Friday, June 24, 2011

பழசு இன்றும் புதுசு

னிமையான தாளகதியுடன் பஜனையும் 'சாயிராம்... சாயி​ராம்’ என்ற கோஷமும் சூழ... புன்முறுவல் தவழ வலம் வந்துகொண்டு இருந்த பக்தர்கள் முகத்தில் இப்போது பரபரப்பு - பீதி!
'இதுவரை போலீஸே நுழைந்தது இல்லை என்று சொல்லலாம். அதற்கு, அவசியமும் இருந்தது இல்லை...’ என்ற பெருமைக்கு எதிராக, இப்போது திரும்பிய பக்கம் எல்லாம் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்.
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் சாயிபாபா இருக்கும் புட்ட​பர்த்தி, இப்போது அடியோடு தன் அமைதியை இழந்து, பதற்றத்தில் தவிக்கிறது.
''பஜனை தாளம் கேட்டுக்கொண்டு இருந்த இடத்தில் துப்பாக்கிச் சத்தமா?! சுவாமியின் (சாயிபாபா) நெருங்கிய உதவியாளர்​கள்கூடப் புகுந்து பார்த்திராத அறைக்குள், கொலைகாரப் பாவிகள் புகுந்துவிட்டார்களே...'' என்று ஆவேசத்​துடன் புலம்புகிறார்கள் பக்தர்கள்.
கொலை முயற்சி சம்பவம் நடந்த இரண்டாம் நாள் நாம் புட்டபர்த்திக்குச் சென்று, நடந்த சம்பவங்களைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம்.
பரபரப்பு ஏதும் இன்றி இருக்கும் புட்டபர்த்தியில்... ஜூன் 6-ம் தேதி இரவு சுமார் 10.30 மணி... திடீரென்று நான்கு பேர் வந்து சாயிபாபா தங்கி இருக்கும் பிரசாந்தி மந்திரின் கதவைத் தட்டித் திறக்கச் சொல்லி இருக்கிறார்கள். நால்வரும் அங்கேயே தங்கி இருக்கும் சாயிபாபாவின் பக்தர்கள். ஒருவன், எம்.காம். படிக்கும் மாணவன். மற்றவர்கள், சில வருடங்களுக்கு முன்பு இங்கு படித்தவர்கள். ஆனால், இப்போது ஆசிரமத்துக்கு உள்ளேயே தங்கி இருப்பதால், வாசலில் இருந்த பாதுகாவலர்களுக்கு நன்றாகத் தெரியும்.
''என்ன... இந்த 'நேரத்தில் வந்திருக்​கிறீர்கள்..? காலையில் வந்து சாமியைப் பாருங்கள்...'' என்று சொன்னார் பாபாவின் சமையல்காரர் விஷ்ணுபட். அவர்களோ, ''உடனே பார்க்க வேண்டும்!'' என்று வாக்குவாதம் செய்தார்கள். உள்ளே ஹாலில் இருந்த பாபாவின் டிரைவரும், பாபாவின் நம்பிக்கைக்கு உரியவருமான ராதாகிருஷ்ண சுவாமி கதவுக்கு அருகில் வந்தார்.
''நாங்கள் பாபாவை அவசரமாகப் பார்க்க வேண்டும். டெல்லியில் உள்ள சந்திராசாமியிடம் இருந்து தந்தி வந்திருக்​கிறது. அதைப்பற்றி பாபாவிடம் பேச வேண்டும்'' என்று நால்வரும் சொல்ல... ''எதுவாக இருந்தாலும், இந்த நேரத்தில் வெளியில் வர மாட்டார். ஆதலால், நாளை காலை வந்து பேசுங்கள்!'' என்றார் ராதாகிருஷ்ணன். வாக்குவாதம் முற்றியது. சமையல்காரர் விஷ்ணுபட்டையும், ராதா​கிருஷ்ணனையும் தள்ளிவிட்டு உள்ளே போக அவர்கள் முயற்சிக்க...
