Sunday, June 19, 2011

2010 டாப் 10 மனிதர்கள்!

  நேர்மை ஐ.ஏ.எஸ்.,

ரும்பு மனிதன்! அதிகார அரசியலுக்கு வளைந்துகொடுக்கும் நாணல்களே அரசு அதிகாரிகள் என்பதைப் பொய்ப்பித்த உறுதி உமாசங்கரின் அடையாளம். 'நான் நன்றாகப் படித்து இருந்தால், ஐ.ஏ.எஸ்., ஆகி, அமைச்ச ரின் கார் கதவைத் திறந்துவிட்டுக்கொண்டு இருந்திருப்பேன்!’ என்று ஓர் அமைச்சர் திருவாய் மலர்ந்த அதே சமயத்தில், முரண்டு பிடித்த தமிழக முதல் அமைச்சரைத் தன் வழிக்குக் கொண்டுவந்த 'சாமான்ய’ ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அ.தி.மு.க-வின் 91-96 ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கொட்டகை ஊழலுக்குச் சிதை மூட்டியது உமாசங்கரின் முதல் ஹிட். தொடர்ந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி தான் பிறந்த திருவாரூரைப் புதிய மாவட்டமாக அறிவித்தபோது, இவரைத்தான் அங்கு ஆட்சியராக அமர்த்தினார். அடுத்த அ.தி.மு.க ஐந்தாண்டு ஆட்சிக் காலம் முழுக்க சேலத்தில் அமைதி வாசம். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எல்காட், கேபிள் டி.வி. கார்ப்பரேஷன், சிறுசேமிப்புத் துறை போன்ற பந்தாட்டங்களைத் தொடர்ந்து, உமாசங்கரைத் தற்காலிகமாகப் பணிநீக்கியது தமிழக அரசு. 'வளைந்து கொடுக்காதது, இஷ்டத்துக்கு இயங்காதது’ போன்றவை காரணங்களாக உலவின. உமாசங்கருக்கு ஆதரவாக சென்னை முதல் நெல்லை வரை ஆர்பாட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று ஆதர வுக் குரல்கள் அரசின் கழுத்தை நெரித்தன. 'தேர்தல் நேரம்’ என்று தயங்கினார்களோ, 'நேர்மையாளன்’ என்று உணர்ந்தார்களோ உமாசங்கருக்கு மீண்டும் பதவி தரப்பட்டது.  சாதித்துக் காட்டினார் உமாசங்கர்!

தமிழ்த் தம்பி!
மிழகத் 'தம்பி’! 'பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம்  அறிமுகமான  கட்டபொம்மன்.  தமிழ்த் திரைப் பிரமுகர்கள் ராமேஸ்வரம் கடல் எல்லையில்  நின்று  ஈழத்  தமிழர்களுக்கு  ஆதரவு தெரிவிக்கும்  போராட்டம்  நடத்தினார்கள்.  அங்கு உணர்ச்சிப்பிழம்பாக வெடித்தவர்களுள் சீமானுக்கு முதலிடம். அந்தப் பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டி, இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைவித்ததாக இயக்குநர் அமீருடன் கைதானார். அடுத்து  நடந்த  நாடாளுமன்றத்  தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப் பிரசாரம் செய்து, பெருந் தலைகளைக் காலி செய்ததில், சீமானுக்கு முக்கியப் பங்கு உண்டு. 'நாம் தமிழர் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். 'என்  தமிழ்  மீனவனை  அடித்தால்,  இங்கு இருக்கும்சிங்கள  மாணவனை  நான் அடிப்பேன்’ என்ற சீமானின் உணர்ச்சிக்கு மீண்டும் பாய்ந்தது தேசியப்  பாதுகாப்புச் சட்டம். மீண்டும் மீண்டார். ஆங்கிலக் கலப்பற்ற தமிழ் பேசி, அரசியல் ஆர்வம்  உள்ள  தமிழ் இளைஞர்களை  அரவணைத்து, மேடைப் பேச்சில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, சீற்றமாகச் செயல்படும் சீமானுக்கு எதிர்கால அரசியலில் நிச்சயம் ஓர் இடம் உண்டு!

