும் இல்லை*
இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த நகரத்திலுமே இதுபோல் ஒட்டுமொத்த கேபிள் ஆபரேட்டர்களும் ஓரே குடையின் கீழ் சென்றதில்லை. குறைந்தது மூன்று,நான்கு நிறுவனங்களாவது ஒவ்வொரு நகரத்திலும் செயல்பட்டன. ஆனால் தனது அதிகாரபலத்தால் போட்டியாளர்களை அழித்தொழிக்கும் வேலையை அசராமல் செய்தது சன் குழுமம்.
தமிழகத்தின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இன்று எஸ்.சி.வியை எதிர்க்கவே ஆளில்லை . இதனால் தான் தமிழன் தொலைக்காட்சி, விண்தொலைக்காட்சி, தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள் தரக்குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்டு ஓரம்கட்டப்பட்டன. கேரளாவில் பிரபலமான 'ஏசியாநெட்' தொலைக்காட்சி தமிழில் 'பாரதி' தொலைக்காட்சியைத்தொடங்கி பற்பல தொல்லைக்களுக்காளாகி சன் குழுமத்தால் சவக்குழிக்குள் தள்ளப்பட்டது. இந்தியா டுடே குழுமத்திலிருந்து வெளிவரும் 'ஆஜ்தக்'சேனலை தமிழ்நாட்டிற்குள் ஒளிப்பரப்ப மறுத்துவந்தார் கலாநிதிமாறன். கருணாநிதி கைதான சம்பவத்தை மீண்டும் மீண்டும் வட இந்தியாவில் ஒளிப்பரப்பி மாறன் சகோதரர்களின் மனதில் இடம்பிடித்தது 'ஆஜ்தக்'. இதனால் உடனே 'ஆஜ்தக்' சேனல் தமிழ்நாட்டில் ஒளிப்பரப்ப ஒப்பந்தமானது . இதற்கு பிரதியுபகாரமாக இந்திய முதலமைச்சர்களின் நிர்வாகத்திறமை வரிசையில் ஜெயலலிதா ஆகக்கடைசியில் இருப்பதாக ஒவ்வொரு ஆண்டும் கருத்துகணிப்பு வெளியிட்டது இந்தியாடுடே.
இப்படியாக கேபிள் வலைப்பின்னல் மூலமாக தாங்கள் விரும்புவதை மட்டுமே- தங்கள் நலன் களுக்கு அனுகூலமானதை மட்டுமே-மக்கள் பார்வைக்கு கொண்டுச்செல்லும் சர்வாதிகாரம் மாறன் சகோதரர்கள் வசம்போனது. வியாபாரத்தில் கிடைத்த வெற்றி அரசியல் ஆசைக்கு அடித்தளமிட்டது. இந்த நிலையில் தான் தாத்தா கருணாநிதியிடம் முரசொலிமாறனுக்குப் பிறகான ஒரு அரசியல் முக்கியத்துவம் கருதி கலாநிதியும், தயாநிதியும் காய்நகர்த்தினார்கள். அரசியல் அதிகாரம் என்பது வியாபார எதிரிகளைவீழ்த்துவதற்கு எவ்வளவு உறுதுணையானது என்பதை அவர்கள் அனுபவ பூர்வமாக அறிந்திருந்தனர். அப்பாவின் அதிகாரபலத்தால் தானே முதலில் டிரான்ஸ்பாண்டரும், பிறகு மிக சுலபமாக வெளிநாடுகளிலிருந்து கருவிகளை இறக்குமதிச்செய்யும் TRAI லைசென்சும், இந்தியாவிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்கான WPC கிளியரன்ஸும் கிடைத்தது. ஆனால் ஜெ.ஜெ.தொலைக்காட்சியினர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுப்பட்டு முடியாமல் போய், வழக்கம்போல் அத்துமீறி செயல்படமுயன்ற போது அன்னியசெலவானி மோசடியில் அகப்பட்டு அடங்கிப்போனர்கள்.
கருணாநிதியின் உடன் பிறந்த அக்கா சண்முகசுந்தரத்தம்மாளின் மகன் தான் முரசொலி மாறன்.'1967ல் தி மு க சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர நேரிட்ட போது முதலமைச்சர்பொறுப்பு ஏற்கவேண்டி பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை அறிஞர்அண்ணா ராஜூனாமா செய்தபோது, அந்த சீட்டை அண்ணாவிடம் மன்றாடி மாறனுக்கு பெற்றதந்தவரல்லவா கலைஞர். அந்த கலைஞர் இன்று கழகத் தலைவர். மாறனுக்கு தந்த முக்கியத்துவத்தை மகனும் கேட்டுப்பெற்றால் என்ன?" என்று குடும்பத்தினர் தந்த தைரியத்தில் தயாநிதியும் தயாரானார்.
ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகள் தான் முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன். தயாநிதியின் மனைவி பிரியா, ஹிந்து ரமேஷ் ரங்கராஜனின் குடும்பத்திலிருந்து வந்தவர். ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு ஊனும், உயிரும் தந்து உழைத்த உடன் பிறப்புகள் ஆயிரமாயிரமாய் இருக்க, அவர்களிலும் அறிவிற்சிறந்த. அரசியல் அறிந்தவர்கள் பலர் இருக்க, H.F.O எனப்படும் இரவுநேர விடுதி நடத்தி கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனை அவரது குடும்பத்தினர் அரசியலுக்கு ஆயத்தப்படுத்தினர்.