கூச்சல், குழப்பம் கேட்டு, வராந்தாவில் படுத்திருந்த மாணவர்கள் சுனில்குமார் மகாஜன் மற்றும் அனில் பட் இருவரும் வந்தார்கள். முரட்டுத்தனமாக நுழைய முயன்ற நான்கு பேரையும் இந்த நால்வர் சேர்ந்து தடுத்திருக்கிறார்கள். கண நேரம்தான். அவர்கள் துளிகூடத் தயங்காமல் கத்திகளை உருவி, தடுக்க வந்த மாணவர்களையும், சமையல்காரர் விஷ்ணுபட்டையும் சரமாரியாகக் குத்தினார்கள். ரத்த வெள்ளத்தில் இருவர் சுருண்டு விழ... கொலையாளிகள் உடனடியாக உள்ளே புகுந்து பாபாவின் அறைக்குச் செல்லும் முக்கியக் கதவின் தாழ்ப்பாளை உள்புறம் போட்டுக்கொண்டு மின்சார மெயின் சுவிட்சை அணைத்துவிட்டனர்.
அதற்குள் உள்ளே அடுப்படியில் இருந்த மற்றொரு சமையல்காரர், இருட்டில் தடவியபடி வந்து தாழ்ப்பாளைத் திறந்துகொண்டு வெளியில் ஓடினார். ஹாலின் உள்ளே சுவாமியின் டிரைவர் ராதாகிருஷ்ணன் மட்டும் இருந்தார். அவர், வந்தவர்கள் மாடிக்குச் செல்வதை விடப்பிடியாகத் தடுத்தார். அவரையும் நால்வரும் சரமாரியாகக் குத்த... ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் ராதாகிருஷ்ணன்.
மாடியில் மெயின் ஹாலுக்கு அவர்கள் செல்லவும், ஹாலின் மறுகோடியில் உள்ள தனது அறைக் கதவை பாபா திறந்து பார்க்கவும் சரியாக இருந்தது. நால்வரும் கையில் கத்தியுடன் கையைப் பின்னால் கட்டியபடி நிற்பதைக் கண்டதும், கோபம் தெறிக்க ''கெட் அவுட்'' என்று சொன்னபடியே கதவைத் தாழிட்டுக்கொண்டாராம்!
இது நடந்துகொண்டு இருந்தபோதே, ஒரு மாணவர் பின்பக்கமாகச் சென்று, ''நான்கு பேர் கைகளில் கத்தியுடன் வந்திருக்கிறார்கள். பாபாவின் அறையை நோக்கிச் செல்கிறார்கள்!'' என்று கூச்சல் போட்டார். இதற்கிடையே, சாயிபாபா தனது அறையில் இருந்து பின் பக்கக் கதவு வழியாக வெளியில் வந்து அதை வெளிப்பக்கம் தாழிட்டு இறங்கி வந்துவிட்டு இருக்கிறார். சரியான சமயத்தில் அபாயச் சங்கும் ஒலித்தது.
அந்த ஒலியைக் கேட்ட பக்தர்கள் திகைத்து, ஏதோ விபரீதம் என்று உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்தனர். அந்தப் பக்கம் ரோட்டில் சென்ற ஒரு போலீஸ்காரரும் விபரீதத்தைப் புரிந்துகொண்டு, உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சில போலீஸாரை உதவிக்கு அழைத்துக்கொண்டு விரைந்தார்.
சில நொடிகளில் விஷயம் தீ போல ஆசிரமம் மற்றும் புட்டபர்த்தி கிராமம் எல்லாம் பரவியது. கொஞ்ச நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து பிரசாந்தி மந்திரை முற்றுகையிட்டனர்!