        களப் போராளி!
த்திப்பூ அரசியல்வாதி! பொதுத் தொகுதியான குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற லதா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். சி.பி.எம் கட்சியின் பீடித் தொழிலாளர்கள் சங்கப் பொறுப்புகளில் இருந்தவரை சட்டமன்றத்தில் அமரவைத்தது, சளைக்காத... மலைக்காத மக்கள் பணி. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம், காங்கியனூர் திரௌபதி அம்மன் கோயிலில் தீண்டாமைக்கு எதிராக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த முற்பட்டார் லதா. மூன்று கிலோ மீட்டருக்கு முன்பே தடுத்து நிறுத்திய போலீஸ், பூட்ஸ் காலால் அவரது வயிற்றில் உதைத்தது. கர்ப்பப்பையில் சிதைவு ஏற்பட்டு, உதிரப்போக்கால் மயங்கிச் சரிந்தவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மீட்டார்கள். இன்னமும் அதன் பாதிப்பு இருக்கிறது. சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் எஃப்.ஐ.ஆரே பதிவு செய்தது 'கண்ணிய’க் காவல் துறை. குடியாத்தத்தில் ஜோதி நகர் என்ற இடத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 36 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வந்தது. ஆளும் கட்சிக்கு ஆதரவான ரியல் எஸ்டேட் குரூப் ஒன்று, அந்தக் குடும்பங்களை அடித்துத் துரத்தி, குடிசைகளை அப்புறப்படுத்தி இடத்தை ஆக்கிரமித்தது. நடுரோட்டுக்குத் தள்ளப்பட்ட 36 குடும்பங்களுக்கும் ஆதரவாகப் போராட்டத்தில் குதித்தார் லதா. வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார். அதே பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட போலீஸ் அதிகாரியால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். எளியவர்களுக்காக வலியக் குரல் எழுப்பி வரும் லதா, அவர்களின் நலன்களுக்காகத் தன் உடலில் காயங்களைச் சுமக்கிறார்!

மந்திரன்கள்!
ந்திய சினிமாவின் சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டரான 'எந்திரன்’ படைத்த பிரம்மாக்கள்! 'ஏ, பி, சி’ என்று தமிழகத்துக்குள் ஏரியா பிரித்துப் பேசிக்கொண்டு இருந்த தமிழ் சினிமாவுக்கு, உலகம் முழுக்க வர்த்தகக் கம்பளம் விரித்தான் 'எந்திரன்’. 'மிரட்டல் மேக்கிங்கில் இந்தி சினிமாக்கள்தான் இந்திய சினிமாவின் அத்தாரிட்டி’ என்ற நிலைக்கு 'டாட்’ வைத்தார் இயக்குநர் ஷங்கர். ஆக்ஷன் ஹீரோ ஃபார்முலா துறந்து, எந்திரனின் மூன்று வேடங்களுக்கும் வித்தியாசம் நிரப்பி முத்திரை பதித்தது ரஜினியின் சின்சியாரிட்டி. 'உசிலம்பட்டி முதல் நியூயார்க் சிட்டி’ வரை 'எந்திரன்’ எதிர்பார்ப்பை எகிறவைத்து, பாக்ஸ் ஆபீஸ் பெட்டிகளை நிரப்பியது கலாநிதி மாறனின் வணிகம். இந்தியா முழுக்க அலையடித்தது 'எந்திரன்’ ஜுரம். உலகத்துக்குப் பந்திவைத்து, கல்லா கட்டிய சாமர்த்தியத்தில் இந்த மூவரும், த்ரீ ஸ்டார் முன்னோடிகள்!

       ஜோர்யா!
2010-ன் 'சிங்கிள் சிங்கம்’! ரசிகர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் என சினிமாவின் அத்தனைப் பிரிவு மனிதர்களின் 'மோஸ்ட் வான்டட்’ செல்லம். தணியாத தாகம், தாளாத வேகம் எனத் தன் முயற்சியில் சினிமா கற்று உயரம் தொட்டவர். சத்தம் இல்லாமல் ரஜினி, கமல் வியாபாரத்தை அடுத்து உலா வந்தவர். யாருக்கும் பிடிபடாத படங்களின் தேர்வு சூர்யா வுக்கு அமைந்தது, இன்னும் யாருக்கும் பிடி படாத சூட்சுமம். சிங்கமாகவும் கூச்சலோடு மிரட்டுகிறார், கிளாஸிக் காதலனாகவும் கனி கிறார். எல்லாம் வருகிறது சூர்யாவுக்கு. சீனியர்களின் மேஜிக், ஜூனியர்களின் சின்சியாரிட்டி என சூர்யா தன்னைத்தானே செதுக்கிக் காட்டியதுதான் வெற்றி வழிச் சாலை. 'நம்பர் ஒன்’ இடத்தைத் துரத்த ஆரம்பித்தவருக்கு, காலம் பரிசளித்தது இந்தத் தனி இடம், தன்னம்பிக்கைத் தடம்!