*தயாநிதிக்கு தரப்பட்ட முக்கியத்துவங்கள்*
அரசியலில் அடிஎடுத்து வைத்தவுடனேயே தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தாரை வார்க்கப்பட்டது. முதன்முதலாக பாராளுமன்றத்தில் கால் பதிக்கும் போதே 'காபினெட்' அந்தஸ்த்து அமைச்சரானார் தயாநிதிமாறன். ஸ்டாலினை அரசியலில் முன்நிறுத்தும் போதெல்லாம் கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார் என்று வரிந்து கட்டிய ஊடகங்கள் தயாநிதியை முன்நிறுத்தியபோது பெரியளவு விமர்சனக்கணைகளை வீசவில்லை.
அதே சமயம் தொலைப்பேசியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் இந்தியா முழுவதிலும் பேசலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது, ரோமிங் கட்டணத்தை சமச்சீராக்கியது, ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் - குறிப்பாக தமிழ்நாட்டில் செய்யதூண்டியது, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டியது... போன்றவற்றால் படித்தவர்கள் மத்தியில் பிரபலமானார் தயாநிதி மாறன்.
திஹிந்துவும், தினமலரும், விகடன் குழும இதழ்களும் தயாநிதியை தாங்கிப்பிடித்து, தனிப்பெரும் திறமையாளராக அடையாப்படுத்தினர். மு.க.ஸ்டாலினைக்காட்டிலும் தயாநிதி மாறன் தமிழகத்திற்கு தலைமை தாங்க பொறுத்தமானவர் என்று மிக வெளிப்படையாக தினமலர் வாசகர் கடிதப்பகுதியில் விலாவாரியான கடிதங்கள் வெளியாகின.
*தயாநிதிமாறன் தனிபெரும் திறமையாளரா...?*
புதுப்புது அறிவிப்புகள் மூலம் நாளும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் தயாநிதி. ஆனால் அவரது செயல்பாடுகளால் BSNL எனப்படும் தொலைத்தொடர்பு துறை வளர்ந்ததா? பலன் பெற்றதா என பார்க்கவேண்டும் . 'தனியார் தொலைப்பேசிகள் புழக்த்திற்கு வந்து விட்ட பிறகு அதற்கு ஈடாக BSNLஐ வளர்ப்பதற்கு மாறாக வாட்டி வதக்கினார் தயாநிதி' என BSNLன் உயர் அதிகாரிகளும், ஊழியர்சங்கங்களும் பல முறை குற்றசாட்டியுள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் அத்துமீறல் மூலமாக BSNLக்கு சுமார் 7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியது. ஆனால் ரிலையன்ஸுக்கு ஆதரவாக இந்த விஷயத்தை தயாநிதி மூடிமறைக்க முயன்றார். இது போன்ற நடவடிக்கைகளால் இடது சாரி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தயாநிதி மாறனை எச்சரிக்கும் சூழலும் ஏற்பட்டது.
சர்வதேச நிறுவனங்கள் ஜி.எஸ்.எம் நெட்வொர்க் அமைப்பதற்கான சாதனங்களை வழங்குதல் மற்றம் ஜி.எஸ்.எம் இணைப்புகள் அமைப்பதற்காக வழக்கமான சந்தை மதிப்பைவிடவும் கூடுதல் தொகையை BSNL லாபம் பெற்று கொள்ளையடித்து வந்துள்ளனர் என இப்போது அம்பலமாகி யுள்ளது புதிய தகவல் தொழில் நுட்ப துறை அஅமைச்சராக வந்த ஆ.ராசா சமீபத்தில் இதை கண்டுபிடித்து ஒரு டெண்டரை நிறுத்தி வைத்ததன் மூலம் BSNL இழக்கவிருந்த ரூ 1, 800காடி காப்பாற்றப்பட்டது. ஆனால் இதற்கு முன் நிகழ்ந்த இழப்புகள் எவ்வளவோ?
மற்றொரு சிறிய புள்ளி விவரத்தை பார்ப்போம் BSNL வலுவான கூட்டமைப்பும், மிகப்பெரிய ஊழியர் பலமும் சுமார் 50000கோடிக்குமேல் கையிருப்புமுள்ள மிகப்பெரிய நிறுவனம் ஆனால் கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்புகளை தந்துள்ள நிலையில் BSNLவெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது இப்படிப்பட்ட திறமையுடன் துறையை நிர்வகித்த தயாநிதிமாறனின் பதவி பறிப்பின் போது சில ஊடகங்கள், "ஐயோ ஒரு நல்ல திறமை யாளரை இழந்துவிட்டோமோ....." என புலம்பி தீர்த்ததை நினைத்தால் வியப்பாக இருக்கிறது
*போட்டியாளர்களை பொசுக்குவேன்*
'தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் தான் வேண்டும்' என தாத்தாவிடம் வாதாடி பதவிப் பெற்ற தயாநிதிமாறன் செய்த அதிகார அத்துமீறல்கள் அளவற்றவை. தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் சேனல் ஆரம்பிக்க வேண்டி வந்த விண்ணப்பங்களை அலட்சியம் காட்டினார். TRAI லைசென்சும், W.P.C கிளியரன்சும் இல்லையென்றால் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாது. இவை இரண்டையும் அனுமதிக்கும் அதிகாரம் தம்பி தயாநிதியின் கையிலிருந்தது. அண்ணன் கலாநிதியின் கட்டளைப்படி காட்சி ஊடகங்கள் எதையும் கால் பதிக்க விடாமல் தடுத்தாண்டார் தயாநிதி.'மலர் தொலைக்காட்சி' என்பதாக தினமலர் குழுமத்திலிருந்து திட்டமிட்ட சேனல் முயற்சிகளுக்கு மூன்றாண்டுகள் முட்டுக்கட்டை. இதே நிலை ஜெ. தொலைக்காட்சியிலிருந்து திட்டமிட்ட 24மணிநேர நியூஸ் சேனலுக்கும் ஏற்ப்பட்டது. (ஜெயா தொலைக்காட்சி நீதி மன்றம் சென்று போராடியும், அரசியல் பலத்திலும் உரிமம் பெற்று விட்டது) 'தமிழ்த்திரை' தடம் தெரியாமல் மறைந்தது. 'லைசென்சை' புதுப்பிக்க காலதாமதமானதை காரணங்காட்டி 'ராஜ் ப்ளஸ்' சேனல் ஒளிப்பரப்பு ரத்துச்செயப்பட்டது. இப்படியாக சுமார் 60சேனல்களுக்கு அணைப்போட்டு தடுத்து அண்ணன் கலாநிதிக்கு அனுசரனையாக அதிகாரத்தை கையாண்டார் தயாநிதி.
