Thursday, June 30, 2011

வ்வளவு அடித்தாலும் தாங்கும் ரொம்ப நல்லவர்களாக மக்கள் இருப்பதால், எரிபொருள் விலையை உயர்த்தும்போது எல்லாம், மத்திய அரசு கவலைப்படுவதே இல்லை. போராட்டம் நடத்தி கோஷம் போட்டுவிட்டு, மக்களும் எதிர்க் கட்சிகளும் தானாகவே ஓய்ந்துவிடுவார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறது டெல்லி. மாநில அரசுகளின் கடமையோ - ஒரு கண்டன அறிக்கையோடு முடிந்துபோகிறது!

இந்த விலை உயர்வின் 'பட்டாம்பூச்சி விளைவு’ மணலில் தொடங்கி மைசூர் போண்டா வரை எதிரொலிப்பதால்... அடி வயிற்றில் குத்து வாங்கித் துடிப்பது பெரும்பாலும் அடித்தட்டு மக்கள்தான்!
மரபுசாரா எரிசக்தி, மாற்று எரிபொருளுக்கான ஆய்வு என்று தொலைநோக்குச் சிந்தனைகொண்ட அறிஞர்களின் முயற்சிகளுக்கு அரசாங்கம் தருவது சம்பிரதாய மரியாதை மட்டுமே. சர்க்காரின் சட்டங்களும் திட்டங்களும் மாற்று எரிசக்தியின் உற்பத்தி - உபயோகம் நோக்கி மக்களை ஈர்ப்பதாகவும் இல்லை.
குடும்பங்களில் ஆளுக்கொரு வாகனம் என்று பெருகிப்போனதற்குக் காரணமே, இந்த அவசர யுகத்துக்கு ஏற்ப பொது உபயோகப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் மாநில அரசுகள் உரிய அக்கறை காட்டாமல் இருப்பதுதான். அரசாங்கப் போக்குவரத்துச் சாதனங்கள் தரமாகவும், துரிதமாகவும், முழுமை யாகவும் இருந்துவிட்டால், சாலைகளை அடைத்துச் செல்லும் படகு கார் பயணி களும்கூட, பஸ்ஸிலும் ரயிலிலும் பயணிக்கத் தாமாக முன்வருவார்கள்!
அப்படி ஒரு நிலையை அரசாங்கம் சாதித்துவிட்டால், சாலைகளில் நெரிசல் ஏது? கக்கும் புகையில் சிக்கி நிற்கும் காத்திருப்பு ஏது? நகராமல் உறுமும் வாகனங்களில் இருந்து வீணாக எரிபொருள் ஆவியாகும் அவலமும்தான் ஏது?
தமிழகத்தையே எடுத்துக்கொண்டால்... அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்   சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இதே திட்டம் அன்றாடப் பயணிகளின் அவதிக்கு வெற்றிகரமான தீர்வாக மாறியதை அனுபவபூர்வமாகப் பார்த்த பிறகும், எதற்காக இங்கே அரசியல் குழப்படி விளையாட்டு?
இருட்டைச் சபித்தே காலத்தைக் கழிக்காமல், மெழுகுவத்தி ஏற்றிக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்?!

No comments:

Post a Comment