Tuesday, June 21, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் ! 'காதல் தோல்விக்கு மருந்து இன்னொரு காதல் !

காதலில் வெற்றிகரமாக இணைந்துவிட்ட ஜோடிகளுக்கு மட்டுமல்ல, காதல் தோல்வியால் துவண்டு விடும் மனிதர்களுக்கும், 'ரொமான்ஸ் ரகசியங்கள்' முக்கியமாகத் தேவைப்படுகின்றன.
சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் சுவர்ணரேகா-விஷால். இரண்டு ஆண்டுகளாக தீவிரமான காதல் அவர்களுக்குள். கை நிறைய சம்பளம் வாங்கியவர்கள், எதிர்கால வாழ்க்கையை திட்டமிட ஆரம்பித்தார்கள்... காதல் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில்!
ஆனால், ஜாதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி இருவரின் குடும்ப உறவுகளும் பயமுறுத்தவே, வேறு வழியின்றிக் கண்ணீருடன் பிரிந்தார்கள். விஷாலுக்கு அவசரமாக உறவுக்குள்ளேயே ஒரு பெண்ணுடன் திருமணமானது. புது மனைவியுடன் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.
சுவர்ணரேகா...? அதுதான் பரிதாபத்திலும் பரிதாபம். இரண்டு முறை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டார். மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டவரை, கவுன்சிலிங்குக்காக கொண்டு சென்றனர். சரியான மருந்துகளோடு, முக்கியமான ஒரு மருந்தையும் தன் அறிவுரையாகச் சொன்னார் மனநல மருத்துவர். காதலில் தோல்வியுற்ற எல்லோருக்குமே பொருந்தும் அந்த அற்புத அறிவுரை-
-'காதல் தோல்விக்கு மருந்து, இன்னொரு காதல்தான்'!
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற காதல் காவியம் 'ரோமியோ ஜூலியட்’. காதல் தோல்வியில் துவண்டிருக்கும்போதுதான் ஜூலியட்டை சந்தித்துக் காதல் வயப்படுவான் ரோமியோ.  மன வருத்தத்தில் வாழும் எத்தனையோ கோடானு கோடி மக்களுக்கு, காதல்தான் பெரும் மருந்தாகப் பயன்பட்டு, அவர்களைப் புதிய மனிதர்களாக மாற்றுகிறது என்பதற்கு இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.
மரியா ஸ்கோலோடோவ்ஸ்கா, போலந்து நாட்டின் தலைநகர் வார்ஸாவில் 1867-ம் ஆண்டு பிறந்தார். படிப்பில் வெகு கெட்டியாகத் திகழ்ந்த மரியாவுக்கு பன்னிரண்டு வயது இருக்குபோது, டி.பி. நோயினால் அம்மா இறந்து போக, மனதளவில் மிகவும் பாதிப்புக்குள்ளானார் மரியா.
அப்போது ஐரோப்பியாவில் நிகழ்ந்து வந்த புரட்சிகளின் விளைவாக மரியாவின் குடும்பச் சொத்துக்கள் எல்லாம் சின்னாபின்னமாகி, வாழ்வதற்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. மரியாவின் மூத்த சகோதரி ஃபிரான்ஸுக்குச் சென்று படிக்க விரும்பினார். 'சகோதரியின் படிப்புச் செலவுகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மரியா வேலைக்குப் போய் பணம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். அதன்பிறகு, மரியாவின் படிப்புச் செலவுகளை சகோதரி பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று ஒப்பந்தம் போட்டனர்.
தன் படிப்பை நிறுத்திய மரியா... உறவினரின் வீட்டிலேயே வேலை செய்து சம்பாதித்த பணத்தை சகோதரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். இதற்கு நடுவில் அந்த வீட்டின் இளைஞரான கணிதப் பேராசிரியர் சோராஸ்கியுடன் காதல் ஏற்பட, கடுமையாக எதிர்த்த சோராஸ்கியின் வீட்டினர், மரியாவை வேலையை விட்டும் நிறுத்தினர்.