ராஜ் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைக்காட்சியிலும் செய்திகள் ஒளிப்பரப்பு தடைசெய்யப்பட்டது விஜய் தொலைக்காட்சியில் 'மக்கள் யார் பக்கம்' என்ற பிரபல அரசியல் நிகழ்ச்சியை 'உடனே நிறுத்தாவிட்டால் விளைவுகள் விபரிதமாகும்' என தயாநிதியே தொலைபேசியில் மிரட்டி நிறுத்தினார். 'சன் தொலைக்காட்சி பார்வையாளர்களை திசை திருப்பும் எந்த ஒரு ஊடக செயல்பாட்டையும் சகித்து கொள்ளமுடியாது' என்பதே தயாநிதி அமைச்சகத்தின் எழுதப்படாத தாரக மந்திரமாயிருந்தது.
*கதிகலங்கிய கருணாநிதி*
இப்படியாக எவ்வளவு வில்லங்கங்கள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்தியபோதும் கருணாநிதி கண்டு கொண்டாரில்லை. உலகப்பெரும் பணக்காரரான பில்கேட்ஸை தமிழகம் அழைத்து வந்து கலாநிதி வீட்டில் விருந்துண்ண வைத்தார் தயாநிதி. ரிலையன்ஸ் குழுமத்துடன் நெருங்கிச் சென்று வியாபார பரிவர்தனைகளை விருப்பம் போல் ஏற்படுத்திக் கொண்டார். பரம்பரை பணக்காரான ரத்தன் டாட்டாவிடம் வியாபார உறவு வேண்டி நிர்பந்தித்த போது, ' இது வில்லங்க கூட்டம்' என அவர் விலகிச் சென்றார்.'விட்டேனா பார் உன்னை' என தயாநிதி தடாலடியாக ரத்தன் டாட்டாவை மிரட்டிய போது கூட, கருணநிதி, பேரனை அழைத்து கண்டித்ததாகச் செய்தி இல்லை.
கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை, மற்ற அமைச்சர்களை கடுகளவும் மதிக்காமல், தானடித்த மூப்பாக தயாநிதி டெல்லியில் வலம் வந்தபோதும் கருணாநிதி இதையெல்லாம் கவனித்தாக காட்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக திராவிடஇயக்கச் சித்தாந்தங்களுக்கு எதிரான, பழைமைவாத, மூடநம்ப்பிக்கையை பரப்பும் பத்தாம் பசலித்தனமான கருத்துகளை மீட்ருவாக்கம் செய்வதில் சன்தொலைகாட்சி சளைக்காமல் சாதனை புரிந்த போதும், கருணாநிதி வேதனை கொண்டாவராகக் தன்னை வெளிக்காட்டவில்லை. கூட்டணிகட்சிகளுக்கிகிடையே குளறுபடி உருவாக்கும் செய்திகளை பரப்பிய போதும் கருணாநிதி கோபப்பட்டு எழுந்தாரில்லை. ஆனால், 'தனக்கு பிறகு கட்சித் தலைமையைக் கைப்பற்ற கணக்கு போட்டுவிட்டனர்' என அறிய வந்த போது தான் கதிகலங்கிப் போனார். கட்சியையும், ஆட்சியையும் கபளிகரம் செய்யத்துடிப்பவர்களை வெட்டிவிடுவது தான் விவேகம் என வேகமாக முடிவெடுத்தார்.
*எப்போது முதல் இந்தப் பிளவு ?*
**
1993-ல் கட்சியின் சொத்தை வங்கி அடமானம் வைத்து பெரும் தொகை தந்து சன் குழுமத்திற்கு வித்திட்டவர் கருணாநிதி. இன்று சன் குழுமத்திற்கு14 தொலைகாட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 வானொலி நிலையங்கள், 2 ஜெட் விமானங்கள் சொந்தம். சன்தொலைகாட்சி பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக 2005 முதல் அறிவித்து கொண்டு களத்திற்கு வந்து விட்டதால் இன்று அதன் மொத்த ஷேர்கள், அவற்றின் மதிப்பு போன்றவற்றை கணக்கிட்டு இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதி மாறன் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதன் படி , சன் தொலைகாட்சியில் கலாநிதி மாறனின் 90சதவிகித பங்குகளின் மதிப்பு இன்றைய பங்குமார்க்கெட் நிலவரப்படி, கலாநிதியின் சொத்து மதிப்பு சுமார் 9,000கோடி..! அதாவது இது அதிகாரப்புர்வமான, சட்டப்படியான சன் தொலைகாட்சி மூலமான சொத்துமதிப்பு மட்டும் தான்!