கொலையாளிகள் நால்வரும் இதற்குள் சாயி​பாபாவின் தனி அறைக் கதவை உதைத்துத் திறந்து உள்ளே சென்றுவிட்டார்கள். அங்கு பாபா இல்லாதது கண்டு திகைத்தவர்கள்... திரும்பி ஓட நினைப்பதற்குள், கை மீறிவிட்டது. ஆத்திரக் கூச்சலுடன் அந்தக் கட்டடத்தைக் கடலெனப் பக்தர்கள் சூழ்ந்தனர். அவர்கள் கையில் சிக்கினால், உடம்பில் துளியும் மிஞ்சாது என்பதைப் புரிந்துகொண்ட கொலைகாரர்கள் பீதியுடன் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டு உள்ளேயே இருந்தார்கள்.
அதற்குள் புக்கபட்டினம், சொத்தசெருவு ஆகிய காவல் நிலையங்களில் இருந்தும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொலையாளிகளைச் சரணடையச் சொல்லி வெகு நேரம் கேட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஒன்றும் பலன் இல்லை. ''பின்பு அந்தக் கதவின் ஒரு பலகையை உடைத்துக்கொண்டு உள்ளே போக முயற்சித்தோம். எங்களையும் தாக்க கொலையாளிகள் முயற்சித்தார்கள். வெகு நேரம் போராடிய பின்பே அவர்களைச் சுட்டுக் கொன்று வீழ்த்தினோம்!'' என்கிறார்கள் போலீஸார்.
இவ்வளவு விபரீதங்களும் அன்று அந்தக் கட்டடத்தின் வலது பகுதியில் நடந்துகொண்டு இருந்தும், சாயிபாபா அதே கட்டடத்தில் இடது பகுதியில் உள்ள ஓர் அறையில் சென்று அமைதியாகத் தங்கிவிட்டார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் கொலைகாரர்​களால் தாக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் மற்றும் மாணவர் சுனில்குமார் மகாஜன் இறந்து​விட்டனர். மாணவர் அனில் பட் மற்றும் சமையல்காரர் விஷ்ணுபட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீஸாரால் சுடப்பட்ட கொலையாளிகள் நால்வரும் அப்போதே இறந்துவிட்டனர்.
இரவு சுமார் 1 மணி வரை இவ்வளவு பரபரப்புகள் அங்கே நடந்தாலும், அடுத்த நாள் காலையில் தனது பக்தர்கள் முன்னிலையில் துளியும் பரபரப்பின்றி வந்து, தரிசனம் தந்தார் சாயிபாபா. பக்தர்களுடன் நெருங்கி நின்று நடமாடினார். ஆனால், இந்த சம்பவத்துக்கு அடுத்த நாளில் இருந்து சாயிபாபா தனது இருப்பிடத்தைத் தற்காலிகமாக பூர்ணசந்திர ஹாலில் உள்ள அறைக்கு மாற்றிக்கொண்டார்.
போலீஸ் உடனடியாகச் செயல்படத் துவங்கியது. சுரேஷ்குமார், சாய்குமார், சாந்தாராம் பிரபு, ஜகந்நாதன் ஆகியோர்தான் பாபாவைக் கொல்ல வந்த நால்வர். (இவர்களைப்பற்றி பெட்டிச் செய்திகளில்!)
பிரசாந்தி மந்திரில் உள்ள பாபாவின் சொந்த அறைக்கு அருகிலேயே வெள்ளை பிளாஸ்டிக் பாட்டிலில் சுமார் 500 கிராம் எடை உள்ள சயனைடு  இருந்தது. அதன் மேல் 'இது மேற்கு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது’ எனப் பொறிக்கப்பட்டு உள்ளது. ஒரு லேடீஸ் ஹேண்ட்பேக்கில் அந்த பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. தவிர, கொலைகாரர்கள் கொண்டுவந்த கிளவுஸ், வெளிநாட்டு ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்தது என்கிறார்கள் போலீஸார்.
இப்போது இந்த வழக்கு விசாரணை ஆந்திர சி.ஐ.டி. போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இன்டெலிஜென்ஸ் டி.ஐ.ஜி-யான ராமச்சந்திரா, எஸ்.பி-யான கிருஷ்ணமராஜு மற்றும் இரண்டு டி.எஸ்.பி-க்கள் சாயிபாபாவை சந்தித்து இந்தச் சம்பவத்தைப்பற்றிக் கேட்டபோது...