     'பேட்’ பாய்!
20/20 துறவி! இந்திய கிரிக்கெட்டின் போஸ்டர் பாய் முரளி விஜய். 20/20 கிரிக்கெட் டில் புயல் வேகம், டெஸ்ட் கிரிக்கெட்டில் நிழல் அடக்கம் என முரளியின் இந்த வருட பெர்ஃபார்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியில் இடத்தைத் தக்கவைத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட்டில் சச்சினுடனான 308 ரன்கள் பார்ட்னர்ஷிப்பின்போது முரளி விஜய் குவித்தது 139 ரன்கள். ஆஸ்திரேலியா விடம் இருந்து வெற்றியைப் பறித்த இரும்பு இன்னிங்ஸ் அது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 'ஐ.பி.எல் சீஸன் - 3’, 'சாம்பியன் லீக் 2010’ ஆகிய இரண்டு போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வெல்ல அடித்தளம் அமைத்தது முரளி விஜய்யின் ஓப்பனிங் அதிரடி. கிரிக்கெட் டுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விஜய், 17 வயதில்தான் முறையாகக் கிரிக்கெட் பயிற்சியே எடுக்க ஆரம்பித்தார். 2011 ஐ.பி.எல் போட்டி களுக்கு என டிராவிட், அனில் கும்ப்ளே, கௌதம் காம்பீர், சௌரவ் கங்குலி ஆகிய முக்கிய வீரர்களே ஏலத்துக்கு வந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்திருக்கும் டோனி உள்ளிட்ட நான்கு பேரில் முரளி விஜய்யும் ஒருவர். அணிக்குள் முரளிக்கு செல்லப் பெயர் 'மாங்க்’ (துறவி)!


          அனல் மலர்!
திர்ப்பு நெருப்பு! தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு பாடல் எழுத வந்த இரண்டாவது பெண் பாடலாசிரியர் தாமரை. பாடல் வரிகள் சொற் குப்பைகளாலும் ஆபாச வார்த்தைகளாலும் அழுக்குப் பட்டுக் கிடந்தபோது, கவித்துவத்தின் அடர்த்தியால் அழகியல் கூட்டி அர்த்தம் சேர்த்த மலர். 'அழகிய அசுரா’, 'கலாபக் காதலா’ எனப் புதிய சொற் சேர்க்கைகள் மூலம், தமிழ் மீதான காதலை அதிகப் படுத்தியவர். 'எமக்குத் தொழில் பாடல் எழுதுவது!’ என்று ஒதுங்கி ஒடுங்காமல், சில அரசியல் பிடிவாதங்களைப் பின்பற்றிப் பாடல்கள் எழுதும் கொள்கைப் பெண். ஆங்கில வார்த்தைகள் கலவாத பாடல்கள் மட்டுமே தாமரை இதழ்களில். பாடலாசிரியர், கவிதை என்கிற களங்களைத் தாண்டி அநீதிக்கு எதிராக உரத்த குரல் எழுப்பும் படைப்பாளியாகத் தாமரையின் அடையாளம் தனித்துவம் அடைந்தது இந்த வருடம். இலங்கை இனப் படுகொலைக்கு எதிரான போராட்டங் களை, போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் உண்ணாவிரதங்களை எடுத்து நடத்தியதில் முன்னுக்கு நின்ற முக்கியப் படைப்பாளி. தமிழ் வழிக் கல்வி, பெண்ணியம், தேசிய இனப் பிரச்னைகள், சாதி ஒழிப்பு என சுற்றிச் சுழலும் தாமரையின் பேனா, அரசு அதிகாரங்களுக்கு ஆதரவாகத் தலை குனியாதது தமிழர்களின் தன்மான ஆறுதல். ஈழப் போராட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியின் துரோகம் தொடங்கி, இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான எதிர்ப்புகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது வரை, இடைவிடாது இயங்கும் எதிர்ப்பின் இருப்பு. 'கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்’ தாமரையின் தணல் வரிகளுக்கு ஒரு துளி நெருப்புப் பதம்!

            உடைப்பாளி!
னல் ஆளுமை! 'தீண்டாமை ஒரு பாவச் செயல்’, 'தீண்டாமை ஒரு பெருங் குற்றம்’, 'தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்’ என்ற பாடப் புத்தக வரிகளுக்கு யதார்த்த செயல் வடிவம் கொடுத்த சிவப்புச் சிந்தனைக்காரர் சம்பத். 2007-ல் தீண்டாமை ஒழிப்புமுன்னணி யின் மாநிலத் தலைவர் ஆனார். இரண்டு ஆண்டுகளில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் தெருக்களில் இறங்கிப் போராடியதும், போராட்டத்தின் வெற்றியை ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உடமையாக, உரிமையாக மாற்றியதும் சம்பத்தின் சாதனைகள். அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ச்சியாக நடத்திய போராட்ட அழுத்தத்தால்தான் தமிழக அரசு அதைச் சட்ட வடிவம் ஆக்கியது. 19 ஆண்டுகளாக திரை போர்த்திக்கொண்ட உத்தபுரம் தீண்டாமைச் சுவரைத் தகர்த்தது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அஸ்திவாரம் பாய்ச்சி இருந்த திருச்சி எடமலைப்பட்டி புதூர், கோவை பெரியார் நகர் தீண்டாமைச் சுவர்களை உடைத்தது, தமிழகம் முழுவதும் 17 கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தியது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களுக்குக் கிடைத்த பொருட்படுத்தத்தக்க வெற்றி. 1,845 கிராமங்களில் ஆய்வு நடத்தி, 83 வகையான தீண்டாமை வடிவங்களையும் 23 வகையான வன்கொடுமைகளையும் கண்டறிந்து வகைப்படுத்தி இருக்கிறார் சம்பத்! 

   இசைப் பயல்!
ளமை இசைத் தமிழன் ஜி.வி. பிரகாஷ்! 'ஆயிரத்தில் ஒருவன்’ படத் தின் 'தாய் தின்ற மண்ணே...’ இசை யில் விஜய் யேசுதாஸ் குரல் இழைந்த போது, ஈழத்தை நினைத்துத் தழுதழுத் தது தமிழகம். 'அங்காடித் தெரு’வின் 'உன் பேரைச் சொல்லும்போதே...’ பாடல் மென் சோகம் தடவிய மெலடி உணர்வுகளை உருக்கியது. அதே படத்தின் 'கதைகளைப் பேசும் விழி யருகே’ பாடல் இந்த வருடத்தின் காதல் தாலாட்டு. 'மதராசபட்டினம்’ படத்தின் 'பூக்கள் பூக்கும் தருணம்...’ பாடலுக்கு முன் உற்சாகமாக உதிக்கும் 'தானனோம்த்ததனா...’ ஹம்மிங்கில் பட்டாம்பூச்சி பறக்கவைத்தார் ஜி.வி. 'ஆடுகளம்’, 'சிந்துபாத்’, 'தெய்வ மகன்’ என்று ஜி.வி-யின் இசை கிராஃப் கியர் தட்டி இன்னும் உயரம் நோக்கிப் பயணிக்கிறது!

    சிரிப்பேன்டா!
'நண்பேன்டா’ நண்பன்! சின்னத் திரை டு வெள்ளித் திரைப் பயணத்தில், இந்த பல்லாவரம் பையனுக்கு இது பீக் பீரியட். காமெடியன் தோற்றமே இல்லாமல், 'சேட்டுப் பையன்’ தோற்றத்தில், சந்தானத்தின் 'ஆயா, பாயா’ அதிர் வேட்டுகள் சின்னத் திரையைத் தொடர்ந்து, மல்ட்டிப்ளெக்ஸ்களை யும் அதிரவைத்தன. சந்தானத்தை ஹீரோவின் 'நண்பேன்டா’வாகக் கமிட் செய்த பிறகு, ஹீரோக்களை கமிட் செய்யும் காலம் இது. ஹீரோ ஆசையை உதறி, காமெடி பஜாரை லீஸுக்கு எடுத்தது புத்திசாலித் தனம். நகரத்தின் மிடில் கிளாஸ் இளைஞர்களை சினிமாவுக்குள் பிரதிபலிக்கும் சந்தானத்துக்கு வந்தனம்!

விகடன் டீம்

No comments:

Post a Comment