இதை கணக்கிட்டுத்தான் இந்தியாவின் இருபதாவது பணக்காராக கலாநிதிமாறன் அறிவிக்கப்பட்டார். ஆனால் சன்குழுமம் தவிர்த்த 25 நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். ஜெமினி தொலைகாட்சி , உதயா தொலைகாட்சி, தினகரன்ன்ன் குழுமம், குங்குமம் உள்ளிட்ட பருவ இதழ்கள் , எப்.எம் வானொலி நிலையங்கள் கால் கேபிள்ஸ் , கால் கம்யூனிகேஷன்ஸ், DMS எண்டர் டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடேட், D.K. எண்டர் பிரைசஸ் போன்ற 25 நிறுவனங்களிலும் அவர் தான் மிகப் பிரதான பங்குதாரர்கவும், மனைவி, அம்மா மல்லிகா, தம்பி தயாநிதி... உள்ளிட்ட குடும்ப உறவுகளை சிறிய பங்கு தாரர்களாகவும் கொண்டு நடத்திவருகிறார்.இவை அனைத்தையும் கணக்கிலெடுத்தால் கலாநிதிமாறன் குறைந்த பட்சம் 40,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாகிறார்.
கலாநிதியின் எந்த ஒரு நிறுவனத்திலும் கருணாநிதியின் ரத்த உறவுகள் பங்குதாரர்களாக அனுமதிக்கப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. தனது சித்தப்பா முரசொலி செல்வத்திற்கும் அவருடைய மனைவியாகவுள்ளதால் செல்விக்கும் ஓரிரு நிறுவனங்களில் மிகச்சில பங்குகளை அனுமதித்துள்ளார். (ஆகவே தான் முரசொலி செல்வம் மாறன் சகோதரார்களை தீவிரமாக ஆதரிக்கிறார்)
ஆரம்பத்தில் சன்தொலைகாட்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பிரதான பங்குதாராக இருந்தார். மற்ற சிலரும் இருந்தனர். ஆனால் காலப்போக்கில் இவர்கள் எப்படி கழட்டி விடப்பட்டனர் என்ற சூட்சுமம் தெரியவில்லை. ஆனால் நவம்பர் 2005-ல் அதிகார பூர்வமாக தயாளு அம்மாள் தனது20சதவிகித பங்குகளை விட்டுக்கொடுத்து விட்டு விலகினார் என செய்தி வெளியானது. அதில் ஒரு பகுதியாக பத்துகோடியை தனக்கு தந்தார் என கூறிய கருணாநிதி, அதில் ஐந்துகோடியை தன் பெயரிலான அறக்கட்டளை அமைத்து தமிழறிஞர்களுக்கு உதவப்போவதாக அறிவித்தார். ஆனால் 20 சதவிகித பங்கின் மூலமாக மொத்தம் சிலநூறு கோடி ருபாய் தயாளு அம்மாளுக்கு தரப்பட்டிருக்க வேண்டும். தயாயாளு அம்மாள் தொடர்ந்திருந்தால் இன்றைய பங்குசந்தை நிலவரப்படி (ஒரு பங்கின் மதிப்பு ரூ 1400) அவர் பங்கிற்கு கிடைக்க வேண்டிய தொகை இருமடங்காகியிருக்கும். வேகமாக விஸ்வரூபமெடுத்து வளரும் நிறுவனத்திலிருந்த தனது பங்குகள் முழுவதையும் தயாளு அம்மாள் விருப்பப்பட்டு விலக்கி கொண்டாரா? அல்லது வெறுப்புற்று வெளியேற நிர்பந்திக்கப் பட்டாரா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால் சன் குழுமம் ஆக்டோபஸ் மிருகமாய் விஸ்தரித்துக கொண்டு போகும் தருவாயில் ஆணிவேராய் தங்களுக்கு ஆரம்பத்தில் உதவிய கருணாநிதியின் குடும்ப உறவுகளுக்கு எந்த பலனுமில்லாமல் பார்த்துக் கொண்டனர் மாறன் சகோதரர்கள்!
*தொடர்ந்து செய்த துரோகங்கள்*
ஆனால் மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனகசப்புகளை எந்த நிலையிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் விவேகமாகவும், பல நேரங்களில் பெருந்தன்மையாகவுமிருந்தார் கருணாநிதி.
தனது கலையுலக அனுபவங்களை தொடராக எழுத விரும்பினார் கருணாநிதி. அதை குங்குமம் இதழுக்கு சில ஆரம்ப அத்தியாயங்களை எழுதித்தந்தார். ஆனால் அதை பல மாதங்களாக பிரசுரிக்காமல் அலட்சியப் படுத்தினார் கலாநிதி. கலாநிதியின் கட்டளையால் தான் தனது கட்டுரைகள் பிரசுரமாகவில்லை. என்பதை அறிந்த கருணாநிதி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது விகடனில் வாராவாரம் வெளியாகி வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது.
பல நேரங்களில் கருணாநிதியின் முக்கிய அறிக்கைகள் போதுமான முக்கியத்துவமின்றி சுருக்கி சொல்லப்படுவது, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சிலவற்றை ஓளிபரப்பாதது, பேராசிரியர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் போன்றவர்களின் நிகழ்ச்சிகளையும்,அறிக்கைகளையும் கூடுமானவரை தவிர்த்தது, நாடறிந்த கவிஞரான கனிமொழி 'கருத்து' என்ற அமைப்பை தோற்றுவித்த போதும், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போதும் இயன்றவரை இருட்டடிப்பு செய்தது... போன்ற பல சம்பவங்கள் கருணாந்ிதியை பலமாக பாதித்த போதும் வெளிப்படையான மோதலை அவர் விரும்பவில்லை.கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டதால் மாலன், கலாநிதிமாறனால் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். கருணாநிதி சிபாரிசு செய்யும் யாரையும் சன் செய்தி பிரிவிலோ அல்லது வேறுபிரிவிலோ சேர்ப்பதில்லை என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாக கடைபிடித்தார் கலாநிதி .
*சன் டிவியின் சமூக சேவை*
பெரியார், அண்ணா கொள்கை வழி வந்த குடும்பத்தின் வாரிசுகளல்லவா... பகுத்தறிவு கருத்துகளை பரப்ப வேண்டாமா? அன்று அண்ணாவின் வேலைக்காரி, ரங்கோன்ராதா, கருணாநிதியின் பராசக்தி, மனோகரா, கலைவாணரின் கருத்தான நகைச்சுவைகள் போன்றவை சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை சவக்குழிக்குள் தள்ளுவதற்காகவே அவதார மெடுத்து 'சன் தொலைகாட்சி ' வேப்பிலைக்காரி, கோட்டை மாரியம்மன், விக்கிரமாதித்தன், சொர்க்கம்...... போன்ற தொடர்கள் மூலமாக 'சன்' சமூகத்திற்குத் தந்த விழிப்புணர்ச்சி கொஞ்சமா,நஞ்சமா?
ஜோசியதை மதிக்காதவங்க நாசாமப் போயிடுவாங்க...
சூனியவாதிங்க, மந்திரவாதிங்க கோபத்துக்கு ஆளானால் அதோகதிதான்!
சாமியார்கள் நினைத்தால் எந்த அதிசயத்தையும் சாத்தியப்படுத்தலாம்...
அடடா, எவ்வளவு மகத்தான கருத்துகள்.........
இவையெல்லாம் விஷத்தையே வெட்கப்படவைக்கும் வீரிய நச்சல்லவோ!
தமிழ் தெரியாதவர்கள் தான் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக இருக்கமுடியும் என்ற போக்குகள். இவை மட்டுமின்றி குடும்பங்களின் அமைதியைக்குலைக்கும் குரோதச் சிந்தனைகளின் குவியல்களாக எண்ணற்ற தொடர்கள், அவற்றில் விதவிதமாக வெளிப்படும் பாலியல் பிறழ்வுகள், பழிவாங்கும் போக்குகள், கொலை,கற்பழிப்பு,வன்முறை....
என்ன பாவம் செய்தார்களோ.... தமிழக மக்கள்!
சன் தொலைக்காட்சியோடு நிற்கவில்லை இவர்களின் சமூகசேவை. "எந்நேரமும் மக்கள் சினிமா பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவர்களின் சிந்தனை மழுங்கவேண்டும்" என்ற கருணை உணர்வில் 'கே' சேனல்,
'நாட்டின் வளர்ச்சிக்கு அடிபடையாக உள்ள இளம் தலை முறையினர் எப்போதும் இன்பம் எனும் சினிமா இசை வெள்ளத்தில் மூழ்கிச் சீரழிய வேண்டும்' என்ற சீரிய முயற்சியில் 'சன் மியூசிக் சேனல்' , 'தங்கள் அரசியலுக்கு உகந்த செய்தியை மட்டுமே மக்கள் எப்போதும் அறிந்து கொள்ள வேண்டும்' என்ற பெருந்தன்மையோடு 'சன் நியூஸ் சேனல்',
இப்போது குழந்தைகளையும் குட்டிச்சுவராக்கிவிட 'சுட்டி சேனல்' இவற்றை பார்க்காவிட்டால் மக்களின் பகுத்தறிவு மங்கிவிடும்' என்று தான் இலவச தொலைக்காட்சியை அறிவித்தாரோ..... என்னவோ கருணாநிதி.
*யாருக்கு யாரால் நன்மை :*
1996 தொடங்கி ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் தி.மு.க வின் வெற்றிக்கு சன் தொலைகாட்சியின் பலம் பிரதானமாகக் கருதப்பட்டது. பெருவாரியான பார்வையாளர்களை தன் வசம் வென்றெடுத்திருந்த சன் குழுமத்தின் செய்திகள், நேர்காணல்கள், விவாதங்கள், கருத்துகணிப்புகள் போன்றவை தி.மு.கவின் வெற்றிக்கு கணிசமான பங்காற்றியது.
கருணாநிதி 100 கூட்டங்களில் பேசினாலும் ஏற்படுத்தமுடியாத தாக்கத்தை சன் தொலைகாட்சியின் பத்து நிமிட ஒளிபரப்பு ஏற்படுத்துகிறது.... அவரது காலடி தடம் படமுடியாத குக்கிராமங்களுக்கெல்லாம் தங்கள் சேனல் தான் அவரது கருத்துகளை கொண்டு சேர்க்கிறது... என்றும், சன் குழுமத்தின் பிரச்சார பலமில்லாமல் தி.மு.க வால் தேர்தலை எதிர்கொள்வது இயலாததென்றும் மாறன் சகோதரர்கள் மனக்கணக்கு போட்டனர். ஆக, எப்படியாயினும் தங்களை அனுசரித்து போவதை தவிர கருணாநிதிக்கு வேறுவழியில்லை என்றமுடிவுக்கு வந்தனர்.
அதுவும் சமீபத்திய தேர்தல்களில் போட்டியிட்ட குறிப்பிடத்தக்க வேட்பாளர்களுக்கு சன் குழுமத்திலிருந்து நிறைய பண உதவியும் தரப்பட்டுள்ளது. திமு.க தலைமை கஞ்சத்தனமானது என்ற பெயரை மாற்றி தராளமாக கட்சிக் கரார்களுக்கு பணம் தந்தனர் மாறன் சகோதரர்கள். திமு.க தலைமையகத்தை 'கார்ப்பரேட்' அலுவலகமாக ஆக்கியதுபோல் மாவட்ட கட்சி அலுவலகங்களையும் மாற்ற திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். பிரச்சாரம் செய்ய கருணாநிதிக்கு சொசுகு கார் தந்ததுபோல் மாவட்ட செயலாளர்களுக்கும் கார்கள் தரவும் அவர்களுக்கு அந்த அந்த மாவட்டத்து கேபிள்நெட் வோர்க் தொழில் வாய்ப்பை தரவும் திட்டமிட்டனர் மாறன் சகோதரர்கள். இந்த சூழலில் தான் கருணாநிதியின் அடுத்த வாரிசு பற்றிய கருத்துகணிப்பை நடத்தியது தினகரன் நாளிதழ். 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா...' என கருணாநிதி உசாரானார்.
*தயாநிதியின் தணியாத பேராசை*
மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியை தங்கள் வியாபார விஸ்தரிப்பிற்கும், பாதுக்காப்பிற்கும் போட்டியாளர்களை பொசுக்குவதற்கும் தயாநிதி தயங்காமல் பயன்படுத்தினார். அதே சமயம் மிகப்பெரும் தொழில் அதிபர்களிடம்-அவர்களது நிறுவனங்களில்- அண்ணன் கலாநிதியையும் பங்குதாராக சேர்க்கும் படி பகிங்கமாகக் கேட்டார்.
ஏர்டெல் நிறுவனத்திலிருந்து 500 செல்போன்களை இலவசமாக சன் குழுமத்திற்கு பெற்றுத்தந்தார். ஸடார், விஜய், ராஜ் தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகள். அதற்கான கட்டணங்களை எஸ்.சி.வி. வாடிக்கையாளர்களிடம் வசூலித்த போதும் மேற்படி நிறுவனங்களுக்குத் தருவதில்லை. எஸ்.சி.வி.யே விருப்பப்பட்டு எப்போதாகிலும் கொடுத்தால் தான் உண்டு. அமைச்சரின் கோபத்திற்கு ஆளாவது தொழிலுக்கே ஆபத்து என அவர்களும் அடங்கிப் போனார்கள்.
மன்னராட்சி மனோபாவம் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. கருணாநிதியின் அடுத்த தகுதியான வாரிசாக தயாநிதி இருக்க , அதற்கு தடைக்கற்களாக ஸ்டாலினும், அழகிரியும், கனிமொழியும் இருப்பது தங்கள் லட்சியத்திற்கு இடையூராகக் கருதினார்கள்.
ஓரணியில் ஒன்றாக இருக்கும் ஸ்டாலினையும், அழகிரியையும் பிரிப்பது, இருவரையும் ஒருவருக்கொருவர் எதிரியாய் மாற்றுவது, கருத்துக்கணிப்பின் விளைவாய் அழகிரி ஆதரவாளர்கள் செய்யும் அராஜகங்களை அடிப்படையாக வைத்து அவரது அரசியல் செல்வாக்கை அழிப்பது...... போன்றவையே மாறன் சகோதரர்களின் திட்டம்.
மதுரை மாவட்டத்தில் எஸ்.சி.வியின் ஏகபோகத்தை தடுத்து, சிறுகேபிள் ஆபரேட்டர்களின் தொழிலுக்கு அரணாக அழகிரி செயல்படுவதும் மாறன் சகோதரர்களின் மட்டற்ற கோபத்திற்கு மற்றொரு காரணமாயிருந்தது.
மதுரை தினகரன் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் உயிர் பலியான பிறகு அழகிரியை சட்டத்திற்கு மீறிய அதிகாரமையமாய் செயல்படுகிறார் என்று மீண்டும், மீண்டும் ஒலமிட்ட சன் தொலைக்காட்சியும், தினகரனும், இத்தனை ஆண்டுகளில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக அழகிரி செயல்ப்பட்டு வந்த போது அதை ஒருநாளும் சுட்டிக் காட்டியதில்லை என்பது கவனத்திற்குரியதாகும்.
அரசியலில் லாபமும், நஷ்டமும் சகஜமே ஆனால் கருணாநிதி தயவால் லாபத்தை மட்டுமே அனுபவித்து வந்த மாறன் சகோதரர்கள், நஷ்டத்தை கண்டு கதிகலங்கி குமுறி தீர்த்தனர். "அழகிரியை சிறைக்குள்தள்ளாமல் நாங்கள் ஓயப்போவதில்லை....." என மார்த்தட்டினார்கள்.அழகிரி ஆதரவாளர்கள் செய்தது அக்கிரமாக இருக்கலாம் ஆனால் அதை எதிர்த்து தர்மாவேஷம் கொள்வற்கு மாறன் சகோதரர்களுக்கு தார்மீக தகுதி இல்லாமல் போய்விட்டது.