''எனக்கு யாரும் எதிரிகள் இல்லை. டிரைவர் ராதாகிருஷ்ணன் என்னிடம் நெருங்கி இருப்பது பிடிக்காமல், அவரைத் தாக்கிக் கொலை செய்ய சதிகாரர்கள் திட்டம் தீட்டி இருக்கலாம். என்னைக் கொலை செய்ய நிச்சயம் அவர்கள் வரவில்லை. அவர்கள் என் பக்தர்கள். எனக்கு யாராலும் ஆபத்து இல்லை. இந்த சம்பவத்துக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எனது பக்தர்களுக்குள் வந்த பதவிப் பிரச்னைதான் இதற்குக் காரணம். நீங்கள் இதில் புதிய உள்நோக்கம் கற்பித்துப் பெரிதுபடுத்த வேண்டாம்!'' என்று சாயிபாபா சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் ஜூன் 6-ம் தேதி இரவு நடந்தும், அடுத்த நாள் மதியம் வரை இதைப்பற்றி எந்தப் பத்திரிகைக்கும், எந்தப் பத்திரிகையாளர்களுக்கும் செய்தி சொல்லாமல் போலீஸ் மறைத்ததன் மர்மம் என்ன? இந்த தாமதம் போலீஸே எடுத்த முடிவா? அல்லது உயர் இடத்தில் இருந்து வந்த உத்தரவா என்று தெரியவில்லை!
ஒட்டுமொத்தமாக இந்த விஷயத்தில் நாம் சந்தித்த அனைவருடைய ஆதங்கமும் இதுதான் -
''ஏராளமான யூகங்கள் இந்த விஷயத்தில் இருந்தாலும், அதை எல்லாம் மிஞ்சிய உண்மை என்று ஒன்று இருக்குமே... சதிகாரர்கள் நால்வரையுமே துளியும் யோசிக்காமல் சுட்டுக் கொன்றதன் மூலம் அந்த உண்மை வெளிவருவதற்கான கொஞ்சநஞ்ச வாய்ப்பும் போய்விட்டதே!''
- வி.யுவராஜ்
சதிகாரர்கள் - ஒரு சிறு குறிப்பு!
சாயிபாபாவைக் கொலை செய்ய முயற்சித்தவர்களில், சாய்குமார், சத்திய சாயிபாபா இன்ஸ்டிட்​யூட்டில் எம்.காம். படித்து வந்தவர்.
சுரேஷ்குமார், மலேசியாவைச் சேர்ந்தவர். இவர் இந்தியக் குடிமகனாகி இங்கேயே தங்கி உள்ளார். இவர் சத்திய சாயிபாபா நிறுவனத்தில் முதுநிலைப் படிப்பு முடித்தவர். இவர் 1986-ம் ஆண்டில் இருந்து இங்கேயே இருக்கிறார். இவருடைய தாயார் சாவித்ரியும் சாயிபாபாவின் தீவிர பக்தை. இவரும் தன் மகனுடன் ஆசிரமத்துக்குள்ளேயே தங்கி இருந்தார்.
பெங்களூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஜகந்நாதன். பெற்றோர் பெங்களூரில் இருக்கிறார்கள். இவரும் சத்திய சாயிபாபா நிறுவனத்தில் படித்து முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவர் இப்போது சத்திய சாயிபாபா நிறுவனத்துக்குத் தேவையான அச்சு மற்றும் எழுது பொருட்கள் சப்ளை செய்து வந்தார். சாந்தாராம் பிரபு என்பவர் மெரைன் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்தவர். இவருடைய அம்மா அண்மையில் இறந்த பிறகு, புட்டபர்த்தி வந்து இங்கேயே தங்கிவிட்டார். சத்திய சாயி நிறுவனத்துக்கு சொந்தமான கால்நடைக் காப்பகமான - கோகுலத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்று அதைச் செயல்படுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment