Saturday, June 18, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் !

பிரபல ரஷ்ய எழுத்தாளர், ஆண்டன் செகாவ். ரஷ்யாவில் ஒரு ஸ்டார் அந்தஸ்துடன் வாழ்ந்தவர். அவரைத் திருமணம் செய்து கொள்ள எத்தனையோ அழகான பெண்கள் ஏங்கினார்கள். அதையெல்லாம் அசட்டை செய்த செகாவ், தானுண்டு தன் எழுத்துண்டு என்று பல காலம் பிரம்மச்சாரியாகவே இருந்தார். ஆனால், அவருக்கும் ஒரு நாள் காதல் வந்தது. அந்த இளம் பெண் ணுக்கு... செகாவ் தன்னைக் காதலிப்பதில் சொல்லொண்ணா மகிழ்ச்சி. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
 
 
ஆனால், திருமணத்துக்கு வினோதமான கண்டிஷன்களைப் போட்டார் செகாவ். திருமணத்துக்கு பின் ஒரே ஊரில், ஒரே வீட்டில் வசிக்கக்கூடாது... மனைவி வேறொரு ஊருக்குச் சென்றுவிட வேண்டும்; அவ்வப்போதுதான் ஒருவரை ஒருவர் சந்தித்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும்; ஒரு சில நாட்களுக்குள் இருவரும் தத்தம் இல்லங்களுக்குத் திரும்பிவிட வேண்டும்.
இந்த நிபந்தனைகள் மிக வினோதமானவைகளாக இருந்தாலும், செகாவின் மீதுள்ள காதலால் அதற்கு ஒப்புக் கொண்டாள் அப்பெண். அந்த மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் நீடித்தது.
இதில் இருந்து தெரியும் உண்மை என்ன?
பிரிவு என்பது காதலை அதிகரிக்கும், பிணக்குகளைத் தீர்த்து வைத்து காதலர்களுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். 'உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்’, 'பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...’ என்பதெல்லாம் தமிழில் ஹிட் பாடல்கள்.
செகாவ் அளவுக்கு நம்மூரில் பிரிந்திருந்து வாழ்க்கை நடத்துவது சாத்தியமில்லை என்றாலும் சின்னச் சின்னப் பிரிவுகள், ஊடல்கள், சண்டைகள் கணவன் - மனைவிக்கிடையேயான அன்பை அதிகரிக்கவே செய்யும்.
பிரபுவும், சாருலதாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். திரு0மணத்துக்கு முன் தத்தமது வீடுகளில் காலையில் பெட்காபி முதல் இரவு படுக்கை வரை எல்லாமே அவர்களுக்கு ரெடியாக இருக்கும். அதனால், எந்த வேலையும், பொறுப்பும் அவர்களுக்குப் பழக்கமில்லை. ஆனால், திருமணம் என்கிற தனிக்குடித்தன கூட்டுக்கு வந்தவர்கள்... சமையல், காய்கறி, மளிகை, கரன்ட் பில் என்று தங்கள் கடமைகளைச் செய்ய முடியாமல் திணறிப் போனார்கள். 'இந்த வேலையை நான்தான் செய்யணுமா? நீ செய்யக் கூடாதா?’ என்பதில் ஆரம்பித்து தினமும் தகராறுதான். அவர்களின் வாழ்க்கையில் காதலும், கவர்ச்சியும் இருந்தாலும், அதையெல்லாம் அவர்களின் சண்டைகள் ஓவர்டேக் செய்தன. ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் வாழ ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில், 'இனி... நமக்குள் சரிப்படாது, விவாகரத்து ஒன்றுதான் வழி’ என்று முடிவு செய்து கோர்ட்டுக்கு சென்றனர். முதலில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அடுத்து, 'சமாதானம் செய்துகொள்ள மேலும் ஆறு மாதங்கள் அவகாசம். அப்போதும் சமாதானம் ஆகவில்லை என்றால் விவாகரத்து வழக்கை ஆரம்பிக்கலாம்' என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தது கோர்ட். பிரபுவும், சாருவும் தத்தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சென்றிருக்கும். தன் அப்பா, அம்மாவுக்கு இடையில் சிறுசிறு சண்டைகள் எழுந்தாலும், அவை சீக்கிரமே அடங்கி இருவரும் சிரித்துப் பேசுவதைப் பார்த்தபோது, சாருவுக்கு வாழ்க்கையின் ருசி புரிந்தது. தன் தங்கையும், தங்கையின் கணவரும் வீட்டுக்கு ஜோடியாக வந்து போவதைப் பார்க்கும்போதெல்லாம், ஏக்கமாக உணர்ந்தான் பிரபு. 'திருமணமாகி பத்தே மாசத்துல இவ பிறந்துட்டா... ஃபர்ஸ்ட் வெடிங் ஆனிவர்ஸரியை குழந்தையோட கொண்டாடப் போறோம்’ என்று வெட்கமும், மகிழ்ச்சியும் வழிய தன் தோழி சொன்னதைக் கேட்ட தருணத்திலேயே, விட்ட இடத்தில் இருந்து பிரபுவுடன் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் போலிருந்தது சாருவுக்கு.
ஒருவரை ஒருவர் அத்தனை மிஸ் செய்வதை இருவருமே உணர்ந்தார்கள். தயக்கம், ஈகோ எல்லாத்தையும் வீசி எறிந்துவிட்டு, பிரபுதான் முதல் எஸ்.எம்.எஸ். கொடுத்தான். 'உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது... கடற்கரையில் சந்திக்கலாமா?’ அவ்வளவுதான்... சாரு விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள். அக்கம் பக்கம் மறந்து அவர்கள் அழுகையோடு கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டதைப் பார்த்தவர்கள், 'இந்த லவ்வர்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா...’ என்று முணங்கிச் சென்றார்கள்; சாருவும், பிரபுவும் சத்தமாகச் சிரித்துக் கொண்டார்கள்.
கணவன் - மனைவிக்கு இடையே சின்னச் சின்னப் பிரிவுகள் தேவை. அவை அன்பை வளர்க்கும். அதேநேரத்தில் இதில் ஒரு சிறிய அபாயமும் இருக்கிறது. நீண்ட நாள் பிரிவுகளின்போது சரிவர கம்யூனிகேஷனோ, டெடிகேஷனோ இல்லாவிட்டால்... அது நிரந்தரப் பிரிவுக்கோ அல்லது வேறு விதமான புதிய தொடர்புகளுக்கோ வழி ஏற்படுத்திவிடும். இதை 'அவுட் ஆஃப் டச்... அவுட் ஆஃப் மைண்ட்' (Out of touch, Out of mind) என்பார்கள். அந்த ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வது அவர்களின் எமோஷனல் பிணைப்புகளில்தான் இருக்கிறது!
சொல்ல மறந்துவிட்டேன்... இப்போது பிரபு-சாருவுக்கு இரண்டு குழந்தைகள். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சாரு, அம்மா வீட்டுக்குச் சென்றுவிட... 'எப்போடா லீவ் முடியும்..?’ என்று ஏங்கிக் கிடப்பான் பிரபு. அங்கு சாருவையும் வாட்டும் பிரிவுத் துயர். விடுமுறை முடிந்து வீடு திரும்பும் நாளில் குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட் வாங்கி வைத்திருப்பான் பிரபு. சாருவுக்கு..?! அவளை எவ்வளவு மிஸ் பண்ணினான் என்பதை அவள் கண்கள் பார்த்துச் சொல்வான். இந்த நாட்களில் அவளுக்காக தான் சேமித்து வைத்திருந்த அன்பையும், காதலையும் திகட்டத் திகட்டக் கொடுத்து, பெறுவான்!
சில நாட்களுக்கு முன்பு 'அபவுட் ஷ்மெட்’ (About Schmidt) என்று ஒரு படம் பார்த்தேன். ஜாக் நிக்கல்சன் என்கிற அற்புதமான நடிகன் நடித்த படம். ஜாக், தன் மனைவியின் உணர்வுகளைப் பற்றி என்றுமே கவலைப்படாத மனிதன். அவளோ ஒரு நல்ல மனைவியாக அவனுடைய தேவைகளை சரிவர பார்த்துக் கொள்பவளாக இருந்தாள். திடீரென்று ஒருநாள் அவள் இறந்து போகிறாள். அப்போதுதான் அவளின் அன்பு அவனுக்குப் புரிகிறது. மனைவியை வாழ்க்கை முழுக்கப் புறக்கணித்த குற்ற உணர்வு அவனை ஓசையில்லாமல் உலுக்குகிறது. படத்தின் கடைசி காட்சி கவிதை போல் என் மனதில் நிலைத்து விட்டது.
நட்சத்திரங்கள் மின்னும் வானத்தின் கீழ், காரின் பேனட் டில் மேல் அமர்ந்து அந்த நட்சத்திரங்களுடன் ஜாக் பேசு கிறான்... 'அன்பான மனைவியே... இன்று எனக்கு யாருமில்லை. நீ இல்லாத தனிமை என்னைக் கொல்கிறது. அந்த நட்சத்திரங்களில் ஒன்றாக நீ இருப்பாய் என்று தோன்றுகிறது. உன்னைச் சரியாகக் கவனிக்காததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்... அன்பு மனைவியே..!’ என்று சொல்லி கண்கலங்குவான் ஜாக்!

No comments:

Post a Comment