தன்னால் உருவாக்கப்பட்டவர்கள் தன்னை கடந்து சென்று தன் மகன் அழகிரியை அழித்தொழிக்க நினைப்பதை தனது ஆளுமைக்கு விடப்பட்ட அறை கூவலாகத்தான் கருணாநிதி எதிர்க்கொண்டார். பொது மக்கள் மத்தியிலேயே பட்டப்பகலில் பகிங்கரமாக தனது கட்சிக்காரர்களால் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு கொளுத்தப்பட்டதையும், அதில் அப்பாவிகள் மூவர் உயிரிழிந்த அவலத்தையும், அதை தடுக்கத்தவறி காவல் துறையினர் செயலற்று வேடிக்கை பார்ததால் தன் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரையும் சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்ட தன் மூலம் சீர்படுத்தி விட்டதாக மக்களை நம்ப வைக்க முயற்சித்தார். அவர் அழகிரியை அரவணைப்பதால் அழகிரியின் அராஜகங்களை அங்கிகரித் துள்ளதாக மக்கள் கருதினார்கள். துரோகம் செய்தவர்களைத் தூக்கி எறியவேண்டும் என்ற கோப உணர்ச்சி தான் அவரிடம் மேலோங்கி நின்றது.தன்னை தவிர தாங்கிப்பிடிக்க ஆளில்லாத தயாநிதிமாறனை அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற அவருக்கு சிறிதளவும் சிரமம் ஏற்படவில்லை. கட்சியின் அனைத்து மட்டத்தினரிடையேயும் மாறன் சகோதரர்கள் குறித்த மனக்கசப்பு மண்டிக்கிடந்தது. அது அவர்களை, கருணாநிதியே கைவிட்டபின்பு பொது குழுவில் பொங்கி பிரவகித்தது. மாறன் சகோதரர்களின் வளர்ச்சி கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என தி.மு.க திட்டவட்டமாக தீர்மானித்தது. மாறன் சகோதரர்களின், பேராசை பெருநஷ்டத்தில் முடிந்தது.
*கலாநிதியின் கணக்கற்ற தில்லுமுல்லுகள் *
ஜெமினி தொலைக்காட்சியில் ரவிபிரசாத், மனோகர்பிரசாத் என்ற சகோதரர்கள் பங்கு தாரர்கள். இவர்கள் இருவரும் இந்தியன் வங்கியில் ரூ700கோடி கடன் பெற்று இன்று வரை வட்டி உட்பட கட்டவில்லை. இதை இந்தியன் வங்கி தமிழ் தினசரியில் விளம்பரமாகவே வெளியிட்டது. ஜெமினியில் கலாநிதி மாறனின் பங்கு


சதவிகிதமாகும். ஜெமினி நல்ல லாபகரமாகவே தொழில் செய்து பணம் ஈட்டுகிறது.இன்று வரை பிரசாத் சகோதரர்கள் இதன் இயக்குநர்களாகதான் இருக்கிறார்கள். மாறன் சகோதரர்களின் அதிகார செல்வாக்கின் முன்பு சட்டம் தன் கைகளை கட்டிக் கொண்டு விட்டது. இதே ஜெமினியில் மற்றொரு பங்குதாரராக சேர்ந்து பெரும் பணத்தை முதலீடு செய்து, கடுமையாகப் பாடுபட்டு சேனலை தூக்கி நிறுத்திய சரத் என்ற கலாநிதியின் நண்பர் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பங்குசந்தையில் சன் குழுமத்தை முக்கியப்படுத்துவதற்காக, உண்மைக்கு மாறான தகவல்களையும், கணக்குகளையும் கலாநிதி காண்பித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் SEBI அமைப்பையும், மக்களையும் முட்டாளாக்கி சன் குழுமத்தின் சந்தை மதிப்பை பிரம்மாண்டமாக உயர்த்திக்கொண்டார்.1993ல் தொடங்கிய சன் குழுமத்தை 1985லிருந்து செயல்படுவதுபோல் அவரால் எப்படிதான் கணக்கு காட்ட முடிந்ததோ..... தெரியவில்லை. சன் குழுமத்தின் கேபிள் ஆபரேஷன் கணக்குகளில் இது வரை பாதிக்கும் குறைவான வாடிக்கையாளர் கணக்கே வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி வருமானவரி ஏய்ப்பு செய்து வருகின்றனர்.
புதிதாக வரும் திரைப்படங்கள் சன் தொலைக்காட்சிக்குதான் விற்க்கப்படவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். இந்த நிர்பந்தங்களுக்கு உடன் படாதா திரைப்படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சன் தொலைக்காட்சியின் 'டாப் 10 மூவிஸ்' திரை விமர்சனத்தில் கடைசி எண் தந்து கண்டபடி தாக்கி விடுகின்றனர்..! போதாகுறைக்கு தினகரன், குங்குமம் இதழ்களும் குதறி தீர்த்து விடுகின்றன சம்மந்தப்பட்ட திரைப்படத்தை ! இந்த ஊடகப் பலத்தை கண்டு மிரலும் தயாரிப்பாளர்கள் சன் குழுமத்திடம் சரணாகதியாகிவிடுகின்றனர்.