படிக்கும்போதே பாரீஸில் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்து கொண்ட சகோதரி, பாரீஸ் வந்து விடும்படி எத்தனையோ முறை அழைத்தும் மரியா போகவில்லை. சோராஸ்கியுடனான காதல் எப்படியாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவருக்கு, 'இது சரிப்பட்டு வராது' என்று சோராஸ்கியே சொன்னது... மனம் வெறுத்துப் போக வைத்தது!
மனக்காயம்பட்ட மரியாவுக்கு அப்போது ஆறுதலாக இருந்த ஒரே விஷயம்... படிப்புதான்.இயற்பியல் மற்றும் வேதியியல் துறை ஆராய்ச்சிகளில் தீவிரமாக இறங்கினார். அதில் அவர் பிரகாசித்த செய்தியை அறிந்த சகோதரி, பாரீஸுக்கு வந்து ஆராய்ச்சிகளைத் தொடருமாறு வற்புறுத்தவே, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பு மற்றும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
அங்கேதான் அவருடைய திறமைகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டன. அதே சமயம், மரியாவின் மனதில் மகிழ்ச்சி இல்லை. சொந்த நாடான போலந்தையே மனம் சுற்றிச்சுற்றி வந்தது. அந்தச் சமயத்தில்தான் மரியாவின் வாழ்க்கையில் நுழைந்தார் பியரி கியூரி. மரியாவின் பேராசிரியராக இருந்த அவர், 'மேக்னடிஸம்’ எனப்படும் காந்தத் துறையில் மரியாவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினார். இருவரும் சேர்ந்து இரும்புப் பொருட்கள் வெளிப்படுத்தும் காந்த சக்திகள் குறித்தான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்படியே இருவருக்கும் நெருக்கம் உண்டாகி, அதுவே காதலானது. சீக்கிரமே மிஸஸ் கியூரி ஆனார் மரியா. ஆம். அவர்தான் உலகப் புகழ்பெற்ற மேடம் கியூரி!
திருமணத்துக்குப் பிறகு, யுரேனிய உப்புகள் வெளிப்படுத்தும் கதிர்களின் மீது மரியாவின் கவனம் திரும்பியது. பிரத்யேக ஆராய்ச்சி முறைகளின் மூலம் ரேடியோ ஆக்டிவ் கதிர்கள் பற்றியும் தோரியம் வெளிப்படுத்தும் கதிர்கள் பற்றியும் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தார். தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அவருடன் சேர்ந்து கொண்டார் கணவர். இருவரும் சேர்ந்து புகழ்பெற்ற கண்டுபிடிப்பான 'ரேடியத்தை’ உலகத்துக்கு அறிமுகப்படுத் தினார்கள். அந்த ரேடியம்தான், புற்று நோய் சிகிச்சை உள்பட பல விஷயங் களுக்குப் பயன்படும் மருந்தானது.
மரியாவின் வேதியியல் மற்றும் இயற்பியல் துறை சாதனைகளுக்காக அவருக்கு இரண்டு முறை நோபல் பரிசுகள் கொடுக்கப்பட்டன. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும் அவர்தான்! இளம் வயதில் காதல் தோல்வி, பிற்பகுதியில் உலக சாதனை! இதுதான் மரியாவின் மதிப்புமிக்க உதாரண வரலாறு!
கடைசியாக ஒரு நல்ல விஷயம், காதல் தோல்வியால் மனம் துவண்டு வாழ்க்கையே இருண்டு போனதாக எண்ணி கூட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த சுவர்ணரேகா, இன்று புதிய பெண்ணாக மாறி புத்துணர்வு பெற்றிருக்கிறார். வாழ்க்கை ஒரு வசந்தமாகவே அவருக்கு மாறியிருக்கிறது. காரணம், அவர் ராம்பிரசாத் என்பவர் மீது கொண்டிருக்கும் புதிய காதல்! 
'ரொமான்ஸ்’ என்கிற அற்புதமான மருந்து அவரைக் குணமாக்கி விட்டது!
- நெருக்கம் வளரும்...

No comments:

Post a Comment