போட்கிளப்பில் 36கிரவுண்ட் பரப்பளவில் கலாநிதி மாறனின் 25,000சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பங்களா உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல் அமெரிக்கா மற்றும் லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட பைபர் மற்றும் விலை உயர்ந்த மரப்பொருட்களைக் கொண்டு அழகூட்டப்பட்டு சொர்க்கபுரியிலிருக்கும் சொகுசு மாளிகைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் வாடினாலும் இந்த பஙுகளாவில் உள்ள நீச்சல் குளத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும். இந்த ஆடம்பர பங்களாவை விவரிக்க ஆரம்பிப்பது பக்கங்களை வீணாக்கிவிடும் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன். ஆனால் ஒரு காலத்தில் காமராஜர் வாழ்ந்த திருமலை பிள்ளை சாலை இல்லத்தை புகைப்படமெடுத்து, 'ஏழைபங்காளன் வாழும் பங்களா பார்த்தீர்களா....? என்று ஏளனம் செய்தவர்களின் நினைப்பு ஏனோ வந்து தொலைகிறது.
சுமார் 40,000கோடிக்கு அதிபதியான கலாநிதி மாறன் தன் தந்தை முரசொலி மாறனின் மருத்துவ செலவுக்காக மத்திய அரசு செலவிட்ட ரூபாய் 40கோடியை இன்று வரை திருப்பிதர மனமில்லாதவராய் இருக்கிறார்.
*வாரிசுபோட்டி வந்தது எதனால்?*
அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு ஜனநாயக இயக்கமாக தொடங்கி நடத்தினார். அவர் தனிப்பெரும் தலைவராக அறியபட்டநிலையிலும் என்.வி.நடராஜன், இரா.நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன் போன்றவற்கு சம மதிப்பளித்து அவர்களை அடுத்து தலைதாங்க தக்கவருகளாக ஆயத்தப் படுத்தினார். கருணாநிதியின் திறமைகளையும், ஆற்றல்களையும் அறிந்த அண்ணா அவர் உட்பட எவரையுமே தன தலைமைக்கு ஆபத்தான தம்பியாக கருதவில்லை.
எம்.ஜி.ஆரின் செல்வாக்கு தனக்கு ஆபத்தாகி விடுமோ என அவரை புறக்கணித்தார் கருணாநிதி. கட்சி இரண்டானது.கருணாநிதியின் தலைமையை ஏற்றுக்கொண்டபிறகும் நாவலர் நெடுஞ்செழியனை நல்ல முறையில் நடத்தவில்லை அதனால் அவரும் 1977ல் வெளியேறினார். வைகோவின் வளர்ச்சி தன் வாரிசுகளுக்கு ஆபத்துஎன்று அவரையும் அகற்றினார். இப்படி கருணாநியின் குடும்ப உறவுகள் கட்சியில் கோலோச்சமுடியும் என்ற நிலை ஏற்பட்டதால் தான் தயாநிதி மாறன் போன்றவர்கள் தான்தோன்றிதனமாக உயர் நிலைக்கு வரமுடிந்தது. கொள்கை அடிப்படையில் ஒரு இயக்கம் செயல் பட்டால் அங்கே குடும்ப ஆதிக்கம் வராது. அதுவே கொள்ளை அடிப்படையில் செயல் பட்டால் உடைமை உணர்வும், உறவுமனப்போக்கும் மேலோங்கி விடுகின்றது.
இப்போது கலைஞர் தொலைக்காட்சி ஆகஸட் 15லிருந்து ஒளிப்பரப்பாகும் என கருணாநிதி அறிவித்துள்ளார். சுமார் 60 சேனல்கள் மூன்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நிலையில், கருணாநிதி நினைத்தவுடன் ஒரு தொலைக்காட்சியை தொடங்க முடிகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கேபிள் டி.வி.நெட்வொர்க்கை தமிழக ஆரசு பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் என்று அவசரச் சட்டம் கொண்டுவந்தபோது அதை அடுத்த நாளே கவர்னரை சந்தித்து ஒப்புதல் அளிக்கவேண்டாம் என்று கேட்டவர் கருணாநிதி. அது எவ்வளவு பெரிய தவறு என இன்று அவர் உணர்ந்திருக்ககூடும். ஒரு வேளை அதே சட்டத்தை கருணாநிதியே இப்போது அமல் படுத்த முனைந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.
மேலைநாடுகளில், அமெரிக்கா, ஐரோப்பாவில், ஒரே குடும்பத்திலுள்ளவர்கள் அரசியல், ஊடகம் இரண்டிலும் மேலாதிக்கம் செய்வதை தடுக்கும் சட்டம் ஒன்று உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் ஊடகத்துறையில் தனியொரு நிறுவனமே ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கபளிகரம் செய்வது மாதிரியான போக்குகளுக்கு தடை ஏற்படுத்தும் சட்டங்கள் உள்ளன. குறிப்பாக ஒரேநிறுவனம், ஒரேபிரதேசத்தில் பல சேனல்களை ஆரம்பிப்பது, காட்சி ஊடகம், அச்சு ஊடகம், வானொலி போன்ற அனைத்திலுமே ஒரே குடும்ப நிறுவனம் தனி மேலாதிக்கம் (Monopoliy) செய்வதை தடுப்பது மாதிரியான சட்டங்கள் 1980,1990களிலிருந்து அமலில் உள்ளது. இது போன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டி சில ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு எல்லா தரப்பிலும் வலுவான ஆதரவு வெளிப்படவேண்டும்.